என் மலர்tooltip icon

    உலகம்

    • இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படுகிறது.
    • அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரமாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.

    ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களைக் கட்டமைக்க உள்ளது என இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.

    இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும், குடிமக்களின் நன்மைக்காகவும் என தெரிவித்துள்ளது.

    ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின்மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில் ராணுவ வீரர்கள், ஈரான் ஆதரவு பெற்ற துணைராணுவப் படையினர் தங்கி உள்ளனர். இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதனால் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் இருந்து வருகிறது.
    • வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா, சீனா என்னும் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது.

    தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீனக்கடல் பகுதியில் சீன ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் சீனாவின் ரஷிய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இன்னொரு புறம் இரு தரப்பு வர்த்தக மோதலும் இருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்லும் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், அங்கு வெளியுறவு மந்திரி வாங் யீ உள்ளிட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் எனவும் தகவல் வெளியானது.

    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது
    • கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார்

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதன் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) ஒலிம்பிக் போட்டியக்கு தகுதி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்நிலையில், கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்றார் வினேஷ் போகத்.

    இதன் மூலம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 33வது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து அன்திம் பன்ஹால்-க்கு அடுத்தபடியாக வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

    • ரஃபா நகரில் காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • இந்த நகரில் மீது தாக்குதல் நடத்தினால்தான் தங்களது முழு நோக்கம் நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் வடக்குப்பகுதியை ஏறக்குறைய உருக்குலைத்துவிட்டது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. தங்களது இலக்கு முடிந்து விட்டதால் இந்த நகரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போரின் நோக்கம் நிறைவேற ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நகரில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவில் உள்ள அபு யூசெப் அல்-நஜ்ஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கட்டிப்பிடித்து உறவினர்கள் கதறியது நெஞ்சை பிளப்பதுபோல் இருந்தது.

    காசா எகிப்பு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் மொத்த மக்களை தொகையான 2.3 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் ரஃபாவில் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மற்ற பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளனர்.

    • மர்ம வாலிபர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான குற்ற வழக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது ஒரு மர்ம வாலிபர் அங்கு வந்தார். அவர் துண்டு பிரசுரங்கள் வீசினார். திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் அவர் உயிரிழந்தார்.

    விசாரணையில் அவரது பெயர் மேக்ஸ் அஸ்ஸரெஸ்லா (வயது 37) என்பது தெரியவந்தது. புளோரிடாவில் உள்ள செயிண்ட் நகரை சேர்ந்தவர். கடந்த வாரம் தான் அவர் அங்கிருந்து நியூயார்க் வந்தார். எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேக்ஸ் அஸ்ஸரெஸ்லா தீக்குளித்தபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது.
    • வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சியோல்:

    வடகொரியா- தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இரு நாட்டு படைகளும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிடிக்ஸ் ஏவுகணை, நீருக்கடியில் அணு ஆயுத சோதனை என பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    • மனைவி புஷ்ராபீவிக்கு ஜெயிலில் வழங்கப்படும் உணவில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்து கொடுக்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பிரதமராக இருந்தார். அப்போது வெளிநாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் அளித்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பல்வேறு ஊழல் புகார்களும் எழுந்தது.

    இது தொடர்பாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பாகிஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தனது மனைவிக்கு ஜெயிலில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாக இம்ரான்கான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். என் மனைவி ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முஷிர்தான் காரணம் என்றும் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் அவரை விட மாட்டேன், அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவரது சட்ட விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்துவேன் என்றும் இம்ரான் கான் கூறினர்.

    தற்போது மீண்டும் அவர் புதிய குற்றச்சாட்டினை சுமத்தி உள்ளார்.

    49 வயதாகும் தனது மனைவி புஷ்ராபீவிக்கு ஜெயிலில் வழங்கப்படும் உணவில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்து கொடுக்கப்படுகிறது.

    இதனால் அவர் நெஞ்சு எரிச்சல், தொண்டை வலி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது. ஆனால் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருப்பதில் ஜெயில் அதிகாரிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே தனியார் மருத்துவமனை மூலம் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என இம்ரான்கான் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராபீவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவால் இருவருக்கும் விரைவில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.

    • பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
    • நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இரண்டு நாள் பயணமாக நாளை(21-ந்தேதி) இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி டெஸ்லா நிறுவன கூட்டத்தில் எலான் மஸ்க் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் அவரது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் எக்ஸ் தள பக்கத்தில் கூறும்போது, துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இருப்பதால் இந்திய பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
    • பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.

    உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் வயதானாலும் சிலருக்கு உடல் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் மெக்சிகன் பகுதியை சேர்ந்த 61 வயதான டேவ் பாஸ்கோ என்ற முதியவர் தனக்கு 38 வயது இளைஞருக்கான உடல் அமைப்புடன் இளமையாக தோன்றுவதாக கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.

    அவர் கூறுகையில், கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார். மேலும், என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. அதனால் நான் அதை திட்டமிடுகிறேன். மற்றவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை நான் இழக்க மாட்டேன் என்றார்.

    ஆர்கானிக் உணவு வகைகள் மற்றும் மாட்டிறைச்சி, கோழி, மீன் உணவு வகைகளும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுவதாக கூறும் டேவ் பாஸ்கோ பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

    உலகம் முழுவதுமே ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் புளோரிடாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதிக்கு போன் பில் கட்டணமாக ரூ.12 லட்சம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ரெனேரேமண்ட் என்ற 71 வயதான முதியவர் தனது மனைவி லின்டாவுடன் (வயது 65) சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவர் வெளிநாட்டில் பயன்படுத்திய மொபைல் டேட்டாவுக்கு கட்டணமாக 1,43,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம்) வந்துள்ளது.

    அவர் 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார். அவர் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார். எனினும் அதிகாரிகள் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் வயதான தம்பதியினர் சட்ட உதவியை நாடிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு உரிய விளக்கம் அளித்துள்ளது.

    • டாக்டர்கள் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என சமிஞ்சையில் கூறினர்.
    • கணவருக்காக போராடி கேட்கும் திறனை பெற்றுத்தந்த தஸ்லிபானுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    அபுதாபி:

    அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் முகம்மது ஹுசைன் (வயது 52). இவரது மனைவி தஸ்லிபானு. இவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் அபுதாபியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 வயதில் இருந்து செவித்திறனை இழந்த முகம்மது ஹுசைன் அபுதாபியில் டெய்லராகவும், சலவை தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவரது மனைவி தஸ்லிபானுவுக்கு மருத்துவ ஊழியராக வேலை கிடைத்தது. இதனால் அவர்களின் கஷ்டநிலை மாறியது. குடும்பத்தை தஸ்லிபானு முழுவதுமாக கவனித்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் கணவருக்கு மீண்டும் காது கேட்க வைக்க வேண்டும் என அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

    மருத்துவ ஊழியரான அவர், பைலேட்டரல் காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறனை கொண்டு வர விரும்பினார். இந்த அறுவை சிகிச்சை உட்காதில் (காக்கிலியா) சிறு மின்னணு உபகரணம் பொருத்தப்பட்டு செய்யப்படுகிறது. அதாவது காதுகளின் உட்புறத்தில் ஒரு முதுகெலும்பு வடிவ எலும்பு செய்யும் வேலையை இந்த சாதனம் செய்கிறது. குறிப்பாக இதில் வெளியில் கேட்கும் ஒலி மின் தூண்டுதலாக மாற்றப்படுகிறது. பிறகு அந்த தூண்டுதல் நரம்பினால் கடத்தப்பட்டு மூளைக்கு எடுத்து செல்லப்பட்டு காது கேட்கிறது. இதில் காதுகளின் வெளிப்புறத்தில் ஒலியை வாங்கும் ரிசீவர் மற்றும் டிரான்ஸ் மீட்டர், மைக்ரோபோன் ஆகியவை பொருத்தப்படுகிறது.

    இதற்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது காதுக்கு பின்னால் உள்ள எலும்பில் சிறிய துளை ஏற்படுத்தப்பட்டு அதில் உபகரணம் தோலின் உள்ளே பொருத்தப்படுகிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை அபுதாபி தனியார் மருத்துவமனையில் தஸ்லிபானு தனது கணவருக்கு ஏற்பாடு செய்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்த பிறகு டாக்டர்கள் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என சமிஞ்சையில் கூறினர்.


    அதனை அடுத்து தனது செல்லப்பெயரான 'பானு' என அவர் உச்சரித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சத்தத்தை கேட்டு அதுவும் தனது மனைவியின் பெயரை கேட்ட முகம்மது ஹுசைன் ஆனந்த கண்ணீர் வடித்து திரும்பி பார்த்தார். இதை கண்ட தஸ்லிபானுவும் ஆனந்த கண்ணீர் வடித்தார். கணவருக்காக போராடி கேட்கும் திறனை பெற்றுத்தந்த தஸ்லிபானுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • இந்த நாட்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அபுதாபி:

    அமீரகத்தில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. கடந்த செவ்வாய்கிழமை பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதில் கடந்த 16-ந்தேதி ராசல் கைமாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் பயணம் செய்த அமீரகத்தை சேர்ந்த முதியவர் பலியானார்.

    அதனை தொடர்ந்து துபாயில் 47 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் மழையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக பலியானார். தொடர்ந்து சார்ஜாவில் மழைவெள்ளத்தில் காரில் சிக்கிக்கொண்ட 2 பிலிப்பைன்ஸ் நாட்டு ஊழியர்கள் மூச்சடைத்து பலியானார்கள். இதனை அந்நாட்டு துணைத்தூதரகம் உறுதி செய்துள்ளது.

    மேலும் துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) லேசான பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படும். அடுத்த வார தொடக்கத்தில் வரும் 22-ந் தேதி நாடு முழுவதும் பரவலாக லேசான மழை காணப்படும். அதற்கு அடுத்த நாள் 23-ந் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப்பொழிவுக்கு பிறகு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ×