search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் சிறைபிடிப்பு"

    • அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது.
    • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியின்போது பொதுப்பணித்துறை அனுமதியுடன், ஏரி மண்கள் ஏலம் விடப்படும். அந்த வகையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், உள்ள ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் ஏரி மண்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஏரி மண்கள் அவலூர்-வாலாஜாபாத் தரை பாலம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது. ஆனாலும், இந்த பாலத்தில் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் தினமும் சென்று கொண்டிருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்று வட்டார கிராம பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலம் வழியாக பள்ளிக்கு சென்று வருவார்கள்.

    மாணவர்கள் செல்வதால் இந்த தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வப்போது, இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாகவும், விபத்து ஏற்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

    இந்த நிலையில் மாற்று பாதையில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழியில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல இருப்பதால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.
    • முறையாக தார்ப்பாய் போடாததால்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட பகுதியில் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் மூலம் 24 மணி நேரமும் ரெட்டிபாளையம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து நாயக்கர்பாளையம் வழியாக சுண்ணாம்புக்கற்களை ஏற்றிய டிப்பர் லாரிகள் அதிக பாரம் ஏற்றியிருந்ததுடன், முறையாக தார்ப்பாய் போடாததால் சாலையில் சுண்ணாம்பு கற்கள் சிதறியுள்ளது. இதனால் சாலை சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை மறித்து, சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, லாரிகளில் முறையாக தார்ப்பாய் கட்டியும், அளவுக்கேற்ப பாரம் ஏற்றியும் லாரிகள் மெதுவாக இயக்கப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கோவை:

    கோவை, குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் - மைல்கல் அருகே 6 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.இதில் மைல்கல் பகுதியில் இருந்து கோவைப்புதூர் செல்ல தொட்டிராயன் கோவில் வீதி வழியாக லாரிகள் இயக்கப்படுகிறது.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் 10 லாரி களை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.தகலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் 30 வீடுகள், அடுக்குமாடி குடியிரு ப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுவரை 5 பேர் விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்தநிலையில் ஒருவர் தனது காலை இழந்துள்ளார். மேலும் அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப்படுவதால் தண்ணீர் குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின்றன. எனவே குடியிருப்பு வழியாக லாரிகள் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து அந்த சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×