search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby elephant"

    • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

    காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

    இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

    தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும்.
    • குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவைகள் தொல்லையின்றி வாழ்வதற்கு ஏதுவான சூழலை கேரள வனத்துறை செய்துள்ளது. மேலும் உடல்நலம் பாதித்து அவதிப்படும் யானைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தேவையான சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக திரிந்து வருகிறது. அந்த குட்டி யானைக்கு தும்பிக்கை இல்லை. அந்த குட்டி யானையை 4 முறை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

    ஆனால் இதற்கு முன் பார்த்ததைவிட, தற்போது அந்த யானை மிகவும் சோர்வான நிலையில் திரிவதாக கூறப்படுகிறது. யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும். ஆனால் இந்த யானை தாயிடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருப்பதால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம்போல் உண்ண முடியாத நிலையில் இருக்கலாம் எனவும், அதன் காரணமாக அந்த யானை உடல்நிலை மோசமடைந்து சோர்வாக காணப்படலாம் என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனால் அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
    • குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஓபி காலனியை சேர்ந்த குமார் என்பவர் யானை தாக்கி பலியானார்.

    யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், பக்தர்கள் மருதமலைக்கு செல்லும் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை.

    மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று, கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.

    அப்போது குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன. இதனை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர்.
    • கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அகளி வனச்சரக அதிகாரி சுமேஷ் தலைமையில் ஊழியர்கள், அட்டப்பாடிக்கு விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர்.

    பாலக்காடு வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி குட்டிகளுடன் கிராமப் பகுதிகளுக்கு சென்று திரும்புவது வழக்கம். அப்படி வந்த கூட்டத்தில் இந்த குட்டி யானை வழிதவறி பாலுார் குடியிருப்பில் தஞ்சம் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர். இதனை ருசித்து சாப்பிட்ட குட்டி யானை அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

    பாலூர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த குட்டி யானையை தேடி, தாய் யானை மீண்டும் வரலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கருதினர். எனவே அந்த குட்டி யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று காலை திரும்பவும் பாலூருக்கு வந்து சேர்ந்தது. இது வனத்துறை அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே குட்டி யானைக்கு மீண்டும் உணவுகள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் டேவிட் வினோத் தலை மையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அந்த குட்டி யானை ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த குட்டி யானை அட்டப்பாடி காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது. அங்கு குட்டி யானைக்கு உணவுகள் தரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அட்டப்பாடி வனப்பகுதியில் போதிய மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. எனவே யானைகள் கூட்டமாக காட்டோரத்தில் இருக்கும் கிராமப்பகு திகளுக்கு வந்து அங்கு உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். அப்படி வந்த யானைகள் கூட்டத்தில் இருந்து தான், அந்த குட்டி யானை வழிதவறி பாலூருக்கு வந்து இருக்க வேண்டும். எனவே அட்டப்பாடி கிருஷ்ணவனம் பகுதியில் குட்டிக்கு தற்காலிக குடில் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. இது எளிதில் பிரியக்கூடியது. எனவே யானைக்கூட்டம் மீண்டும் திரும்பி வந்து குட்டியை எளிதாக மீட்டு சென்று விடும் என்று நம்புகிறோம். தாய் யானை மீட்க வரவில்லை என்றால் வனத்துறையே அந்த குட்டி யானையை வளர்க்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா பண்ணை வீட்டில் யானைகள் தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
    • இறந்தது ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பாலமலை அருகே நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது இங்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

    அப்போது தொட்டிக்குள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காவலாளி, சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த குட்டி யானையை பார்த்தனர்.

    அப்போது தொட்டிக்குள் கிடந்த யானை ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. காட்டு யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்த போது தவறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து இறந்த குட்டி யானையின் உடலை தொட்டியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக அந்த தொட்டி உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து குட்டி யானை உடற்கூராய்வு செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு வந்தன. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த யானைகள் வீட்டுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் தடுத்து பட்டாசு வெடித்து, அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் பண்ணை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தொட்டி உள்ளதால் யானைகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    அவ்வாறு வந்த ஒரு குட்டி யானை தான் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது. அந்த குட்டி யானையை தேடி நேற்று 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் இந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன என்றனர்.

    • சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.
    • மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் வாச்சிக்கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்.மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலா் கருப்பையா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் இறந்து கிடந்தது, ஒன்றரை வயதுடைய ஆண் யானை குட்டி என்றும், நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

    புளியங்குடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த யானை குட்டி 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. #tamilnews
    புளியங்குடி:

    நெல்லை மாவட்டம் புளியங்குடியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விளை நிலங்கள், தோட்ட பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் புளியங்குடியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமாக பள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் இன்று காலை 4 வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானை புகுந்தது. அது வழி தெரியாமல் திரிந்த போது அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    கிணற்றுக்குள் கிடந்த தண்ணீரில் குட்டி யானை தத்தளித்து கொண்டிருந்தது. அதனை அந்த தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் புளியங்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.



    யானையை மீட்க கிணற்றில் ஒரு புறத்தில் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து, யானை மேலே வருவதற்கு வசதியாக ஜே.சி.பி. மூலம் வழியை ஏற்படுத்தினர். பின்னர் குட்டி யானையை கயிற்றால் கட்டி பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து வெளியே மீட்டு கொண்டு வரப்பட்டது.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டது. பின்பு அந்த குட்டி யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர். #tamilnews
    தாயை பிரிந்த குட்டியானைக்கு, காட்டெருமை நண்பனாக கிடைத்துள்ளது. அவற்றை பிரிக்க முயன்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் இருக்கின்றன. தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சீசனில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து 5 வயதுடைய குட்டியானை ஒன்று பிரிந்தது.
    இந்த குட்டியானை பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம், காட்டேரி நஞ்சப்ப சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனை குன்னூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நஞ்சப்ப சத்திர வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன், அந்த குட்டியானை நட்புடன் பழகியது. தற்போது காட்டெருமையும், குட்டியானையும் நண்பர்களாக இணைந்தே சுற்றித்திரிகின்றன. இதற்கிடையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அறிவுரையின்பேரில் வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் குட்டியானையையும், காட்டெருமையையும் பிரிக்க போராடி வருகின்றனர். ஆனால் அது நடந்தபாடில்லை. மாறாக பிரிக்க முயற்சிக்கும்போது 2 வனவிலங்குகளும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே காட்டெருமையும், குட்டியானையும் இணைந்து வந்தபோது வனத்துறையினர் அவற்றை பிரிக்க முயற்சித்தனர். ஆனால் அவை வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    தொடர்ந்து அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தாயை பிரிந்த குட்டியானையையும், அதை தாய் போல பாதுகாத்து செல்லும் காட்டெருமையையும் காணும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 வனவிலங்குகளையும் பிரிக்க வனத்துறையினர் போராடி வருவதாக தெரிகிறது. யாருக்கும் ஆபத்து ஏற்படாத பட்சத்தில், அவற்றை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. காலப்போக்கில் அவை பிரிந்து செல்வது நடக்கக்கூடிய ஒன்று தான்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    ×