என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
    • உள்ளூர் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்டு 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு 9ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

    • பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
    • பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கோவில் கடலானது அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சில மணி நேரங்கள் உள்வாங்கி காணப்படுவதும், பின்னர் இயல்பு நிலை திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இன்று அமாவாசை என்பதால் கோவில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

    கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது. பச்சை நிறத்தில் எழில் மிகு தோற்றத்தில் காட்சியளித்த பாறைகளை பக்தர்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.380 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனால் விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்த விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும்.

    விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விமான நிலைய முகப்பு பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மற்றும் அங்குள்ள மத்திய பாதுகாப்பு படையினரும் உடன் இருந்தனர்.

    பிரதமர் தூத்துக்குடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் இன்று தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

    மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.

    தொடர்ந்து தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்கின்றனர். பிரதமர் வருகையொட்டி இன்று முதல் நிகழ்ச்சி நடைபெறும் 26-ந் தேதி வரை தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் மரைன் போலீசார், இந்திய கடலோர காவல் படை, கடற்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • விமான நிலைய பகுதியில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில் மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

    மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி 26-ந்தேதி (சனிக்கிழமை) இரவு அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

    மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக தூத்துக்குடிக்கு வர இருக்கிறார். 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முன்னதாக 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டு ஒருநாள் முன்னதாக 26-ந்தேதியே தமிழகத்துக்கு வருகிறார். அன்று இரவு 8 மணி அளவில் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.

    விமான நிலைய பகுதியில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் புதிதாக கட்டப்பட்டு உள்ள விமான பகுதிக்கு செல்கிறார்.

    தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.



    தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருக்கு மட்டும் 9 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விமான நிலையம் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் இரவு நேர விமான சேவையையும் தொடங்க முடியும்.

    இதற்காக விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்து வந்த விமான நிலைய ஓடு பாதை தற்போது 3 ஆயிரம் மீட்டர் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு வேறு சில நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    அங்கு நடக்கும் விழாவில் ரூ.2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழி சாலை, ரூ.200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மயமாக்கப்பட்ட ரெயில் பாதை மற்றும் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி ரெயில் பாதை இரட்டிப்பு ஆக்குதல் (21 கிலோ மீட்டர் தூரம்) ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மேலும் ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய விமான நிலையத்தின் ஆணைய தலைவர் விபின் குமார் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், விமான நிலைய அதிகாரி சுரேஷ், சரத்குமார், அனில்குமார், விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) காட்வின், திட்ட இயக்குனர் பாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்க தன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு 9.30 மணிக்கு பிரதமர் மோடி இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அன்று இரவு அவர் திருச்சியில் தங்குகிறார்.

    மறுநாள் (27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை அவர் திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார். அங்குள்ள சிவாலயத்தில் ராஜேந்திர சோழ மன்னனின் திருவாதிரை பிறந்த நாள் விழா நடக்கிறது.

    விழாவில் பங்கேற்பதற்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. ரோடு ஷோ முடிந்ததும் அவர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சாதாரணமான முறையில் சந்தித்து நலம் விசாரிப்பார். இதையடுத்து அவர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பார்.

    விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிறகு இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

    விழாவில் ஆதீனங்கள், சாதுக்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை முக்கிய விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு அவர் தஞ்சை பகுதிக்கு செல்வாரா? அல்லது டெல்லிக்கு செல்வாரா? என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    • இன்று ஆடி கிருத்திகை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
    • ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் நாளாகும். இந்த நாள் மிக சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

    அதுவும் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகனை வழிபடக்கூடிய உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஜதீகம்.

    அந்த வகையில் இன்று ஆடி கிருத்திகை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். வழக்கமாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு ஜெயந்திரநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
    • சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தது.

    பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளி குகை திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுமார் 6 மாத காலமாக அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முதல் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அங்குள்ள சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர். 

    • அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடக்கிறது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.

    தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது. காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, தொடர்ந்து அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப் படிப்பு,பணிவிடை 5மணிக்கு புஷ்ப வாகன பவனி, தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை பால் அன்ன தர்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகன பவனி நடக்கிறது

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தர்மம், 9மணிக்கு அன்ன தர்மம், நடக்கிறது. அன்று இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், சுதேசன், இணைத்தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
    • சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவில், "தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!

    எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!

    சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சக்திவேல் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அதன் உறுதிமிக்க தொண்டர்களால் உருவானது. அவர்களே கழகத்தின் முகவரி. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் பல ஆண்டுகளாக மக்கள் சேவை புரிந்து, கழகத்தின் அடையாளமாய் திகழும் திரு. சக்திவேல் அவர்களின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தேன்.

    கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களும் தொலைபேசி வழியாக அவரிடம் பேசி ஊக்கமளித்ததோடு, கழகம் என்றும் துணைநிற்கும் என உறுதியளித்தார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • வழக்கமாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பாக நடந்துவருகிறது.
    • பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர் கடல் வழக்கமாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பாக நடந்துவருகிறது. அந்த வகையில் ஆனி மாத பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே சுமார் 80 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாசி படிந்த பாறைகள் மீது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஆனாலும் கோவில் அருகில் கடல் இயல்பான நிலையில் உள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வருகின்றனர்.

    • ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
    • எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:

    இனிமேல் எந்த காலத்திலும் பா.ஜ.க.வோடு நாங்கள் கூட்டணி சேர மாட்டோம், அவங்க தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவிட்டு, போன தேர்தலில் அவங்க கூட கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி தேர்தல் வியூகம் அமைக்கிறோம் என்று சொல்லி யார் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்களை விட மிகப்பெரிய துரோகிகளாக அ.தி.மு.க. அவங்ககூட போய் சேர்ந்துவிட்டது.

    அதனால் தான் அவர்களை வீடு வீடாக போய் அடையாளம் காட்டக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

    அதேநேரத்தில் இத்தனை தாக்குதல்கள்... ஒன்றிய அரசாங்கம் நம் தமிழ் அடையாளங்கள் மீது நம்முடைய சரித்திரத்தை மாற்றணும், மொழியை மாற்றணும், ஏன் 39 பேர் பாராளுமன்றத்தில் நின்னு தமிழ்நாட்டுக்காக சண்டை போடுறாங்க என்ற காரணத்திற்காக தொகுதி சீரமைப்பு என்று சொல்லி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை குறைக்க நினைக்கக்கூடிய ஒரு பா.ஜ.க. அரசு ஆட்சி நடக்கிறது.

    இன்று 39 பேராக இருப்பது நாளை 20 பேராக குறைந்தால் அவ்வளவு பெரிய மன்றத்தில் நாம் பேசுவது எடுபடாது. அதனால் அந்தநிலையை நாம் அடைந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றவர் நம் முதலமைச்சர்.

    ஆனால் அதை செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்.

    அதை செய்ய வேண்டும் என்றால், நமக்காக போராட வேண்டும் என்றால் உங்களுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது புரிய வேண்டும்.

    ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.

    புதிதாக அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருவேன் என்று நினைத்து எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.

    ஆட்சி மாற்றம் டெல்லியில் வரும்போது செய்து தருகிறோம் என்று சொன்னோம்.

    வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் எல்லாம் இன்று தேர்தலில் நிற்பதற்கு, வாக்கு கேட்பதற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

    அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு சென்று, அதே நேரத்தில் நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீடி இலைகளை கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டை மலை காட்டுப் பகுதி கொம்புத் துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்டதும் அந்த வழியாக லாரியில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்திய போது அதில் கொண்டு வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 68 மூட்டைகளில் பீடி இலைகள் மொத்தம் 2ஆயிரத்து 250 கிலோ இருப்பதும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து பீடி இலைகளை கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.

    • காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2 நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன.

    நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதுதவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கின்றது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.



    பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன. இதன் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் நேற்று நேரில் பார்வையிட்டார்.

    மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ×