என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடிநீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை - 10 மணிநேரம் போராடி மீட்ட வனத்துறையினர்
- குடிநீர் தொட்டிக்குள் குட்டியானை விழுந்து கிடப்பதும், அதனை மற்ற யானைகள் காப்பாற்ற முயல்வதும் தெரியவந்தது.
- பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குட்டி யானை வெளியேறும் வகையில் குடிநீர்தொட்டியின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 4 வயது குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. அந்த யானைகள் சம்பவத்தன்று நள்ளிரவு வில்லோணி எஸ்டேட் மேல்பிரிவு தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வந்தன.
அப்போது அந்த யானைகள் 12 அடி ஆழ தரைமட்ட குடிநீர் தொட்டியில் துதிக்கையை உள்ளே விட்டு தண்ணீர் குடித்தன. அதேபோல குட்டி யானையும் துதிக்கையை உள்ளேவிட்டு தண்ணீர் குடிக்க முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி குடிநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டது. இதனால் அந்த குட்டியானை தண்ணீரில் தத்தளித்து மேலே வரமுடியாமல் தவித்தது. தொடர்ந்து குட்டியானையை மீட்க தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகள் முயற்சித்தன. மேலும் அந்த யானைகள் பிளிறிக்கொண்டே இருந்தன.
இதனை கேட்டு அங்குள்ள தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் குட்டியானை விழுந்து கிடப்பதும், அதனை மற்ற யானைகள் காப்பாற்ற முயல்வதும் தெரியவந்தது.
தொடர்ந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்க தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது அவர்களை தாய் யானை துரத்தியது. இதில் தப்பி ஓடிய தொழிலாளி ஒருவருக்கு காயம் அடைந்தார்.
இதற்கிடையே மற்ற தொழிலாளர்கள் குடிநீர் தொட்டியின் வெளிப்பகுதியில் உள்ள குழாய் மூடியை திறந்து தண்ணீரை வெளியேற்றினர்.
மேலும் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனச்சரகர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் முன்னிலையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குட்டி யானை வெளியேறும் வகையில் குடிநீர்தொட்டியின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டது.
இந்த நேரத்தில் குட்டிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என்று கருதிய தாய் யானை பொக்லைன் எந்திரத்தையும் தாக்கி பாசப்போராட்டம் நடத்தியது.
சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதியம் ஒரு மணியளவில் குடிநீர் தொட்டியின் உடைக்கப்பட்ட பகுதி வழியாக குட்டி யானை வெளியே வந்தது. பின்னர் அதனை தாய்யானை மகிழ்ச்சியுடன் அரவணைத்தது.
மேலும் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து குட்டியின் உடலில் பீய்ச்சியடித்து ஆசுவாசப்படுத்தியது. பின்னர் அந்த யானைகள் குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.






