என் மலர்tooltip icon

    சேலம்

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு ஆயிரத்து 827 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 66.91 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 67.06 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.22 டி.எம்.சி.யாக உள்ளது.

    • அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
    • நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது. மேலும் சில ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பழனியம்மாள் குடும்பத்தினர் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை துறையினர். உயிரிழந்த 8 ஆடுகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்த ஆடுகளுக்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர்.
    • பாத்திமா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர்.

    காதல் திருமணம்

    இவர் அதே பகுதியை சேர்ந்த நிஷா என்ற பாத்திமா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வந்தனர். கடந்த 1-ந் தேதி அசேன் வீட்டில் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்து அசேனை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது.

    காதல் மனைவி தாயுடன் கைது

    இது தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவருடைய மனைவி நிஷாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது, தன்னுடைய தாய் ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து அசேனை கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நிஷா, ரஜியா, சகிராபானு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    திடுக்கிடும் தகவல்

    இந்த கொலை எதற்காக நடந்தது என விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    அசேனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். தொடர்ந்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தினம், தினம் கணவர் செய்யும் டார்ச்சரால் சகித்துக் கொண்டு வாழ்வதை விட அவரை தீர்த்துக்கட்டி விட்டு நிம்மதியாக வாழலாம் என நிஷா கருதியதாக தெரிகிறது.

    கழுத்தை இறுக்கினர்

    சம்பவத்தன்று அசேன் மீண்டும் நிஷாவிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்துள்ளார். இதை தடுக்க சென்ற மாமியார் ரஜியாவையும் தாக்கி உள்ளார். உடனே அவர்கள் பதிலுக்கு அசேனை தாக்கி உள்ளனர். தொடர்ந்து நிஷா தனது தாய் ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து சேலையால் அசேன் கழுத்தை இறுக்கி உள்ளதாக தெரிகிறது. இதில் அசேன் பரிதாபமாக இறந்தார்.

    இதனை அறியாத அவர்கள், அசேன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்த பிறகுதான் அசேன் இறந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து கைதான நிஷா, ரஜியா, சகிராபானு ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேலும் தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் வனப்பகுதிகள் மற்றும் மலை பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    அதிகரிக்கும் நீர்மட்டம்

    மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஏற்காடு

    குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மேலும் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கிறது. தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தாலும் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். தொடர் சாரல் மழை மற்றும் பனி மூட்டம், கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • சேலம் மாவட்ட அளவிலான கட்கா விளையாட்டு போட்டி சேலம் தமிழ்சங்க நூலக கட்டிட மாடியில் நடந்தது.
    • இந்நிலையில் சேலத்தில் இன்று மாவட்ட அளவில் நடந்த போட்டியை செந்தில் பப்ளிக் பள்ளி தாளாளர் தீப்தி தனசேகர் தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவிலான கட்கா விளையாட்டு போட்டி சேலம் தமிழ்சங்க நூலக கட்டிட மாடியில் நடந்தது.

    பஞ்சாப் மாநில பாரம்பரிய கலையான கட்கா விளையாட்டு தற்போது தமிழகத்தில் பிரசித்தி பெற்று வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று மாவட்ட அளவில் நடந்த போட்டியை செந்தில் பப்ளிக் பள்ளி தாளாளர் தீப்தி தனசேகர் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் டாக்டர். சவுந்தரராஜன், திலகம், உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

    இந்த விளையாட்டிக்கான ஏற்பாடுகளை கட்கா விைளயாட்டு சங்க மாவட்ட செயலாளர் மாங்க் பிரசாத் செய்திருந்தார். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

    • சென்னையில் முழுமையான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கலாம்.
    • சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    சேலம்:

    ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் முழுமையான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கலாம். தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை இல்லை. நிறைய திடங்களுக்கு நிதி இல்லாமல் தள்ளாடுவதாக இந்த அரசு தெரிவிக்கிறது.

    அம்மா உணவகம்

    சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால் தரமான உணவு அம்மா உணவகத்தின் மூலமாக சென்னையில் வசிக்கிற மக்களுக்கு கிடைக்கவில்லை. பல அம்மா உணவகங்கள் மூடப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

    நிதி

    ஏழை, எளியோர் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் அவர்கள் உணவு அருந்துவதற்கான தொடங்கப்பட்ட திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் கடந்த 18-ந் தேதி உடல் நல குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கடந்த 18-ந் தேதி உடல் நல குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சுகவனேஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் சுகவனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அப்போது விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி தங்க தேரை இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் தனசேகர், துணைச்செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணன், கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம், கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் எம்.பி.விஜய், அம்மாபேட்டை பகுதி செயலாளர் செல்வகுமார், சேலம் ஒன்றிய செயலாளர் அப்பாவு, பேரூர் செயலாளர் கார்த்தி மற்றும் செவ்வாய்பேட்டை நிர்வாகிகள் குணசேகர், கார்த்தி, வார்டு நிர்வாகிகள் செல்வம், ஆசைத்தம்பி, கிருஷ்ணன், விஷ்வா, பாபு, ஷபி, சம்பத், முனியப்பன், ஏழுமலை, முருகன், சக்திவேல், ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
    • மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    * கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?

    * மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?

    * கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

    * அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது

    * மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    * கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?

    * சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.

    * பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

      ஏற்காடு:

      சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது.

      ஒப்புதல்

      இக்கூட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவீனங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டது.

      கூட்டத்தில் வட்டார கல்வி அதிகாரி ஏற்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடங்கள் சில பழுதடைந்து காணப்படுவதாகவும், அதை சரிசெய்து கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தார்.

      தொடர்ந்து உறுப்பினர்கள் ஏற்காட்டில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், இனிவரும் நாட்களில் அந்த பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.

      வரவு- செலவு கணக்கு

      தொடர்ந்து வரவு , செலவு அறிக்கையை கணக்காளர் செந்தில் வாசித்தார். இதையடுத்து ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை உறுப்பினர்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

      இக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் அன்புராஜ், மேலாளர் கென்னடி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோகிலா, சின்னவெள்ளை, கலைவாணி, வருதாயி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

      முடிவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் நன்றி தெரிவித்தார்.

      • அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோமதி (29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.
      • மனமுடைந்த கோமதி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோமதி (29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.

      இவருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த இடையப்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 1 1/2 வயதில் சர்வஜித், சஸ்த்விகா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

      தொழில் நஷ்டம்

      திருப்பூரில் சிறு தையல் நிறுவனம் நடத்தி வந்த பிரகாஷூக்கு கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். மீண்டும் திருப்பூருக்கே சென்று தொழில் செய்ய விரும்பிய பிரகாஷ் நேற்று திருப்பூருக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

      விஷம் கொடுத்தார்

      இதில் மனமுடைந்த கோமதி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த உறவினர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். 3 பேரையும் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் கோமதியையும், ஆண் குழந்தை சர்வஜித்தையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

      உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சஸ்த்விகா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் கோமதி, சர்வஜித் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திருமணமான 3 ஆண்டுக்குள் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை வன்கொடுமை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ஆத்தூர் ஆர்.டி.ஓ., வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. விசாரணைக்கு ஏத்தாப்பூர் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

      குடும்பத்தகராறில் மனமடைந்த பட்டதாரிப் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      ×