என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் புதிதாக 7 கட்டுப்பாட்டு மண்டலங்களை சுகாதாரத்துறை செயலரும், கலெக்டருமான அருண் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளையும் மீறி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதிதாக 7 கட்டுப்பாட்டு மண்டலங்களை சுகாதாரத்துறை செயலரும், கலெக்டருமான அருண் அறிவித்துள்ளார்.

    புதுவை ரெட்டியார் பாளையத்தில் காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவழநகர் முத்தாலம்மன் கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் இருளன்சந்தை வ.உ.சி. நகர், திலாசுப்பேட்டை தேரடி வீதி, அபிஷேகபாக்கம் அம்பேத்கார் வீதி, மடுகரை மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, புது சாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதிதாசன் வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இப்பகுதியில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் அருண் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    கட்டுப்பாடு மண்டலம் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணிதுறை உள்ளிட்ட துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் டி.என்.பாளையம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    பாகூர்:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் டி.என்.பாளையம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் சதீஷ் தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் செய்தனர். இதில், பங்கேற்ற பொதுமக்களுக்கு, முககவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டது. இதில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், வட்டார இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, வட்டார விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், கிராம சேவக்குகள் சந்திரமோகன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை கண்காணிக்க அரசு சார்பில் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் ஒரு டாக்டர் நியமிக்கப்பட்டனர். இந்த மருத்துவ குழுவானது வாரந்தோறும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டபேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள், டாக்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அவர்கள் விளக்கி கூறினர். கொரோனா தடுப்பில் பணியில் இன்னும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் பொது மக்களிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் குறைகளை கேட்கும் நிகழ்வு வரும் திங்கள் முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி ஆளுநர் மாளிகை செயலகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக இதற்காக ஆளுநர் மாளிகையின் தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    திருபுவனை ஏரியில் வண்டல் மண் எடுக்க வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருபுவனை:

    புதுவையில் உள்ள பாசன குட்டைகள் மற்றும் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை தூர்வாரி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி 44 ஏரி, குளங்களை தூர்வாரி அவற்றில் இருந்து வண்டல் மண்ணை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி அரியூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் 5 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் திருபுவனை ஏரியில் வண்டல் மண் எடுத்தார். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து தங்களது ஏரியில் மண் எடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அந்த லாரிகளை சிறைபிடித்தனர். மேலும் லாரி, பொக்லைன் எந்திர டிரைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதை அறிந்து அங்கு வந்த ஒப்பந்ததாரரிடம், திருபுவனை சின்னபேட் பகுதியில் உள்ள கோவில்கள் புணரமைப்பு பணிகள் நிதி பிரச்சினையால் பாதியிலேயே நின்று போய் உள்ளதாகவும், அந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ஏரியில் மண் எடுப்பவர்கள், கோவில் திருப்பணிக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதற்கு, அரசு உத்தரவுப்படிதான் ஏரியில் மண் எடுக்கப்படுவதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இதன்பின் சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டன.
    பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை திறக்க வலியுறுத்தி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை திறந்து தொடர்ந்து நடத்த வேண்டும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கைகளுக்காக ஏ.ஐ.டி.யு.சி. பாசிக், பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சங்க கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுவை சட்டசபையின் பின்புறம் ஆம்பூர் சாலை அருகே ஊழியர்கள் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு பாசிக் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பாப்ஸ்கோ சங்க தலைவர் ராஜி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிசேகம், தலைவர் தினேஷ்பொன்னையா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். பாசிக் சங்க பொறுப்பாளர்கள் தரணிராஜன், அப்துல்லாகான், முத்துநாயுடு, அன்பழகன், பாலமுருகன், இருசப்பன், பாப்ஸ்கோ சங்க பொறுப்பாளர்கள் முருகவேல், ஜெய்சங்கர், அமுதா, ஏழுமலை, தமிழ்ஒளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிய வேளையில் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டம் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்தது.
    புதுவையில் பெண்ணிடம் 3½ பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி காந்திதிருநல்லூர் மருதம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 41). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது சகோதரர் அமைதி நகர் விரிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி சகோதரர் வீட்டுக்கு சென்ற கவிதா, அன்று இரவு 8.30 மணியளவில் தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    தனபால்நகர் 3-வது குறுக்கு தெருவில் வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கவிதாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக டிரைவர் சுடுகாட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36). வேன் டிரைவர். இவரது மனைவி தீபா. மோகன்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீபா புகார் செய்ததன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் மோகன்ராஜை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அதன்பிறகும் தம்பதி இடையே தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து சகோதரர்களை வரவழைத்து பேசிய பின் தீபா தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு சென்று விட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன்ராஜ் முருங்கப்பாக்கம் சுடுகாட்டிற்கு சென்று அங்கிருந்த விஷ விதைகளை தின்றார். அதன்பின் தனது நண்பரான கணபதிக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் விஷவிதை தின்ற விவரத்தை தெரிவித்தார். உடனடியாக கணபதி அங்கு சென்று மோகன்ராஜை அழைத்து வந்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என கோரிக்க எழுந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றமும் தேர்வை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக்கான தேதியை அறிவித்தது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேவுக்கான கால அட்டவணைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் இன்று மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,026 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 45,62,415  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,71,784-ல் இருந்து 35,42,664 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 70880 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,43,480 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.67 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவீதமாகவும் உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,026 ஆக அதிகரித்துள்ளது.

    வில்லியனூரில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலர் மணி என்கிற ராமகிருஷ்ணன் (வயது 45). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் கோவில் நிலம் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த மாதம் 16-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடிகளான பெரியகோட்டக்குப்பத்தை சேர்ந்த ஜமால் (34) உள்பட 6 பேரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான விஜி என்கிற குரங்கு விஜி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஜமாலின் கூட்டாளியான சுல்தான்பேட்டை தவுபிக் ரகுமான் (25) கருவடிக்குப்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து சென்று தவுபிக் ரகுமானை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று இல்லை என்பது உறுதியானதால் தவுபிக் ரகுமான் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    வில்லியனூர் அருகே காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதமாக வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அரியாங்குப்பம்:

    வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), கொத்தனார். இவருடைய மகன் ராஜா (19), பெயிண்டர். கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் ராஜாவின் மோட்டார் சைக்கிள் அரியாங்குப்பம் அருகே சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நிற்பதற்காக அவருடைய தந்தை பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு வந்து பார்த்து அதை உறுதி செய்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் வழக்குப்பதிவு செய்து சின்ன வீராம்பட்டினம் மீனவர்களிடம் விசாரித்தனர். இதில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் கடலில் இறங்கியதாக தெரிவித்தனர். அவர் காணாமல் போனதாக கூறப்பட்ட ராஜாவாக இருக்கலாம் என கருதி போலீசார் அவரை தேடினர்.

    நேற்று 2-வது நாளாக கடலோர காவல்படை மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் ராஜாவை தேடியபோது சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கியது. உடலை கடலோர காவல்படையினர் மீட்டு அரியாங்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று ராஜா தனது காதலியுடன் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×