என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தெரிவித்தது.
    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் ரவி எம்.எல்.ஏ. நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பா.ஜ.க.வை மக்கள் விரும்புவதால் பலர் வந்து சேருகிறார்கள். இதுதவிர பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் தொடர்பில் உள்ளனர். தொடர்ந்து நாங்கள் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும். கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை காக்க ஆளும் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. அதை மறைப்பதற்காக காங்கிரசார் ஏதேதோ பேசி வருகிறார்கள்.

    தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. புதுவையில் இப்போது இருக்கும் நிலைமை அப்படியே தொடரும். ஆனால் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

    கொரோனா காலத்தில் 80 கோடி மக்கள் மத்திய அரசின் இலவச அரிசியை பெற்று பயனடைந்துள்ளனர். நாங்கள் ரேஷன் கடைகளை திறக்க தயாராக உள்ளோம். கவர்னர் அலுவலகத்தை கட்சி நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்துவதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்பவர்களுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு தேசிய செயலாளர் ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

    புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததும் ரேஷன்கடைகளை திறப்போம். கிலோ ரூ.2-க்கு கோதுமையும், ரூ.3-க்கு அரிசியும் வழங்குவோம். இந்த ஆட்சியில் இலவச அரிசி கொள்முதலில் ஊழல் நடந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அதனால்தான் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது’ என்றார்.

    முன்னதாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ரவி எம்.எல்.ஏ. ஆலோசனை மேற்கொண்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர், பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், நிர்வாகிகள் முதலியார்பேட்டை செல்வம், தங்க.விக்ரமன், அகிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    திருநள்ளாறு அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அகலங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது52). டிரைவரான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லட்சுமணனின் மகன் விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் ஆட்டோ டிரைவர் வீடு முன் வெடிகுண்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சின்னையாபுரம்ரோடு வ.உ.சி. நகர் அக்காசாமி மடத்து வீதியை சேர்ந்தவர் ராஜா(வயது 41). ஆட்டோ டிரைவர். கடந்த 11-ந் தேதி அந்த பகுதியில் போலீசார் விரட்டிய சிலரை ராஜா பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜாவை மிரட்டும் வகையில் அவரது வீடு முன் வெடிகுண்டு வீசப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், ஆட்டோ டிரைவர் ராஜா வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டை வீசியது வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்த பவி என்கிற அய்யனார்(வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    நெட்டப்பாக்கம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜி நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 43). டிரைவர். இவரது மகள் தர்ஷிணி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தர்ஷிணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த தர்ஷிணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்து இருந்தனர்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், சுற்றுலாதலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

    இதையடுத்து கடைகள், ஓட்டல்கள், கடற்கரை திறக்கப்பட்டன. போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு மாமூல் வாழ்க்கை திரும்பியது. இந்தநிலையில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஷண்முகா, அண்ணா சாலையில் உள்ள ராஜா ஆகிய தியேட்டர்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன.

    ஊரடங்கு தளர்வுக்குப்பின் முதல்நாள் முதல் காட்சியில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந் தது. இளைஞர்கள், இளம்பெண்கள் வந்து இருந்தனர். ஷண்முகா தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் முகக்கவசமும், 3டி படம் என்பதால் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

    சமூக இடைவெளி விடப்பட்டு இருக்கைகளில் ரசிகர்கள் உட்கார வைக்கப்பட்டனர். வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டு இருந்தது. புதிய படங்கள் வராததால் மற்ற தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு முன் மற்ற தியேட்டர்களும் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படும் என்று தெரிகிறது.
    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பேரிடர் மேலாண்மைக்குழு தலைவரும், முதல்-அமைச்சருமான நாராயணசாமி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர்கள் நமச் சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மாவட்ட கலெக்டர் அருண் உள்பட அனைத்து துறை செயலர்கள் மற்றும் வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம், காவல், தீயணைப்பு, கடலோர காவல்படை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    26-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வது குறித்து புதுவையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு, மருந்து, குடிநீர், மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகள் கிடைக்க ஆலோசிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும், தேங்கிய மழைநீரை மோட்டார்கள் மூலமாக அகற்றவும், குடிநீர், மின்சாரம் தடைபட்டால் 24 மணி நேரத்தில் சரி செய்யவும் உத்தரவிடப்பட்டது.

    அனைத்து துறைகளின் தொலைபேசி எண்களும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், துறைவாரியாக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் பரவும் டெங்கு, காலராவை தடுக்க மருந்துகள், தடுப்பூசிகளை இருப்பு வைக்க அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தடுக்க அவர்களது செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். இந்த பணிகளை கண்காணிக்க 3 அரசு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பணியில் நான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் களத்தில் இறங்கி வேலை செய்ய தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் திட்ட மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    புதுவையில் இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டன.
    புதுச்சேரி:

    கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு என மாமூல் வாழ்க்கைக்கு திரும்பின. பொழுதுபோக்கு அம்சமான தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் தற்போது மத்திய அரசு கடந்த 30-ந் தேதி வெளியிட்ட 5-வது கட்ட தளர்வில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

    அதன்படி புதுவையில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் தீர்வு அளித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புதுவையில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன.

    நாள் ஒன்றுக்கு 3 காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான டிக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுகிறது.

    தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படுகிறது. ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தியேட்டர்கள் 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுடன் ஏசி பயன்படுத்தப்படுகிறது.

    காரைக்கால் அருகே ஓய்வு பெற்ற நர்சு வீட்டில் நகைகள், பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 68). அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கணேசன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் தற்போது வசித்து வருகின்றனர். இதனால் பவுனம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இவரது வீட்டுக்கு வரிச்சிகுடி சோனியாகாந்தி நகரை சேர்ந்த பிரபாகரன் மனைவி பாத்திமா (28) என்பவர் வந்து துணிகள் தைத்து தருவது வழக்கம். அதன்படி கடந்த 10-ந் தேதி பவுனம்மாள் வீட்டுக்கு சென்ற பாத்திமா துணிகளை கொடுத்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது பவுனம்மாள் குளிக்கச் செல்வதாக கூறியதால் பாத்திமா வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். குளிப்பதற்கு முன் தான் அணிந்து இருந்த 12½ பவுன் தங்க செயின், 3 மோதிரங்களை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது மேஜையில் வைத்திருந்த அந்த நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்து சென்ற பாத்திமாவின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. தொடர் விசாரணையில் திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டில் பாத்திமா இருப்பதாக தகவலறிந்து போலீசார் அங்கு சென்று அவரை மடக்கிப்பிடித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதில் பவுனம்மாள் வீட்டில் நகைகள், பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை ரூ.1 லட்சத்துக்கு விற்று புதிதாக தங்க நகைகளை வாங்கியதாகவும், ரூ.30 ஆயிரம் செலவு செய்ததாகவும் பாத்திமா தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் பாத்திமாவை கைது செய்து ரூ.1லட்சத்து 14 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் விற்பனை செய்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை உடனடியாக பிடித்த கோட்டுச்சேரி போலீசாரை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் பாராட்டினர்.
    வில்லியனூர் அருகே திருமணம் தள்ளிப்போனதால் விரக்தி அடைந்த எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 30). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் சரியான வரன் அமையாமல் திருமணம் தள்ளிக்கொண்டே போனது.

    இதனால் வெங்கடேசன் நாடி ஜோதிடம் பார்த்தார். அப்போது ஜோதிடர் திருமணம் ஆக 5 வருடங்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது. திருமணம் தள்ளிப்போவதை நினைத்து அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தவறான தகவல்களை தந்து கவர்னர் மக்களை குழப்புகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் மாநில அரசு பரிந்துரைகளை ஏற்காமல் கடந்த 2017-ம் ஆண்டு தன்னிச்சையாக மாணவர்களை சேர்த்தது. அப்போது இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில் தவறு செய்யும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க நான் கடிதம் எழுதினேன்.

    அதே நேரத்தில் தனக்கு வந்த புகாரின் அடிப்படையில் தன்னிச்சையாக கவர்னர் கிரண்பேடி சென்டாக் கலந்தாய்வுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டினார். சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைத்தார். சி.பி.ஐ. புதுவைக்கு வந்து அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு தர உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    நாணயமான அதிகாரிகளை ஊழல் பேர்வழிகள் என்று சி.பி.ஐ.க்கு புகார் கொடுத்து கவர்னர் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். தற்போது தீர்ப்பை வரவேற்று புதுவை மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு என கிரண்பேடி தெரிவிக்கிறார். உண்மையில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதே கிரண்பேடிக்கு நோக்கம்.

    தவறான தகவல்களை தருவது கிரண்பேடிதான். ஆதாரமற்ற புகாரைக் கொடுத்து அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்தார்.

    புதுவை மக்கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பத்தை கவர்னர் உருவாக்குகிறார். பண்டிகை காலங்களில் ஏழைகளுக்கு துணி, ரேசனில் அரிசி தருவதற்கு பதிலாக பயனாளிகளுக்கு பணம் தர கிரண்பேடி அறிவுறுத்தினார்.

    மத்திய உள்துறையும் இதை செய்ய சொல்கிறது. ரேசனில் அரிசி வழங்குவதை தடுத்து விட்டு ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?ரேசனில் அரிசி தருவதும், ஏழைகளுக்கு பண்டிகை காலங்களில் இலவச துணி தருவதும் அரசின் கொள்கை முடிவு. அதை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை.

    அரிசியை ரேசனில் வழங்குவது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. கவர்னர் மாளிகையான ராஜ் நிவாஸ் என்பது பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக மாறி விட்டது. அதேபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    இதனை தொடர்ந்து, ரேசனில் அரிசியும் தரவில்லை. வங்கியில் பணமும் பயனாளிகளுக்கு வழங்க வில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, “வழக்கு முடியும் வரை அரிசிக்கு பதிலாக பணம் வழங்க உள்ளோம்“ என்று குறிப்பிட்டார்.

    கொரோனா தொற்றால் பள்ளிக்கு வந்த மாணவர் பாதிக்கப்பட்டுள்ளாரே.? என்று கேட்டதற்கு, “ஒரு மாணவனுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகுப்பறையை மூடியுள்ளோம். இதர வகுப்புகள் தொடரும்.” என்றார்.

    புதுவை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மின்துறை ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30).

    புதுவை அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் கடந்த 15.5.2019-ல் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது அந்த வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வினோத்தை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தனபால் முன்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி தனபால் பாலியல் குற்றத்திற்கு வினோத்துக்கு 10 ஆண்டுகளும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், தப்ப முயன்ற சிறுமியை தடுத்து அடைத்த குற்றத்திற்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    ஜெயில் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    புதுவையில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியமைக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூற 45 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று கருத்தரங்கு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கட்சியின் விவசாயிகள் அணி தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கப்படும். விவசாயிகள் விவசாய கூலிகளாக, அடிமைகளாக மாற்றப்படுவர். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது.

    விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு தான் விற்பனை செய்ய முடியும். இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சட்டமாகும். இதனை எதிர்த்து பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கல்வி, மின்சாரம், மருத்துவம், விவசாயம் என ஒவ்வொன்றாக மாநில அரசுகளின் உரிமையை பறித்து வருகிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு அவற்றை தனியார் மயமாக்கி வருகிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் அரசு மத்தியில் உள்ளது. இது குறித்து நான் பேசினால் என்னை தேச விரோதி என்று கூறுகின்றனர்.

    புதுவை மாநிலத்திற்கு சில உரிமைகள் தரப்பட்டுள்ளது. அதையும் மத்திய அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு அனுமதி வழங்கியும், முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கான நிதி அதிகாரத்தை பிரித்து தர கவர்னர் மறுக்கிறார். அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் தர மறுத்து வேண்டுமென்றே கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறார். புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மின்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு இதுவரை செய்துள்ளது. அதனை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்.

    புதுவைக்கு நிதி அதிகாரங்கள் மறுக்கப்படுகிறது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடியை தரவில்லை. இது தொடர்பாக எத்தனை முறை வலியுறுத்தினாலும் பதில் இல்லை. இதனை எல்லாம் வைத்து தான் நாங்கள் மத்திய அரசு புதுவையை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினோம்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. புதுவையில் டெபாசிட் வாங்கவில்லை. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்று அந்த கட்சியினர் பேசி வருகின்றனர். புதுவையில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியமைக்கும். இதனை யாராலும் மாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பி.கே. தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×