என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியதாக ரிக்கி பாண்டிக் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 2 முறை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    46 வயதான ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும். தற்போதுள்ள அணியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

    20 ஓவர் போட்டியில் விளையாட கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்து கொள்வது கடினமானது. ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இல்லாததால் பந்து வீசவில்லை. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    தற்போது உள்ள 5 இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள். பிரித்வி ஷா, வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் எதிர்கால இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருப்பார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத காலத்தில் அவர்கள் முத்திரை பதிக்கலாம்.

    வெங்கடேஷ் அய்யரின் சிறப்பான ஆட்டத்துக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் என்னை ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு அணுகி இருந்தது.

    பயிற்சியாளர் பதவியில் 300 நாட்கள் வீரர்களுடன் செலவிட வேண்டும். அவ்வளவு நாட்கள் என்னால் இருக்க முடியாது என்பதால் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டேன்.

    ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. குடும்பத்தை தியாகம் செய்து பார்க்க வேண்டிய வேலை அதுவாகும். இதனால்தான் அவர் பொறுப்பேற்றது வியப்பை அளித்தது. அவரது குடும்ப விவரம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும்.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

    இந்திய வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து விளையாடும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த முறை போட்டியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களுக்கான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரு போட்டியில் 5 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க முடியும். தற்போது 3 வெளிநாட்டு வீரர்கள், ஒரு ஆசிய வீரர் என மொத்தம் 4 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

    இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணியும் முந்தைய வீரர்களில் பலரை கழற்றி விட்டதுடன் பல புதிய வரவுகளை சேர்த்து தங்களது வலிமையை அதிகரித்து இருக்கின்றன. சென்னையின் எப்.சி. அணி நடுகள வீரர் அனிருத் தபா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளராக பேசிதார் பாண்டோவிச் பொறுப்பேற்றுள்ளார். கோப்பையை வெல்லும் முனைப்பில் எல்லா அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியின் மூலம் தங்களது திறமையை பட்டை தீட்டி இருக்கின்றன.

    தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி ஐதராபாத்தை சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் இந்த போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும். அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா ரூ.1½ கோடி கிடைக்கும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3½ கோடி பரிசாக கிட்டும். லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியே கோப்பையையும் வென்றால் மொத்தம் ரூ.9½ கோடியை பரிசாக அள்ளும்.

    உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிஆட்டத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுயான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார்.

    1 மணி 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் கோன்டாவெய்ட்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

    வாகை சூடிய முகுருஜா மொத்தம் ரூ.11½ கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த கோன்டாவெய்டுக்கு ரூ.5½ கோடி கிடைத்தது. வெற்றிக்கு பிறகு 28 வயதான முகுருஜா கூறுகையில் ‘என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்’ என்றார்.

    வெற்றியின் மூலம் முகுருஜா தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், சபலென்கா (பெலாரஸ்) 2-வது இடத்திலும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். கோன்டாவெய்ட் ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இதன் இரட்டையர் பிரிவு இறுதிசுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-காத்ரினா சினியகோவா இணை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சூ வெய்ஸ் சீக் (சீன தைபே)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் காயம் அடைந்த சிட்சிபாசுக்கு (கிரீஸ்) பதிலாக இடம் பெற்ற இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி 6-1, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டிடம் தோல்வி அடைந்தார்.

    ‘ரெட்’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஹர்காக்சை (போலந்தை) வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்து அரைஇறுதியை உறுதி செய்தார். அவர் அரை இறுதியில் ‘நம்பர்ஒன்’ வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார்.
    சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு தலைவர் மீது பாலியல் புகார் கூறியபின் மாயமான டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் பெயரில் இ-மெயில் வெளிவந்துள்ளது. இதில் மகளிர் டென்னிஸ் சங்கம் சந்தேகம் எழுப்புகிறது.
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர், சீனாவின் பெங் சூவாய் (வயது 35).

    நம்பர்-1 முன்னாள் வீராங்கனையான இவர் 2013-ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம், 2014-ல் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை தைவானின் ஹசீ சூ வெய்யுடன் சேர்ந்து வென்றுள்ளார்.

    இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி பற்றி சமூக ஊடகம் ஒன்றில் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.

    அந்தப்புகாரில் அவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாங் கோலி அவரை தனது இல்லத்துக்கு அழைத்து தன்னுடன் டென்னிஸ் விளையாடி விட்டு, பின்னர் படுக்கை அறைக்கும் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

    இந்த ஜாங் கோலி, தற்போதைய அதிபர் ஜின்பிங்குடன் மிக நெருக்கமாக இருந்தவர் என தெரிகிறது.

    இந்த குற்றச்சாட்டை பெங் சூவாய் வெளியிட்ட நாள் முதல் அவர் மாயமானார். பொது வெளியில் அவர் தோன்றவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

    அவரை மகளிர் டென்னிஸ் சங்கம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.

    இந்தநிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    பெங் சூவாய் பெயரில் மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யு.டி.ஏ.யின் தலைவர் ஸ்டீவ் சைமனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம் சி.ஜி.டி.என். டிவி சேனல் வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இ-மெயிலில் அவர், “நான் காணாமல் போகவில்லை, பத்திரமாக இருக்கிறேன், வீட்டில் ஓய்வில் உள்ளேன், எல்லாமே நன்றாக இருக்கிறது” என்று கூறுவது அவரது குரலில் பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த இ-மெயில் மீது மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யு.டி.ஏ.யின் தலைவர் ஸ்டீவ் சைமன் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘வெளியாகி உள்ள இ-மெயில் பெங் சூவாய் எழுதியதுதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதை நம்புவது கடினமாக உள்ளது. அவருடைய பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் பற்றிய கவலையை எழுப்புகிறது. மகளிர் டென்னிஸ் சங்கமும், உலகமும் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிய சுதந்திரமான, சரிபார்க்கக்கூடிய ஆதாரம் தேவை. அவர் கூறியுள்ள செக்ஸ் புகார் மீது முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை தேவை. பெண்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும், மதிக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.

    இது சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
    ராஞ்சி:

    இந்தியா, நியூசிலாந்து இடையே ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடக்கிறது.

    டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய சில நாட்களில் களமிறங்கினாலும் நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது. முதலில் பேட் செய்து 164 ரன் சேர்த்த அந்த அணி, பந்துவீச்சில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றது. 2 பந்து மீதம் வைத்து தான் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது. 

    இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் பதிலடி கொடுக்க போராடுவார்கள். 

    முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா (48 ரன்), சூர்யகுமார் யாதவ் (62 ரன்) ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார் கட்டுக்கோப்புடன் வீசி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    எனவே, இந்த போட்டியில் வென்று டி20 தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் கேரளாவின் விஷ்ணு வினோத் அரை சதமடித்து 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    புதுடெல்லி:

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஐதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதியில் தமிழ்நாடு, கேரளா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கேரள அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ரோஹன் 51 ரன்கள் எடுத்தார். விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார்.

    தமிழக அணி சார்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 46 ரன், விஜய் சங்கர் 33 ரன், ஹரி நிஷாந்த், சஞ்சய் யாதவ் தலா 32 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஷாருக் கான் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

    இதேபோல், குஜராத், ஐதராபாத்துக்கு இடையே நடந்த காலிறுதியில் ஐதராபாத் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதியில் ஐதராபாத் அணி தமிழ்நாடு அணியுடன் மோதுகிறது.

    ராஜஸ்தான், விதர்பா அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதியில் விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கர்நாடகம், பெங்கால் அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதிப் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் கர்நாடகா அணி விதர்பா அணியை எதிர்கொள்கிறது.
    ஈரான் பெண்கள் கால்பந்து அணி மீது முந்தைய காலங்களில் இருந்தே பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.
    ஈரான்:

    சமீபத்தில் நடந்து முடிந்த பெண்கள் ஆசிய கால்பந்து கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில் ஜோர்டான் அணியை வீழ்த்தி ஈரான் பெண்கள் கால்பந்து அணி முதல் முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் ஈரான் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் ஜோர்டானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த போட்டியில் ஈரான் அணியின் தூணாக விளங்கி அணிக்கு வெற்றித்தேடி கொடுத்தவர் கோல் கீப்பர் சோஹ்ரே கவுடேய். 

    தற்போது  ஜோர்டான் கால்பந்து சங்கம், ஈரானிய மகளிர் அணியின் கோல் கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது அதிகாரபூர்வ பாலின சரிபார்ப்பு சோதனைக்கான விசாரணையைத் தொடங்குமாறு ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம்  கேட்டுக்கொண்டுள்ளது.

    இது குறித்து ஜோர்டான் கால்பந்து சங்கத்தலைவர் அலி பின் ஹுசைன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

    ஈரான் பெண்கள் கால்பந்து அணி மீது முந்தைய காலங்களில் இருந்தே பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. அதனால் சோஹ்ரே கவுடேய் மீதும் மற்ற வீராங்கனைகள் மீதும் "பாலின சரிபார்ப்பு சோதனை"  நடத்துமாறும்  இந்த சோதனை சுதந்திரமான மருத்துவ குழுவால் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதற்கு பதில்  அளித்து பேசியுள்ள சோஹ்ரே கவுடேய் "நான் ஒரு பெண். இந்த குற்றச்சாட்டு கொடுமையானது. ஜோர்டான்  கால்பந்து சங்கம் மீது நான் வழக்குத் தொடருவேன் " எனத் தெரிவித்துள்ளார்.

    டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தற்போது செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசுகையில், "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார். அவர் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார், பின்னர் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். 

    கவுதம் கம்பீர் - ராகுல் டிராவிட்

    தற்போது அவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என்று நான் நம்புகிறேன். அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும்.  அவர் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்" என்று கவுதம் கம்பீர் கூறினார்.

    எல்லா நேரத்திலும் அதிரடியான ஷாட்களை ஆட முடியாது போன்றவற்றை இளம் வீரர்கள் புரிந்து கொள்ள இயலும் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா- ராகுல் டிராவிட் கூட்டணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர் மார்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), மார்க் சேப்மேன் 50 பந்தில் 63 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின், புவனேஸ்வர்குமார் தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய இந்தியா 2 பந்து எஞ்சிய நிலையில் வெற்றிக்கான இலக்கை எடுத்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 விக்கெட்டும், சவுத்தி, சான்ட்னெர், மிச்சேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இதேபோல அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் கூட்டணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற வேண்டியது. ஒரு ஓவர் அல்லது அதற்கு முன்பே வெற்றிபெறவேண்டிய ஆட்டத்தில் கடைசிவரை சென்றுதான் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 3 பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில் ரி‌ஷப்பண்ட் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

    இந்த வெற்றி எளிதாக கிடைக்கவில்லை என்பதை கேப்டன் ரோகித் சர்மா ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்தது போல் எளிதாக அமையவில்லை. ஆனாலும் இந்த அனுபவத்தின் மூலம் வீரர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது எதை செய்வது அவசியம் என்பதை தெரிந்திருப்பார்கள். எல்லா நேரத்திலும் அதிரடியான ஷாட்களை ஆட முடியாது போன்றவற்றை புரிந்து கொள்ள இயலும்.

    ஒரு கேப்டனாக, அணியாக வீரர்கள் வெற்றி பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு இது சிறந்த போட்டியாக இருந்தது. சில முக்கியமான வீரர்கள் இல்லை. இதனால் மற்ற வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

    சூர்யகுமார் யாதவ் எங்களது மிடில் வரிசையில் மிகவும் முக்கியமான வீரர் ஆவார். சுழற்பந்தை அவர் எளிதாக கையாண்டார். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி நியூசிலாந்தை கட்டுப்படுத்தினார்கள்.

    போல்ட் பந்தில் நான் ஆட்டம் இழந்தது என்பது என்னுடைய பலவீனத்தை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். அவருடைய பலம் எனக்கு தெரியும். மகிழ்ச்சியுடன் வெற்றி கிடைத்தது. முதல் வெற்றி எப்போதுமே சிறந்தது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது. 

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருந்தது.

    2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பாக மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

     மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் 

    கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. இது அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும் போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

    சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது பல்வேறு வி‌ஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.

    பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

    2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் நடத்த முடியவில்லை.

    சமீபத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்...ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவரானார் சவுரவ் கங்குலி

    நான் தொடக்கம் முதல் 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். இதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 40 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்ற வகையில் நான் தயாராக இருக்கிறேன். நான் தொடக்கம் முதல் 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். இதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக நான் 3-வது வீரராக விளையாடி வருகிறேன். நான் ஏற்கனவே விளையாடியதைதான் செயல்படுத்தி உள்ளேன். புதிதாக ஒன்றும் செய்யவில்லை. 20 ஓவர் போட்டியில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.

    பயிற்சியின்போது நான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். வெற்றிபெற்ற அணியில் நான் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
    பாலி:

    இந்தோனேசியாவின் பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டியை 17-21 21-7 21-12 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

    நெஸ்லிகனும் பி.வி.சிந்துவும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். 3 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, காலிறுதி ஆட்டத்திலும் சிந்து ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- சிக்கி ரெட்டி ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
    ×