அவதூறு பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- சி.வி.சண்முகம்

தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொள்வதாக வதந்தி.
அவதூறு பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- சி.வி.சண்முகம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று மாலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விழுப்புரம் சைபர்கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரனிடம் புகார் மனு கொடுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொண்டு பேசப்போவதாக சில கருத்துக்களை பேஸ்புக், எக்ஸ், வாட்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவல் ஆகும்.

திட்டமிட்டே என்மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இதுபோன்ற குற்ற செயல்களை செய்துள்ளனர். இந்த பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் என் மீது எத்தனையோ பொய் வழக்கு, எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது, அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது.

இதுவரை விழுப்புரம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 23 புகார்களை கொடுத்துள்ளேன். ஆனால் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்மீது தொடா்ந்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com