என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தற்போதைய உள்ளூர் ஊரடங்கு பலன்தருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்த நிலையில் ஆய்வு செய்த மத்தியக்குழு கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கினை அமல்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி புதுவையில் 6 ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 தெருக்களில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

    அதாவது மேட்டுப்பாளையம் மங்கலட்சுமி நகர் 5-வது குறுக்கு தெரு, சண்முகாபுரம் அண்ணா வீதி, வீமன்நகர் ஓடைவீதி, முதலியார்பேட்டை வெள்ளாழர் வீதி 2-வது குறுக்கு தெரு, விடுதலை நகர் ஜி-பிளாக், உருளையன்பேட்டை செங்குந்தர் வீதி, ஒதியஞ்சாலை புதுநகர் மெயின்ரோடு, லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதி, கிருஷ்ணாநகர் 14-வது குறுக்கு தெரு, கோரிமேடு ஜிப்மர் ஜி-டைப் குடியிருப்பு, பூமியான்பேட்டை பாவாணர் நகர் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த வீதிகளுக்கு மட்டும் உள்ளூர் ஊரடங்கினை கலெக்டர் அருண் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று முதல் உடனே அமலுக்கு வந்தது. வருகிற 14-ந்தேதி வரை இது அமலில் இருக்கும்.

    இந்த உத்தரவின்படி அந்த பகுதியில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை செயல்படலாம். அத்தியாவசியப் பணிகளுக்கு தவிர மற்ற பணிகளுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

    ஆனால் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று தடுப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. வழக்கத்தைப்போலவே இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்தது. ஒரு சில போலீசார் மட்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு தெரு பகுதி மட்டும் என்பதால் அங்கிருந்த ஒன்றிரண்டு கடைகள் பிற்பகலில் மூடப்பட்டன. ஒருசில இடங்களில் மட்டும் மாலைக்கு மேல் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

    இந்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடுவீடாக சென்று அங்கு வசிப்பவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகள் மற்ற பகுதிகளில் இருந்து எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்பட்டு காட்டப்படவில்லை.

    அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த ஊரடங்கினை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனால் இந்த ஊரடங்கு எதிர்பார்த்த பலனை தருமா? என்பதும் தெரியவில்லை.

    புதுவையில் ஏற்கனவே கடந்த வாரம் 32 பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பினை தொடர்ந்து கூடுதல் பரிசோதனைகளை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், கோரிமேட்டில் உள்ள கொசு தடுப்பு மற்றும் ஆய்வு மையத்திலும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கோரிமேட்டில் உள்ள கொசு தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நாள்தோறும் 1000 பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அங்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

    மேலும் அவர்கள் முதலியார்பேட்டையில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்துக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சாரம் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய அவர்கள் அங்குள்ள மருத்துவர்களிடம் தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வளர்ச்சி மற்றும் நிவாரண மறுவாழ்வு ஆணையரான அன்பரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளரும் கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் ரகுநாதன் மற்றும் கோவிட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்தியக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் அவற்றை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    பிரதமர் எவ்வித கவுரவமும் பார்க்காமல் வருகிற 13-ந் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

    இதற்+கிடையே மத்திய அரசு நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பை பெற்றுள்ளது.

    புதுவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    பல இடங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதற்கு வாகன வசதி இல்லாத நிலையில், பிரதமர் எவ்வித கவுரவமும் பார்க்காமல் வருகிற 13-ந் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

    தற்போது சமையல் எரிவாயுக்கு கொடுக்கின்ற மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கச்சா எண்ணை ஒரு பேரல் 140 டாலரில் இருந்து 44 டாலராக ஆகி விட்டது.

    கொரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் விலையை குறைக்காமல் எரிவாயுக்கான மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கூறுகிறது.

    இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    காங்கிரஸ் ஆட்சியில் எப்படி எரிவாயுக்கு மானியம் வழங்கப்பட்டதோ, அதேபோல் தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுவையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 503 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 283, காரைக்காலில் 17, ஏனாமில் 3, மாகேயில் 9 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது ஆயிரத்து 476, காரைக்காலில் 83, ஏனாமில் 153, மாகியில் 38 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 460, காரைக்காலில் 29, ஏனாமில் 10, மாகேயில் 4 பேர் என மொத்தம் 503 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 17 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 752 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 12 ஆயிரத்து 135 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 2 ஆயிரத்து 824, காரைக்காலில் 144, ஏனாமில் 136 பேர் என 3 ஆயிரத்து 104 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 314 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டசபை சில நாட்கள் மூடப்பட்டது.

    பின்னர் வழக்கம் போல சட்டசபையில் அமைச்சர்கள், அரசியல்கட்சி அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். அவர் ஜிப்மரில் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினைகளை திசை திருப்பாதீர்கள் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    அதிகாரிகளுடன் பேச தடை விதித்து கவர்னர் கிரண்பேடி அமைச்சர் கந்தசாமிக்கு கடிதம் எழுதினார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதா.? என கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மிக அழுத்தம் தரக்கூடிய காலத்தில் இருக்கிறோம். அந்த நேரத்தில் முன்னுரிமை தரவேண்டிய வி‌ஷயம் எதுவென்பதில் சரியான தேர்வு தேவை.

    குற்றச்சாட்டுகளை வெளியிடுவதும், பொய்யைப் பரப்புவதும் மக்களை குணமாக்கப் போவதில்லை, ஆனால் அதிகமானவர்களை காயப்படுத்துகிறது. நீங்கள் சொல்லும், குற்றம் சாட்டும் அனைத்தையும் என்னால் மறுக்க முடியும், ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. தயவு செய்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். கொரோனா சவாலை எதிர் கொள்ள மத்திய அரசு தந்துள்ள ஐ.சி.எம்.ஆர். குழுவின் முழு உதவியை பெறுங்கள்.

    அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எங்கு நடக்கிறது என்று நான் உங்களுக்கு கேள்வி எழுப்புகிறேன். அதுதொடர்பான வி‌ஷயம் ஏதும் ராஜ்நிவாசில் நிலுவையில் இல்லை.

    ஆனால் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோல் மீனவர் விவகாரத்திலும் எந்த வி‌ஷயமும் ராஜ்நிவாசில் நிலுவையில் இல்லாத போதும் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள்.

    அதேபோல் பட்ஜெட் அதிகாரியாரால் அச்சுறுத்தப்பட்டார் என்று கேள்வி எழுப்புகிறேன். இதேபோல் வேறு பல வி‌ஷயங்களும் உள்ளன. தயவு செய்து பிரச்சினைகளை திசைதிருப்பாதீர்கள்.

    இவ்வாறு கிரண்பேடி கடிதத்தில் கூறியுள்ளார்.

    தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படாத‌தால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    புதுச்சேரி மாநிலத்தில் உள்ளூர் பேருந்துகளை இயக்க அரசு அறிவித்து இருந்தாலும் 4 மாதத்திற்கான சாலை வரியை அரசு ரத்து செய்தால் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளுக்கு  அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

    பயணிகள் எல்லையில் இருந்து புதுச்சேரிக்குள் நடந்து சென்று உள்ளூர் பேருந்தில் பயணிக்கின்றனர். புதுச்சேரி அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எதுவும் தமிழகப் பகுதிகளுக்குள் இயக்க அனுமதி வழங்கவில்லை. எனவே இருமாநில அரசுகள் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    கொரோனா பணிக்கு சென்றுள்ள எம்டிஎஸ் ஊழியர்களை உடனடியாக திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணி நிரந்தரம் உறுதி செய்யப்பட்ட எம்.டி.எஸ் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குடிநீர் உந்து நிலையங்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், கழிவு நீர் உட்கோட்டம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிய எம்.டி.எஸ். ஊழியர்களுக்கு பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். கொரோனா பணிக்கு சென்றுள்ள எம்.டி.எஸ். ஊழியர்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்.ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று காலை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க தலைவர் முரளி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    உப்பளத்தில் நாய் குரைத்த தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகர்-2 பால்வாடி தெருவை சேர்ந்தவர் தேவசகாயராஜ். இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு ஜெயராஜ் (வயது19), பேட்ரிக்(15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஸ்டெல்லா ஆசிரமத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஸ்டெல்லாவின் இளையமகன் பேட்ரிக் நேதாஜிநகர் ரங்கநாதன் தெருவில் சென்ற போது அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் நாய் பேட்ரிக்கை பார்த்து குரைத்தது.

    இதனை பேட்ரிக் குடும்பத்தினர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்கும் சாந்தகுமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பேட்ரிக் குடும்பத்தினர் அங்கிருந்து வீடு திரும்பி விட்டனர். இதன்பின்னர் ஸ்டெல்லாவின் மூத்த மகன் ஜெயராஜ் இரவு 9 மணியளவில் சாந்தகுமாரின் வீட்டு வழியாக சென்றார்.

    அப்போது ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டிய சாந்தகுமார் திடீரென வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து ஜெயராஜை சரமாரியாக வெட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாக சாந்தகுமார் மிரட்டல் விடுத்தார்.

    இந்த தாக்குதலில் ஜெயராஜூக்கு இடது கை மற்றும் தோள் பட்டை முதுகில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஸ்டெல்லா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை தேடி வருகிறார்.

    கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறி வருவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் உள்ள 739 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 35 மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் புதுவை கொரோனா பாதிப்பு அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாட்டில் தேசிய இறப்பு விகிதம் 1.72 சதவீதத்தை தாண்டி, புதுவையில் இறப்பு விகிதம் 1.83 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் செயல்படாத தன்மையே காரணம். ஆளும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. கொடிய சூழ்நிலையிலும் கவர்னர், அரசு ஒருவர் மீது ஒருவர் குறை கூறி மலிவு விளம்பர அரசியல் நடத்தி மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.

    பரிசோதனையை அதிகப்படுத்தி ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட 3 மடங்கு நோயாளிகள் வீட்டிலேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வீட்டில் தங்கும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைக்கு தள்ளப்பட்டவுடன் நோயின் தாக்கம் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் மரணமடைந்து வருகிறார்கள்.

    போதிய மருந்துகளும் அரசிடம் இருப்பு இல்லை. அரசின் அலட்சியத்தால் மரணமடைபவர்களின் ஆத்மா கூட கவர்னர், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசை மன்னிக்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக கடலூரை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நேருவில் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது41). வெளிநாடு வாழ் இந்தியர். இவரின் உறவினரான ஆரோக்கியராஜ் மகாபலிபுரம் கிழக்கு கடற்கரையில் பகுதியில் 10 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருவதாக தெரிவித்தார். அதனை உண்மை என நம்பிய ராஜேந்திரன் கடந்த ஆண்டு நிலத்தை வாங்க முன்பணமாக ரூ.1 கோடியே 60 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்யாமல் ஆரோக்கியராஜ் காலம் கடத்தி வந்தார். இதனால் ராஜேந்திரனுக்கு சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் அவர் நிலம் குறித்து விசாரித்தபோது திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலியாக பத்திரம் தயாரித்து காட்டி மோசடியாக தன்னிடம் விற்க முயற்சிப்பதை அறிந்து ஏமாற்றமடைந்தார்.

    இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதில், ஆரோக்கியராஜ், அவரது மனைவி நான்சி, உமையம்மாள், கடலூர் மாவட்டம் எய்தனூர் சீத்தராமன், அவருடைய மனைவி அமுதா, மகள்கள் சத்யா, அகிலா, காயத்ரி, மருமகன்கள் அபிலேஷ், கணேஷ், மைத்துனர் குமரன் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் ராஜேந்திரனின் நண்பரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவரிடமும் இதே கும்பல் ரூ.30 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பதாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாசு அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக கூறி சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வில்லியனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உறுவையாறு செல்வா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ராதிகா (வயது 24). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக ராதிகா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் காலை தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து அவரது தாயார் ரங்கபுஷ்ப காந்தி மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×