என் மலர்tooltip icon

    உலகம்

    • பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
    • மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

    மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்குதல் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெரும்பாலான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கனமழையால் 11 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    அண்மையில் பெய்த கனமழையால் உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • குட்ஸ் படைப்பிரிவினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
    • இவர்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிரியாவில் ரஷியாவின் ஆதரவு பெற்றவர்களும் ஆவார்கள்.

    சிரியாவில் குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சுக்னா பகுதியாகும். இது ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும்.

    குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த இவர்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சண்டையிடுபவர்களும் ஆவார்கள்.

    இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் இந்த தாக்குதலுக்குப்பின் ஐஎஸ் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    13 வருட உள்நாட்டு சண்டையில் குட்ஸ் படைப்பிரிவினர் சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவாக சண்டையிட்டு வருகிறது. இந்த உள்நாட்டு சண்டையில் சுமார் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டு சண்டைக்கு முன்னதாக இருந்த 23 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

    குட்ஸ் படைப்பிரிவு பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிஹாத் குரூப்பில் உள்ளது. அதில் இருந்து சிரியாவில் செயல்பட்டு வரும் குட்ஸ் படைப்பரிவு மாறுபட்டது.

    2019-ல் ஐஎஸ் படைகள் தோற்கப்பட்ட போதிலும், ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் சிரிய அரசாங்க படைகள், அமெரிக்க ஆதரவு படைகள், குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயக படைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது.

    • ஈரான் விமானப்படை தளம் மற்றும் அணுசக்தி தளம் அருகே போர் விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.
    • சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு சிஸ்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் சேதம் அடைந்தது. இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்த ஈரான், கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியது. ஆனால் அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து தாக்குதலையும் முறியடித்தது.

    இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இஸ்ரேல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன.

    இந்த நிலையில் சிரியாவில் உள்ள வான்பாதுகாப்பு சிஸ்டத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சேதம் அடைந்ததாக சிரியாவின் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஈரானின் முக்கியமான விமானப்படை தளம் மற்றும் அணுசக்தி தளம் அருகே அதிக சத்தத்துடன் போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் காணப்பட்டதாகவும், டிரோன்கள் பறந்ததாகவும் தகவல் வெளியானது.

    இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடம் கிழக்கு ஈரானில் இருந்து சிரியாவிற்கு வடக்குப் பகுதியில் 1500 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்பஹான் இடமாகும்.

    வெள்ளிக்கிழமை காலையில் ஈரான் வான் பாதுகாப்பு பேட்டரிகளை ஏவியது. போர் விமானங்கள் பறந்தது எனக் கூறப்பட்டதால் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

    இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கருத்து கூற மறுத்துவிட்டார்.

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
    • வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதி உள்பட 12 பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனாலும் அதை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தடுத்தது.

    ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து தாக்குதலை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது.

    மத்திய ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

    ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும் ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்தின. இஸ்ரேல் தாக்குதலையடுத்து ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு உள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    முக்கிய நகரங்களான இஸ்பஹான், ஷிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தாக்கு தலையடுத்து பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

    ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்பஹானில் ஒரு பெரிய ராணுவ விமான தளம், யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப்பகுதியான நடான்ஸ் நகரம் உள்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் உள்ளன.

    இதற்கிடையே இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்பஹானில் மூன்று டிரோன்கள் வாகனத்தில் காணப்பட்டதாகவும், அவற்றை நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரித்திருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

    • பைசாகி திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2,400 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
    • ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது என்றார் மரியம் நவாஸ்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 2,400 சீக்கியர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாகிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் பங்கேற்றார். அப்போது சீக்கிய யாத்திரிகர்கள் குழுவைச் சந்தித்தார். அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த யாத்திரிகர்கள்.

    அப்போது பேசிய மரியம் நவாஸ், ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது. அவர்களுக்காக இதயத்தைத் திறக்கவேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பாக, தனது தந்தை நவாஸ் ஷெரிப் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

    • இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும்
    • இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது

    சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai' தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான்.

    இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.

    "எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது" என்று நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.

    2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும்.

    உக்ரைன் மீது ரஷியா மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனில் உள்ள கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீதான தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

    நேற்று 8 மாடி கட்டடம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இத்தாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது உக்ரைன்- ரஷியா போர், இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஈரான் தாக்குதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் ஜி7 நாடுகளில் வெறியுறவுத்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும். ரஷியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பேட்ரியாட் ஏர் பாதுகாப்பு ஏவுகனை சிஸ்டம்ஸ் இல்லை என்றால், உக்ரைனில் உள்ள மின்சார் சிஸ்டங்கள் அழிக்கப்படும். எந்தவொரு நாடும் வீடுகளில், தொழிற்சாலைகளில், போரின் முன்னணி களத்தில் மின்சாரம் இல்லாமல் சண்டையிட முடியாது" என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனியோ டஜானி "உக்ரைன் தோல்வியடைந்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் புதின் அமரமாட்டார்" என்றார். மேலும், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைக்கு அழைப்பு விடுத்தார்.

    • ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
    • வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    சீனாவின் நான்ஜிங் வடக்கு ரெயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மரக்கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு நவீனத்துவம் கலந்து இந்த ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள இந்த ரெயில் நிலையம் சீன கட்டிடக்கலையின் தனித்துவத்தை பின்பற்றும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக சிலர் பதிவிட்டனர். அதே நேரம் இந்த ரெயில் நிலையத்தின் தோற்றம் ராட்சத சானிட்டரி பேட் போல தெரிகிறது. இந்த வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் எல்லையையொட்டி உள்ள லெபனான் நாட்டின் ஐடா ஆஷ் ஷாப் கிராமத்தில் வளாகம் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    • தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஆனிஆஸ்போர்ன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், 40 நாட்களாக பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

    உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த 'மோமோ டயட்' தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.


    ×