என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் 'என் கனவு-என் எதிர்காலம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

    தமிழகம் முழுவதும் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது.

    மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் விழா 'என் கனவு-என் எதிர்காலம்' இணையதள தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    திண்டிவனம்-செஞ்சி சாலையில் கொள்ளார் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட பயன்களையும், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களையும் வழங்கி என் எனவு-என் எதிர்காலம் என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

    விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நாளை காலை சாலை மார்க்கமாக புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்த வரவேற்பை தொடர்ந்து திண்டிவனம் தீர்த்த குளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தி திடல் வரை ரோடு ஷோ மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியை சென்றடைகிறார்.

    அரசு விழா முடிவடைந்த பின்னர் சாலை மார்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதலமைச்சர் புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதலமைச்சர் வரும் வழித்தட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
    • தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த

    சாமானிய மனிதன்!

    தலைமுறைகள் தாண்டி,

    எல்லோரும் விரும்பி விளிக்கும்

    "அண்ணா"!

    "தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"

    என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...

    அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.

    அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

    #அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!

    அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!

    #மக்களைக்_காப்போம்

    #தமிழகத்தை_மீட்போம்

    அண்ணா நாமம் வாழ்க! என்று கூறியுள்ளார். 

    • ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் முறையாக மேற்கொள்ளப்படும்.
    • ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் நிருபர்களுக்கு விளக்கினார். பின்னர் ரெயில்வே அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது கூறியதாவது:-

    கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர், மகாபலிபுரம், கடலூர் ஆகிய ரெயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் முறையாக மேற்கொள்ளப்படும்.

    சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ரெயில் நிலைய பணிகளில் ரெயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளன. ஆனாலும் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கான செல்லக்கூடிய அணுகு சாலை, மேம்பால நடை பாதைகள், உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் முடிக்க வேண்டி உள்ளது.

    அந்தப் பணி நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் தொடங்கி வைக்கப்படும். மார்ச் மாதத்துக்குள் பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

    வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் இந்த சேவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். 

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கம் விலை உயர்ந்தநிலையில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ந்தேதி கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்தது.

    அதனையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி மேலும் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் சரிந்திருந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாத சூழலில், நேற்றும் இறங்குமுகத்தில் விலை பயணித்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை 3-வது நாளாக சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600 குறைந்தது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 850-ம், சவரனுக்கு ரூ.22 ஆயிரத்து 800-ம் சரிந்தது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை உயர்ந்தநிலையில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    2-2-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    1-2-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    31-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    30-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800

    29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    2-2-2026- ஒரு கிராம் ரூ.300

    1-2-2026- ஒரு கிராம் ரூ.320

    31-1-2026- ஒரு கிராம் ரூ.320

    30-1-2026- ஒரு கிராம் ரூ.405

    29-1-2026- ஒரு கிராம் ரூ.425

    • தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.
    • பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம்.

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.

    'மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்குச் சேவை செய்! அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு' என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை. பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம்.

    அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது.
    • கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார். பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.

    அமைதிப் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    • பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.
    • ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி செல்கிறது.

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப்பேரணி நடைபெற்றது.

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெறுகிறது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார். பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.

    • நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    திருமுல்லைவாயல்: வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
    • இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

    அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன்பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதில், அந்த பஸ்சில் பயணித்த 2 பெண்களிடம் டிக்கெட் இல்லை. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள், 2 பெண்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள் கூறும்போது, ''கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது 3 பேருக்கும் சேர்த்து ஒரு டிக்கெட், 6 பேருக்கு சேர்த்து ஒரு டிக்கெட் என மொத்தமாக கொடுக்கிறார்கள். ஆனால் டிக்கெட் வாங்கிய நபர் அவரது நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டால் மற்றவர்களுக்கு டிக்கெட் இருக்காது.

    இதுபோன்ற குளறுபடியான சம்பவத்தினாலேயே அந்த 2 பெண் பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளித்தும் அபராதம் விதித்துள்ளனர்'' என்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எந்த தகவலும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும். கண்டக்டர்களும் தனித்தனியாக அனைவருக்கும் டிக்கெட் கொடுத்திருக்க வேண்டும்.

    எனினும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அபராதம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்.
    • அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

    பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

    பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!

    நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!

    அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

    மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!

    ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!

    • ஒரே நாளில் 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    கடந்த ஜனவரி மாதம் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக ஜன.9ம் தேதியில் மட்டும் 3.81 லட்சம் பேர் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2026 ஜனவரி மாதத்தில் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்

    சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 93,28,937 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக 09.01.2026 அன்று 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2026, ஜனவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 46,52,834 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 43,107 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,32,996 பயணிகள் (Single journey Paper QR /Token 19,60,685; Online QR – 1,26,665; Static QR 2,27,737; Whatsapp - 4,55,401; Paytm 3,35,852; ONDC – 10,38,782; PhonePe – 2,76,216; CMRL Mobile App 60,240; Chennai One App – 1,43,620; Event QR - 7,798) பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×