இரட்டைக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பட்டதாரி இளம்பெண் தற்கொலை

அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோமதி (29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மனமுடைந்த கோமதி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோமதி, சர்வஜித்
கோமதி, சர்வஜித்
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோமதி (29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.

இவருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த இடையப்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 1 1/2 வயதில் சர்வஜித், சஸ்த்விகா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

தொழில் நஷ்டம்

திருப்பூரில் சிறு தையல் நிறுவனம் நடத்தி வந்த பிரகாஷூக்கு கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். மீண்டும் திருப்பூருக்கே சென்று தொழில் செய்ய விரும்பிய பிரகாஷ் நேற்று திருப்பூருக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விஷம் கொடுத்தார்

இதில் மனமுடைந்த கோமதி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த உறவினர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். 3 பேரையும் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் கோமதியையும், ஆண் குழந்தை சர்வஜித்தையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சஸ்த்விகா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் கோமதி, சர்வஜித் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 ஆண்டுக்குள் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை வன்கொடுமை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ஆத்தூர் ஆர்.டி.ஓ., வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. விசாரணைக்கு ஏத்தாப்பூர் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

குடும்பத்தகராறில் மனமடைந்த பட்டதாரிப் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com