என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தற்போது அதிக அளவில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடராமல் இருக்க போலீஸ் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு அரசு விதிமுறைப்படி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் பகல் 10 மணிக்கு பின்னர் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற நிலை இருப்பதால் குடிமக்கள் வசதிக்காக பார்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சில பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து தற்போது பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது குறைந்துள்ளது.

    ஆனால் குடிமக்கள் பகல் நேரங்களில் போதிய மதுபாட்டில்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதனால் பலர் மது பாட்டில் களை வாங்கி பொது இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். தற்போது ஒரு படி மேலே சென்று சில பெட்டிக்கடைக்காரர்கள் தங்கள் பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது போல் சாதாரணமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கட்டிங் அளவுகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று விற்பனை குடிமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குடிமக்கள் தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதை காட்டிலும் பெட்டிக்கடைகளில் கட்டிங் முறையில் மதுவகைகளை வாங்கி குடிப்பதை அதிக அளவில் விரும்பி வருகிறார்கள்.

    மதுவிற்பனைக்கு அரசு கால நிர்ணயம் செய்து இருக்கும் நிலையில் சிவகாசி பகுதியில் மட்டும் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது குற்றச்சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

    எனவே விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சிவகாசி பகுதியில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை செய்வதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுவிலக்கு போலீஸ் பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சிவகாசி பகுதியில் சோதனை செய்து வெளிமாநில மதுவிற்பனையையும், பெட்டிக்கடைகள் மற்றும் பார்களில் மதுவிற்பனை செய்வதை தடுத்து வந்தனர்.

    எனவே மது விற்பனை நடைபெறுகிறதா என பெட்டிக்கடைகளில் மதுவிலக்கு போலீசார் மீண்டும் சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு மது விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வத்திராயிருப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

    இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நெற்கதிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஜய முருகன், விவசாய சங்க தாலுகா செயலாளர் மணிக்குமார் மற்றும் ராஜ்குமார், முத்துராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதம் விஜய், அருண் குமார் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் அம்பலபுளி பஜார், மீனாட்சி தியேட்டர் அருகே மற்றும் பூபால்பட்டி தெரு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற பூபால்பட்டி தெரு சுரேஷ்குமார் (வயது 49), எஸ்.பெருமாள் (60), வி. பெருமாள் (65) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வத்திராயிருப்பு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அங்கன்வாடி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டையில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை தாங்கினார். கிளை தலைவர் பொண்ணு லட்சுமி, செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கீதா வரவேற்றார்.

    இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட இணைச்செயலாளர் சாராள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

    அதேபோல . ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சமூக நலத்துறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய புது தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 35). பந்தல் தொழிலாளி. இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது தாயார் அருகே உள்ள கடைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி விட்டு, அதன் அருகே சாவியை வைத்துவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை திறந்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில்இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் அடுத்து வர உள்ள தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் விஸ்வநத்தம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இந்த கூட்டத்துக்கு இப்பகுதியில் இருந்து பெண்கள் அதிகளவில் வந்த கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்க போகிறீர்கள்.

    இங்கு வந்த பெண்கள் அ.தி.மு.க. ஆட்சியின் பாதிப்பை மற்ற பெண்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

    இந்த பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க. அரசில் கடந்த 10 ஆண்டுகளாக மந்திரியாக இருக்கிறார். ஆனால் தொகுதிக்கு அவர் எதுவும் செய்ய வில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று இன்றே நீங்கள் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அதற்கு சாட்சி தான் இங்கு கூடி உள்ள பெண்களின் கூட்டம்.

    தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இனி எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் தான் முதல்-அமைச்சர். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் ஊழல் தான் அதிகரித்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்று எதையும் கூற முடியவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயம் பாதித்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் ஸ்டாலின் மட்டும் தான்.

    தேர்தல் வருவதால் பட்டாசு தொழிலுக்கு வாரியம் அமைத்துள்ளது அ.தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சியில் தான் பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தி.மு.க.வினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

    கூட்டத்தில் தென்காசி எம்.பி. தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்) , வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகர பொறுப்பாளர்கள் உதயசூரியன் (திருத்தங்கல்), காளிராஜன் (சிவகாசி), மதர்ஸ் கே.வி.கந்தசாமி, சுக்கிரவார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம், சாகுல்அமீது, திலிபன்மஞ்சுநாத், வெயில்முத்து, உசிலை தங்கராம், எஸ்.என்.புரம் பாண்டீஸ்வரன், பிரவீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் விஸ்வை கணேசன் நன்றி கூறினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து 408 பேருக்கு பரிசோதனை செய்ததில் 16,513 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் 16,230 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,628 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,522 ஆக உயர்ந்துள்ளது.

    1,997 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3,600- க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை இருந்தது. மாவட்டத்தில் கடந்த வாரம் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக எந்த பகுதியும் அறிவிக்கப்படாத நிலையில் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் நோய் பாதிப்பு பற்றிய உண்மை நிலையை அறிய முடியவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவப்பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் போது முழுமையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகரில் இன்று அதிகாலை கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிராவல்ஸ் அதிபர் உடல் கருகி பலியானார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் குருநாதன் (வயது 33). டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மதுரைக்கு சவாரி செல்வதற்காக குருநாதன் தனது டாடா சுமோ காரில் புறப்பட்டார்.

    எரிச்சநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியானது.

    இதனைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் உடனே காரில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் கார் கதவை திறக்க முடியவில்லை.

    ஒருபுறம் அவர் கதவை உடைத்து திறக்க முயலும் நேரத்தில் காரில் தீ மளமளவென பரவிக் கொண்டிருந்தது.

    தீ விபத்தால் பதட்டத்தில் இருந்த குருநாதன் செல்போன் மூலம் தனது தந்தை முனியாண்டியை தொடர்பு கொண்டு கார் தீ விபத்துக்குள்ளானதும், தான் உள்ளே சிக்கியிருப்பதாகவும் அலறினார்.

    உடனே அவரது தந்தை முனியாண்டி ஆட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. காருக்குள் குருநாதன் தீயில் கருகி இறந்த கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மகன் இறந்ததை கண்டு முனியாண்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    ராஜபாளையம்:

    எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜி பேசியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இந்த இயக்கத்தை துடிப்போடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு கரண்டு கட்டே இல்லை. அ.தி.மு.க. தமிழுக்காக, வாழ்கின்ற கட்சி.

    தி.மு.க.வும், காங்கிரசும் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நாங்கள் தான் தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கிற இயக்கம் என கூறுகின்றனர். இதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்த கட்சி காங்கிரஸ். அதனை மீட்ட கட்சி அ.தி.மு.க. என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

    தி.மு.க. ஆட்சியை மக்கள் மறந்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கின்றார். தேர்தல் வரட்டும், தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.க. எழுச்சியோடு தேர்தலை எதிர்நோக்கி செல்கிறது.

    தை பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் எடப்பாடியார் அலை, அ.தி.மு.க. அலை வீசுகின்றது. அ.தி.மு.க. வேட்பாளர் யாராக இருந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களிலும் நேற்று 675 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    விருதுநகர்:

    நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 80,406 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    16,219 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 16,512 ஆக உயர்ந்துள்ளது.

    2,148 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. தடுப்பூசி மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களிலும் நேற்று 675 பேருக்கு போடப்பட்டது கிட்டத்தட்ட திட்டமிடப்பட்டதில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இதுவரை 1,544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அடுத்து வரும் நாட்களில் திட்டமிட்டபடி தினசரி 700 பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் குறைந்த அளவிலேயே உள்ளது.
    விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனி (வயது 49). இவர் நேற்று தனது நண்பருடன் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள இடத்தில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா (25), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி (26) ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 200 பறித்ததுடன், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஆலங்குளம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). இவர் சம்பவத்தன்று சுண்டங்குளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார். ஆலங்குளம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது சின்னக்காமன்பட்டியை சேர்ந்த மாரிச்சாமி என்பவர் வந்த சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கருப்பசாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் சப் - இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மாரிச்சாமியை கைது செய்தனர்.
    ×