என் மலர்
நீலகிரி
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேல் அட்டடி. அடர்ந்த வனப்பகுதியான இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதனையொட்டி குடியிருப்புகளும் அதிகம் உள்ளன.
உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் வனத்தைவிட்டு குடியிருப்புக்குள் அவ்வப்போது நுழைந்து விடுகின்றன. குடியிருப்புக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கீழ் அட்டடிப்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை மேல் அட்டடி பகுதியில் உள்ள ஒரு ஒற்றையடி பாதையில் நடந்து சென்றார். அப்போது புதர்மறையில் இருந்த காட்டெருமை ஆவேசமாக ஓடிவந்து ரஞ்சித்தின் வயிறு மற்றும் தொடை பகுதியில் தாக்கியது. பின்னர் கொம்பில் ரஞ்சித்தை சூழற்றி 20 அடி பள்ளத்தில் வீசியது. இதில் குடல் சரிந்து ரஞ்சித் படுகாயம் அடைந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு அருகில் சென்று பார்த்தனர். சம்பவ இடத்திலேயே ரஞ்சித் ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து வெகுநேரமாகியும் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ்சோ, வனத்துறையோ சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்த பகுதிமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி, சிங்காரா உள்பட பல வனச்சரகங்கள் உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் சாலையாக திகழ்கிறது.
இதேபோல் கூடலூரில் இருந்து முதுமலை தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதனால் ஏராளமான சரக்கு லாரிகள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் புலிகள் காப்பகம் வழியாக இயக்கப்படுகிறது.
மேலும் வனவிலங்குகளும் காப்பகங்கள் வழியாகச் செல்லும் சாலைகளை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
இதை தடுக்க வன விலங்குகள் சாலையை கடக்கும் இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து தெளிவு இல்லாமல் காணப்பட்டது.
இதேபோல் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் முதுமலைக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தடைகள் விலக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி பராமரிப்பு இன்றி காணப்பட்ட விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகளை புதுப்பித்தல் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக (வரவேற்பு) வனச்சரகர் விஜயன் கூறும்போது, புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் அறிவிப்பு, விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகள் ஏராளமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்மழை உள்பட பல கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் விழிப்புணர்வு பலகைகள் தெளிவு இன்றி காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன விலங்குகள் குறித்து ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்வது வழக்கம். அதன் பின்பு சிறப்பு பூஜை செய்து வாகனங்களுக்கு மாலை அணிவிக்கின்றனர். இதில் வாழைக்கன்று, பூக்கள், கரும்பு, மா இலை முக்கியமாக இடம்பெறும். நீலகிரி மாவட்டத்துக்கு ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான கரும்பு, வாழைக்கன்றுகள் போன்றவை சமவெளி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
அதேபோல் நடப்பாண்டிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து 3 லாரிகளில் கரும்புகள் ஏற்றப்பட்டு நேற்று காலை ஊட்டிக்கு வந்தது. அதனை மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டில் வரிசையாக இறக்கி அடுக்கி வைத்தனர். பின்னர் ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கி சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனங்களில் வந்து கரும்புகளை கட்டு, கட்டாக வாங்கி சென்றதை காண முடிந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு கரும்புகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். மலைப்பிரதேசம் என்பதால் சமவெளி பகுதியில் இருந்து லாரிகளில் கரும்புகளை கொண்டு வர அதிக செலவாகிறது. இதனால் அவ்வப்போது கரும்பு விலை உயர்ந்து வருகிறது. எனினும் ஊட்டியில் விலை உயரவில்லை. ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும், ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில் நகராட்சி மார்க்கெட்டில் வைத்து கரும்பு விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஏ.டி.சி.யில் உள்ள காந்தி மைதானத்தில் வைத்து கரும்பு விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவளை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, அவளது அக்காள் கணவரான மணிகண்டன்(வயது 38) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று பந்தலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கூடலூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்தாள். அப்போது அவளை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(19) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள், காட்டெருமைகள் என பல வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை வனத்துறையினர் மீட்டு, பின்னர் தாயுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சில சமயங்களில் தாய் யானை கிடைக்காத பட்சத்தில் குட்டியானையை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வைத்து பராமரித்து வருகின்றனர். இதேபோன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடித்து வந்து, அதற்கு முறையாக பயிற்சி அளித்து கும்கியாக மாற்றுகின்றனர். கடந்த ஆண்டு வரை 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 2 மாத பெண் குட்டியானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆனதால் பெண் குட்டியானையை வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாகன்கள் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர். இதனால் செல்லப்பிள்ளையாக தெப்பக்காடு முகாமில் பெண் குட்டியானை வளர்ந்து வருகிறது. மேலும் அதன் சேட்டைகளை கண்டு வனத்துறையினர், பாகன்கள் தினமும் ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாகன் பொம்மன் கூறும்போது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வரும்போது மிகவும் மெலிந்த நிலையில் சிறிய குட்டியாக இருந்தது. பின்னர் ஊட்டச்சத்து மாவு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு ஆரோக்கியமாக உள்ளது. செல்லமாக அம்மு என்று பெயரிட்டு அழைத்து வருகிறோம் என்றார்.
குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகே நல்லப்பன் தெருவில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வந்து செல்கிறது.
நேற்று முன்தினம் இரவு அந்த சிறுத்தைப்புலி குடியிருப்புக்குள் புகுந்து ஒரு வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி வந்து செல்வதாலும், நாயை கவ்வி சென்றதாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி நாயை பிடித்து சென்றது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இரவில் வருவதால் வனத்துறையினர் கைகளில் தீப்பந்தம் ஏந்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குடியிருப்புக்குள் நடமாடி வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அதிகாரியும், இன்கோசர்வ் முதன்மை செயலாளருமான சுப்ரியா சாஹு, இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா குறித்த தகவல்கள் அடங்கிய www.nilgiriscovidcare.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனா என்றால் என்ன?, அதன் அறிகுறிகள்?, எப்படி பரவுகிறது?, அதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள்? போன்ற அனைத்து விவரங்களும் உள்ளன. மேலும் கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?, பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி? என்பன போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கான இ-பாஸ் பெறும் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளின் கூட்டு முயற்சியால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரவீந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன குன்னூரை பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த தோட்ட உரிமையாளர் இறந்த ஆண் யானையின் உடலை அங்கேயே யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதைக்கபட்ட யானையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.






