என் மலர்
செய்திகள்

உப்பளத்தில் நாய் குரைத்த தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகர்-2 பால்வாடி தெருவை சேர்ந்தவர் தேவசகாயராஜ். இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு ஜெயராஜ் (வயது19), பேட்ரிக்(15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஸ்டெல்லா ஆசிரமத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஸ்டெல்லாவின் இளையமகன் பேட்ரிக் நேதாஜிநகர் ரங்கநாதன் தெருவில் சென்ற போது அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் நாய் பேட்ரிக்கை பார்த்து குரைத்தது.
இதனை பேட்ரிக் குடும்பத்தினர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்கும் சாந்தகுமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பேட்ரிக் குடும்பத்தினர் அங்கிருந்து வீடு திரும்பி விட்டனர். இதன்பின்னர் ஸ்டெல்லாவின் மூத்த மகன் ஜெயராஜ் இரவு 9 மணியளவில் சாந்தகுமாரின் வீட்டு வழியாக சென்றார்.
அப்போது ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டிய சாந்தகுமார் திடீரென வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து ஜெயராஜை சரமாரியாக வெட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாக சாந்தகுமார் மிரட்டல் விடுத்தார்.
இந்த தாக்குதலில் ஜெயராஜூக்கு இடது கை மற்றும் தோள் பட்டை முதுகில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்டெல்லா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை தேடி வருகிறார்.