என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • செல்போன்கள் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டு, தரிசனம் முடித்து வரும்வரை பக்தர்களின் செல்போன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
    • ஆண்டாள் கோவிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.

    ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் செல்போன்கள் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டு, தரிசனம் முடித்து வரும்வரை பக்தர்களின் செல்போன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு உள்ளேயும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அறையில் வைக்க ஒவ்வொரு செல்போனுக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பாதுகாப்பு அறையில் செல்போனை வைத்து சென்றனர். ஆண்டாள் கோவிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலம்தான் தன்மீதுள்ள பழியை எடப்பாடி பழனிசாமி துடைக்க முடியும்.

    அதிமுக மட்டுமல்ல, எந்த கட்சி வேண்டுமானாலும் தே.ஜ.கூட்டணியில் வந்து இணையலாம்" என்றார்.

    • மாணவர்களுக்கு நேரம் தவறாமை, நேரம் மேலாண்மை ஆகியவை மிகவும் முக்கியம்.
    • நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு திரைப்படத்திற்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோமோ, அதேபோல் விமர்சனம் வரும்போதும் அதை பொறுத்து கொள்கிற மனநிலை இருந்தால் தான் தன்னால் உயர முடியும்.

    "ஆடியன்சும் ஆவுடையப்பனும்" என்ற கதையை இயக்கப் போகிறேன். இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் திரையின் வழியாக நேரடியாக ஆடியன்ஸ் உடன் பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. "டீன்ஸ் " திரைப்படம் திரையரங்கில் சரியாக ஓடவில்லை என்றாலும் ஓ.டி.டி தளங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. "டீன்ஸ் " படத்தின் 2-ம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய பாதை திரைப்படத்தின் 2-ம் பாகம், உள்ளே வெளியே திரைப்படத்தின் 2-ம் பாகம் இயக்க உள்ளேன்.

    மாணவர்களுக்கு நேரம் தவறாமை, நேரம் மேலாண்மை ஆகியவை மிகவும் முக்கியம். குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடின உழைப்பு முக்கியம் என்பதை விட கல்விக்கே முக்கியத்து வம் கொடுக்க வேண்டும். கல்விதான் மாணவனின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடும்.


    வேங்கை வயல் விவகாரத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவ காரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி செய்யும்போது எதிர்க்கட்சிகள் நிறைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. பின்னர் ஆளுங்கட்சி எதிர்கட்சியாக வரும்போது அதே எதிர்ப்புகளை தெரிவிக்கின்றன.

    அரசாங்கத்தை எதிர்ப்பதை விட ஆதரித்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது. மேலும் ஆளுங்கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும் போது அதை சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க் கட்சிகளின் கடமை.

    டங்ஸ்டன் விவகாரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் வெற்றி என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான வெற்றி. தனியாக ஒரு கட்சியோ அல்லது தனிப்பட்ட மனிதரின் வெற்றியோ என கொண்டாடுவதற்கான விஷயமாக டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பார்க்க முடியாது.

    தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடிகர் சங்கம் உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டபோது அதில் வெற்றி கிடைக்காமல் போனதால் நடிகர்கள் சோர்வடைந்து போகிறார்கள். எந்த ஒரு விவகாரத்திலும் நடிகர்கள் பேசும் போது நடிகர்கள் பேசுவதை கவனிக்கிறார்களே தவிர அந்த பிரச்சனையை கவனிப்பதில்லை.

    பரந்தூர் விமான நிலையம் குறித்து நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது.

    பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் அங்கு சென்ற பின்னால் மக்களின் சப்போர்ட் நடிகர் விஜய்க்கு முழுமையாக செல்லும்போது அந்த விவகாரத்தில் அரசாங்கம் நினைப்பதை செய்ய முடியாமல் போகும்போது விஜய்யை போராட்ட களத்திற்கு செல்லவிடாமல் தடுத்தது இயல்பான விஷயம் தான்.

    விஜய்யை பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் போராட்ட களத்திற்கு அனுமதிக்கப்படாததற்கு உச்சத்தில் இருப்பவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக எந்த கட்சியாக இருந்தாலும் செய்கின்ற விஷயம் தான். இதனை மீறி ஜெயிக்க வேண்டியது புதிதாக வருபவர்களுக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்கும்.

    • 2026 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக விஜய் அறிவித்துள்ளார்.
    • நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை என்று பார்த்திபன் தெரிவித்தார்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், விஜயின் அரசியல் செயல்பாடு குறித்து சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். கலெக்சன் மன்னன் அவர் தான். ரூ.200 கோடி சம்பளம். இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டு விட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும். அவர் எதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

    மாற்றம் ஒன்று தான் மாறாதது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதில் விஜயும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும். அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேங்கைவயல் வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
    • அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை.

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் கால தாமதம் ஏன் என்று சாத்தூரில் பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "வேங்கைவயல் விவகாரத்தில் 2 பேரை குற்றவாளிகள் என பதிவு செய்வதற்கு ஏன் எவ்வளவு கால தாமதம் ஆனது. காவல்துறையினருக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளது. இந்த அழுத்தங்களால் புதிய புதிய விவகாரங்கள் வரும் போது பழைய பிரச்சனைகள் மிக பழைய விஷயமாகி விடுகின்றன.

    தற்போது இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இனிமேல் இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதே சமயம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக வரும்போது அதே விமர்சனத்தை வைக்கிறார்கள்.

    இங்கே எதிர்ப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது. ஆகவே அரசை ஆதரித்து நல்ல விசயத்தை வாங்கி கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆனால் அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மக்கள் போராடிய பின்பு தான் தீர்வு கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.

    • வெம்பக்கோட்டை அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
    • தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்தது.

    இந்நிலையில், வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் இதுவரை மொத்தமாக 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    • தமிழக அரசின் நிதி நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது.
    • ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது.

    மல்லாங்கிணறு:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசின் நிதி நிலைமை குறித்து தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது:-

    * தமிழக நிதிநிலை குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களை கூறி வருகிறார்.

    * தமிழ்நாடு அரசு திவாலாகிறது என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

    * நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் வரம்புக்கு உட்பட்டு கடன் வாங்கப்படுகிறது.

    * பொருளாதாரம், நிதி, மேலாண்மை குறித்து அடிப்படையற்ற புகார்களை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

    * உள்நாட்டு உற்பத்தி அளவைப்பொறுத்தே கடன் வாங்கும் அளவு, திருப்பி செலுத்தும் திறன் முடிவு செய்யப்படுகிறது.

    * அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதிதராததால் சொந்த நிதியை மாநில அரசு பயன்படுத்துகிறது.

    * ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது.

    *சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    * தமிழக அரசின் நிதி நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது.

    * பரந்தூர் விமான நிலையம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது.

    * பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னை விமான நிலையம் மட்டும் போதாது.

    * எதிர்கால போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு உட்கட்டமைப்பு தேவைகள் அவசியமாகின்றன.

    * எதிர்காலத்தில் தொழிற்புரட்சிக்கு வித்திடும் ஒன்றாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும்.

    * பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய் அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு கூறலாம்.

    * போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றார். 

    • திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
    • பொதுமக்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்:

    இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய கடைசி கட்ட போரை மையமாக கொண்டு ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் "போர்க் களத்தில் ஒரு பூ" என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்தார்.

    கடந்த 2012-ம் ஆண்டு உருவான இந்த படத்திற்கு மத்திய சினிமா தணிக்கை குழு தடை விதித்து உத்தர விட்டது.

    இந்த சினிமாவில் பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்ப தாகவும், அதன் காரணமாக திரைப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு உள்ள தாகவும் விளக்கம் அளித்தி ருந்தது. இருந்தபோதிலும் இந்த படத்தை திரையிடுவ தற்கான முயற்சிகளை தயாரிப்பாளர் கணேசன் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

    பல்வேறு தடைகளை தாண்டி போர்க்களத்தில் ஒரு பூ படத்தை 2025-ல் வெளியிடலாம் என்று கூறி மத்திய அரசு அனுமதி அளித்தது.

    இதையடுத்து ராஜபாளையம் பாலாஜி திரையரங்கில் இன்று அந்த படம் வெளியாக இருந்தது. இதையொட்டி படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ம.தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பினருக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மீண்டும் அந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் தமிழக அரசுக்கு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் படம் வெளியாக இருந்த ராஜபாளையம் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வி, அசோக்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் படம் வெளியாக இருந்த திரையரங்கம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக படம் திரையிடுவதை தவிர்த்தனர். இருந்த போதிலும் திரையரங்கம் முன்பு திரண்டிருந்தவர்கள் படத்தை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய அரசின் தடை உத்தரவு குறித்து எடுத்துக்கூறி அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

    இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் இன்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம்.
    • பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஆண்டாள் தாயார் அவதரித்த இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நீராட்டு உற்சவம் பகல் பத்து என்று அழைக்கப்படும் திருமொழி திருநாளும், அதனைத்தொடர்ந்து ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாளும், முடிவில் ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவமும் நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டு மார்கழி மாத நீராட்டு உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பச்சைப் பரப்புதல் மற்றும் காலை, இரவு வேளைகளில் ஆண்டாள் ரெங்க மன்னார் வீதி உலா, அரையர் வியாக்ஞானம், திருவாராதணம், பெரிய பெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதன் முடிவில் பகல் பத்து திருவிழா நிறைவு பெற்றது.

    ராப்பத்து என்று அழைக்கப்படும் திருவாய் மொழி திருநாள் இன்று (10-ந்தேதி) தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அர்ச்சர்கள் பாலாஜி பட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், கிச்சப்பன், பிரசன்ன வெங்கடேஷ் அய்யங்கார், சுதர்சன், மணியார் அம்பி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதையடுத்து பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் காலை 6.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதனை கடந்து வந்தனர்.

    அப்போது அவர்களுக்கு எதிரே வேதாந்த தேசிகர் ராமானுஜர், பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர்ந்து நின்று மங்களாசாசனம் செய்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்க மன்னார் ராப்பத்து மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு திருவாராதணம், அரையர் வியாக்ஞானம் சேவகாலம் தீர்த்த விநியோ கம் கோஷ்டி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இத னைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் தொடங்கியது.

    சொர்க்கவாசல் திறப்பு விழாவில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமி கள் உட்பட பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல் சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்க ளும் சொர்க்கவாசலை கடந்து சென்று வழிபட்டனர்.

    • விஜயகாந்தின் நினைவாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க உள்ளோம்.
    • யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த விழாவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வந்தனர். வரும் வழியில் விஜயகாந்தின் சொந்த ஊரான ராமானுஜபுரத்தில் கட்சிக்கொடியை அவர்கள் ஏற்றினர். பின்னா் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விஜயகாந்த் பிறந்து வளர்ந்த ஊரான ராமானுஜபுரத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து உள்ளோம். அதே இடத்தில் விஜயகாந்தின் நினைவாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க உள்ளோம்.

    கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கவர்னரும், ஆளுகின்ற அரசும் இணைந்துதான் செயல்பட்டனர். தற்போது இவர்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சனை. யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக சென்றால் நாட்டுக்கு நல்லது. இதில் இருவரும் எங்கள் பக்கம்தான் நியாயம் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கான தீர்வை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும். வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணி சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
    • தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது. இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்றும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் ஏதும் செய்து விட்டீர்களா? என்றும் பேசியிருக்கிறார்.

    அரசின் ஒரு தவறைக்கூட சுட்டிக் காட்ட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை 48 மணி நேர சோதனையை நடத்தியது.

    தற்போது பட்டாசு தொழிலாளர்கள் பதறிப் பயந்து போய் வேலை செய்வதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

    தி.மு.க. அரசால் தான் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது. அதேபோல் நெசவு தொழிலாளர்களுக்கு போதிய அளவில் நூல் கிடைக்கவில்லை, விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்கள் வருகிற தேர்தலில் சரியான பாடம் புகட்டு வார்கள்.

    தமிழகத்தில் 234 தொகுதி களில் 200 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றும் என்று பேசி வருவது சரியல்ல. 200 தொகுதிகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.

    மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக தி.மு.க. ஓட்டுகள் தான் சிதறும். அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் வராது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு.
    • மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

    பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு. இரவு நேரத்தில் பக்தர்கள் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×