என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது.
    • கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இக் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது. இதையடுத்து இரவு 11.30 மணிக்கு உற்சவர் அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு.

    விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 14ம் தேதி விர அவகாசம் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

    அமைச்சர் பொன்முடி வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்களாக சேர்க்கப்பட்டு இதுவரை 51 சாட்சியம் பெறப்பட்ட நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இதனால் கூடுதல் சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழகத்தினை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு 6 நாட்களை கடந்த நிலையில், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் மாநாடு நடைபெறும் இடத்தில் மாநாட்டு மேடை எவ்வளவு நீளம், அகலத்தில் அமைக்கப்படுகிறது. எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள் அவர்களுக்கு இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது. 85 ஏக்கர் நிலம் குத்தகை பெறப்பட்டுள்ளதால் அவர்களிடம் உரிய அனுமதிக்கான கடிதம் எத்தனை நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை டி.எஸ்.பி. சுரேஷ் விக்கிரவாண்டி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டிற்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

    மாநாட்டிற்கு அனுமதியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது.
    • கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ரூ.17 ஆயிரத்து 616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மருத்துவக்கல்லூரிகள் 13-ல் முதல்வர்கள் பணி காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது. உடனே நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ந்தேதியே பா.ம.க வலியுறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக்கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இனியும் தாமதிக்காமல் முதல்வர் நியமிக்கவேண்டும்.



    தமிழகத்தில் சன்ன அரிசி ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் தேவையாக உள்ளது. ஆனால் 72 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.

    ரூ. 2 லட்சத்துக்கு 2 1/2 ஆண்டுகளில் ரூ.2.26 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மாதத்திற்கு 300 சதவீதமாகும். கந்துவட்டி திமிங்கலத்துடன் காவல்துறை இணைந்து செயல்படுவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடுமையான கந்துவட்டி சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும்.

    தமிழகத்தில் மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்துகிறார்கள். 10 பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுகொள் என்று அரசு சொல்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.
    • 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக முதலில் திருச்சி, மதுரையில் இடங்களை பார்வையிடப்பட்டது. அங்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை எழுந்ததால் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இங்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இங்கு மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்காக 3 வழிகளும் வெளியே செல்வதற்காக 3 வழிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது.

    இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், மாநாடுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவத்திலும் மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சாலைக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மேற்கொண்டார்.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா? பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநாடு நடத்த போதிய இடவசதிகள் இருக்கிறதா? என்பதை குறித்து பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உடனிந்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, `விஜய் கட்சி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கை காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மாநாடு நடத்த அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
    • விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.

    முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.

    அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

    சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.

    அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.

    தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    • குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருவகரையை சேர்ந்தவர் கஸ்பர். இவரது மகள் அலானா(வயது6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

    அலானா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து வானூர் போலீசாருக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி அலானா உடலை மீட்டனர்.

    இது குறித்து வானூர் இன்ஸ்பெக்டர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவக்கரை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது. கல் எடுத்து பின் அதனை மூடாமல் விட்டு சென்றதால் அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் பலர் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நள்ளிரவு நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    கடலூர் மாவட்டம் ராசாபாளையத்தை சேர்ந்தவர் கணேசன்( வயது 31 ).இவர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். நேற்று இரவு இவர் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழி எண் 4-ல் பணியில் இருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றுக்கு சுங்கவரி செலுத்துவதற்காக பணியில் இருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோர் கார்டிரைவரிடம் சுங்கவரியை வசூலித்துக் கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அதே மார்க்கத்தில் ஒரு லாரி காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது, மேலும் அதே திசையில் வந்த முட்டை லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துசுங்கச்சாவடி வழி எண் 4-ல் வரி செலுத்த நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் நின்று கொண்டிருந்த லாரி, காரின் மீது மோதி அங்கு வரி வசூல் செய்து கொண்டு இருந்த கணேசன், மணிகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காங்கேயம் பகுதியை சேர்ந்த முத்துக் குமாரை (வயது29) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் ஊழியர்கள் அங்குள்ள பூத்தில் அமர்ந்து பணி செய்யாமல் வெளியில் நின்று பணி செய்வதால் இச்சம்பவம் நடந்ததாகவும், சுங்கச்சாவடியில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு இதற்கு காரணம் என்று அங்கு பணி செய்யும் மற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    விபத்தில் பலியான கணேசனுக்கு அஞ்சலை தேவி என்ற மனைவியும் ஹரிஷ் என்ற மகனும் ரித்திஷா என்ற மகளும் உள்ளனர். சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலின் உண்டியலை உடைத்து உண்டியலிலிருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னியம்மன் கோவில். நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கோவிலின் உள்ளே இருந்த ஒரு பவுன் வேல் மற்றும் 1¼ பவுன் தாலியை திருடி சென்றுள்ளனர்.

    மேலும் கோவிலின் உண்டியலை உடைத்து உண்டியலிலிருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இதே போல் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். நள்ளிரவில் ஆஞ்சநேயர் கோவிலுக்குள் சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு உண்டியலில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே தரைப்பாலம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை இரவு 2 மணி வரை வெளுத்து வாங்கியது. பின் மறுபடியும் 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை காலை 6 மணி வரை விடாமல் பெய்தது. இதனால், விழுப்புரம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் 6 ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே தரைப்பாலம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது . அப்பகுதியிலும் ராட்சத மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கோலியனூரில் 7 சென்டி மீட்டரும் வளவனூரில் 6.4 சென்டிமீட்டரும் கெடாரில் 9 சென்டிமீட்டரும், முண்டியம்பாக்கத்தில் 4.6 சென்டிமீட்டர் நேமூரில் 3.6 சென்டி மீட்டரும், கஞ்சனூரில் 3.8 சென்டி மீட்டரும் சூரப்பட்டு 8.5 சென்டிமீட்டரு ம்வானூரில் 5.1 சென்டிமீட்டரும் திண்டிவனத்தில் 12.7சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    கடலோரப் பகுதியான மரக்காணத்தில் 10.8 சென்டிமீட்டரும், மலைப்பகுதியான செஞ்சியில் 14.2 சென்டிமீட்டர் மழையும் வளத்தியில் 7.2 சென்டிமீட்டர் திருக்கோவிலூர் அருகே உள்ள மணபூண்டியில் 2.8 சென்டிமீட்டரும், முகையூரில் 10.5 சென்டிமீட்டர் மழையும் திருவெண்ணைநல்லூரில் 3.சென்டிமீட்டர் மழையும் அரசூரில் 1.6.சென்டிமீட்டர் குறைந்தபட்சம் மழையாக பெய்துள்ளது . மாவட்டத்தில் சராசரியாக 7.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம் , பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, கருங்காளிப்பட்டு, சாலையகரம், கண்டமங்கலம், வழுதாவூர் அரசூர், பொய்கை அரசூர், நன்னாடு, அய்யூர்அகரம், முண்டியம்பாக்கம், கொசப்பாளையம், ஓரத்தூர் ஆகிய இடங்களிலும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மரக்காணம் அருகே கந்தாடு, காணிமேடு, மந்தகப்பட்டு, வெள்ளக்கொண்டாபுரம் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அனுமந்தை, ஆலத்தூர், பிரம்மதேசம், எண்டியூர், கீழ்புத்துப்பட்டு சுற்றியுள்ள 60 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மரக்காணம் உப்பளம் சுமார் 3500 ஏக்கர் உள்ளது தொடர்ந்து பெய்த மழையால் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், இங்கு 3500 ஊழியர்கள் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்லது. மேலும் மரக்காணம் பகுதிகளில் 11 மின்கம்பங்கள் சரிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதே போல் வாழை மரங்கள், மாமரம், தென்னை மரங்கள், மரவள்ளி கிழங்கு மற்றும் நெற்பயிர் போன்ற தாவரங்கள் மழையில் பாதிப்படைந்துள்ளது.

    • சேறும்-சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
    • சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் ஊராட்சி துலுக்கபாளையம் கிராமத்தில் கிழக்குத் தெரு, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் சாலையிலேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சேற்றின் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சேறும்-சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேறும், சகதியுமாக உள்ள இந்த தெருவில் உரம் போட்டு நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சாலையை சீரமைக்க விட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக நீச்சல் அடிக்கும் போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
    • பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதலமைச்சர் ரூ.6100 கோடி மூதலீடு ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.

    வன்னியகளுக்கான இட ஒதுக்கீட்டில் தி.மு.க.வின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரி இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த தி.மு.க. தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான தமிழைத்தேடி என்று சென்னை முதல் மதுரை வரை பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் பலகை தமிழில் உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.

    சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாரின் சோதனையில் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது. காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.

    மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கத்தக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

    கந்து வட்டி கொடுமையால் திருப்பத்தூரில் தாய் , மகள் இருவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் கணவர் ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும்.

    தமிழகத்தின் உண்மையான மேம்பாடும், அமைதியையும்பெற அனைத்து சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். இதுவே வலிமையான, வளமாக, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.

    இட ஒதுக்கீடு ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும். வக்பு வாரிய சட்டம் திருத்தம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×