என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வேளச்சேரி- பரங்கிமலை, கிளாம்பாக்கம் ரெயில் நிலையங்கள்
- ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் முறையாக மேற்கொள்ளப்படும்.
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் நிருபர்களுக்கு விளக்கினார். பின்னர் ரெயில்வே அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது கூறியதாவது:-
கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர், மகாபலிபுரம், கடலூர் ஆகிய ரெயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் முறையாக மேற்கொள்ளப்படும்.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ரெயில் நிலைய பணிகளில் ரெயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளன. ஆனாலும் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கான செல்லக்கூடிய அணுகு சாலை, மேம்பால நடை பாதைகள், உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் முடிக்க வேண்டி உள்ளது.
அந்தப் பணி நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் தொடங்கி வைக்கப்படும். மார்ச் மாதத்துக்குள் பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் இந்த சேவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.






