search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்
    X
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

    11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

    கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும்.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

    இந்திய வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து விளையாடும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த முறை போட்டியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களுக்கான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரு போட்டியில் 5 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க முடியும். தற்போது 3 வெளிநாட்டு வீரர்கள், ஒரு ஆசிய வீரர் என மொத்தம் 4 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

    இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணியும் முந்தைய வீரர்களில் பலரை கழற்றி விட்டதுடன் பல புதிய வரவுகளை சேர்த்து தங்களது வலிமையை அதிகரித்து இருக்கின்றன. சென்னையின் எப்.சி. அணி நடுகள வீரர் அனிருத் தபா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளராக பேசிதார் பாண்டோவிச் பொறுப்பேற்றுள்ளார். கோப்பையை வெல்லும் முனைப்பில் எல்லா அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியின் மூலம் தங்களது திறமையை பட்டை தீட்டி இருக்கின்றன.

    தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி ஐதராபாத்தை சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் இந்த போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும். அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா ரூ.1½ கோடி கிடைக்கும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3½ கோடி பரிசாக கிட்டும். லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியே கோப்பையையும் வென்றால் மொத்தம் ரூ.9½ கோடியை பரிசாக அள்ளும்.

    Next Story
    ×