என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டோனி தலைமையில் இந்தியா ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது.
    • டோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்து பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த டோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

    இந்நிலையில் விராட் கோலி, ரோகித், தாம் போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு டோனி முக்கிய காரணமாக இருந்ததாக ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    டோனியுடன் விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. ஏனெனில் அவர் உங்களை வளர அனுமதிப்பார். அவர் எப்பொழுதும் எங்களை சொந்த திட்டத்துடன் விளையாட அனுமதிப்பார். அவர் எப்போதும் எங்களுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்க மாட்டார்.

    குறிப்பாக 'நாளை நான் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டேன். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே உங்கள் அறைக்கு சென்று உங்களுடைய விளையாட்டை சிந்தித்து திட்டத்துடன் வாருங்கள். அது வேலை செய்யவில்லையென்றால் நான் உதவி செய்கிறேன்' என்று டோனி எங்களிடம் சொல்வார்.

    3 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் பல இளம் வீரர்களை வளர்த்து தனது மரபை விட்டு சென்றுள்ளார். தற்போதைய மகத்தான வீரர்களான விராட், ரோகித் போன்றவர்கள் கூட ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகத்தான எம்.எஸ். டோனி அவர்களை ஆதரித்தார். அந்த ஆதரவுடன் அவர்கள் 2012-க்குப்பின் இப்போது வரை அசத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.

    • விராட், ரோகித்துக்கு ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
    • இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை.

    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால் கம்பீரின் முடிவால் விராட் மற்றும் ரோகித் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர்.

    இந்நிலையில், இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்ததாக 2 - 3 மாதங்கள் கழித்து தான் விளையாட உள்ளது. இது நமக்கு அரிதானது. எனவே விராட், ரோகித் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதால் அனுபவ வீரர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்பது தெரிகிறது.

    ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப் பற்றி கம்பீர் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. விராட், ரோகித்திடம் சமமான உரிமையை பெறுவதற்கு கம்பீர் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அடுத்த தொடரில் விராட், ரோகித்தை விளையாட வைத்து விட்டு கம்பீர் இத்தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது இத்தொடரின் ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    வங்காளதேசத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

    இந்நிலையில் வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் மோர்டாசாவின் வீட்டுக்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த தீ வைப்பு சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3 சுற்றிலும் தோல்வி அடைந்தது.
    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் ஜோடி, சீன ஜோடியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றிலும் இந்தியா தோற்றது.

    இதையடுத்து சீனா இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    ஈட்டி எறிதல் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.

    • அரையிறுதியில் வினேஷ் போகத்- ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
    • அரையிறுதியில் கியுபா வீராங்கனையான யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வினேஷ் எதிர் கொள்கிறார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.

    இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்

    • பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம் பிடித்துள்ள்னர்.
    • ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய வீராங்கனைகள் உள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

    அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அதேபோல் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • மல்யுத்தத்தில் வினேஷ் போகத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார்.
    • இதில் வினேஷ் போகத் 2-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார்.

    இதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    யு சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படுகிறார்.
    • வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் நேராக இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    தற்போது 52 வயதில் இருக்கும் வினோத் காம்ப்ளி , கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது.

    இந்நிலையில் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் நேராக இல்லை.

    இந்த வீடியோ சிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி களத்தில் 120/8 என்று மடிய ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபட ஆட்டம் கைவிடப்பட்டது.

    அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியை யாரும் மறப்பதற்கில்லை. இந்தியா வெளியேறியது. அப்போது இவர் கேப்டன் அசாருதீனை அவரின் அறைக்குச் சென்று கடுமையாக வசையை பொழிந்ததாகவும் செய்திகள் உலாவின. அதன் பிறகே இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலக பிரசித்தி பெற வேண்டிய வீரரை அழித்து விட்டது.

    17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்கள் எடுத்துள்ளார். 

    • பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
    • முதல் முறையாக இந்த தொடரில் விளையாட உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா SA20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெறுகிறார். இவர் இந்த தொடரின் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கும் புதிய SA20 சீசனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன்பிறகு இவர் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    • போராட்டங்கள், வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. எனினும், இந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்காளதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்காளதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

    • நூலிழையில் 7 வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்.
    • மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    10 நாள் போட்டி முடிவில் இந்தியா 3 வெண்கல பதக்கமே பெற்றுள்ளது. கடந்த 28-ந் தேதி பெண்கள் 10 மீட்டர் ஏர்பிஸ்டலில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் பெற்று பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்தார். 30-ந் தேதி அவர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

    கடந்த 1-ந் தேதி ஸ்வப்னில் குசாலே பதக்கத்தை பெற்றார். ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் இந்த பதக்கம் கிடைத்தது. அதன் பிறகு பல போட்டிகளில் நெருங்கி வந்து இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை நழுவவிட்டது. மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நூலிழையில் 7 வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்.

    வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ்-அங்கீதா ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுதா வெண்கலத்தை நழுவ விட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

    3-வது பதக்கத்தை பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

    குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் (75 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ பிரிவு) கால் இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டார்.

    பேட்மின்டனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் அரை இறுதியில் தோற்றார். நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதிலும் தோற்று வெண்கலத்தை பெறும் வாய்ப்பை இழந்தார்.

    ஸ்கீட் கலப்பு அணிகள பிரிவில் மகேஸ்வரி சவுகான்-ஆனந்த் ஜித் சிங் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் மட்டுமே தற்போது எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

    இதற்கு முந்தைய போட்டிகளில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.

    அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    ×