என் மலர்
செய்திகள்

தற்கொலை முயற்சி
மனைவியுடன் தகராறு: சுடுகாட்டில் டிரைவர் தற்கொலை முயற்சி
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக டிரைவர் சுடுகாட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36). வேன் டிரைவர். இவரது மனைவி தீபா. மோகன்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீபா புகார் செய்ததன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் மோகன்ராஜை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதன்பிறகும் தம்பதி இடையே தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து சகோதரர்களை வரவழைத்து பேசிய பின் தீபா தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு சென்று விட்டார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன்ராஜ் முருங்கப்பாக்கம் சுடுகாட்டிற்கு சென்று அங்கிருந்த விஷ விதைகளை தின்றார். அதன்பின் தனது நண்பரான கணபதிக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் விஷவிதை தின்ற விவரத்தை தெரிவித்தார். உடனடியாக கணபதி அங்கு சென்று மோகன்ராஜை அழைத்து வந்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






