என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
    • ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் மற்றும் அபிஷேகமும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் கட்டளைதாரர்கள் மூலமாக நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் நாள்தோறும் காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சாமிக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறு வழக்கம். தொடர்ந்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் மற்றும் அபிஷேகமும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் கட்டளைதாரர்கள் மூலமாக நடைபெறும். இதற்காக கட்டளைதாரர்கள் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்துகொள்வது வழக்கம். ஒரு நாள் அபிஷே கத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், மலர் அங்கி, முத்தங்கி, மாலையில் தங்கத்தேர், சந்தனக்காப்பு, வெண்ணெய்க்காப்பு அலங்கா ரத்திற்கு தனியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

    வரும் 2024-ம் ஆண்டு வடைமலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்திற்கான முன்பதிவு வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது. சாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழுத்தொகையையும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுபோல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்ககவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசம் ரூ.750, முத்தங்கி அலங்காரத்திற்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் செயல் அலுவலரும், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

    • தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.39ஆயிரத்து 736-க்கு விற்பனையானது.
    • 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து 765-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குஇந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.41 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 510 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.39ஆயிரத்து 736-க்கு விற்பனையானது.

    அதேபோல் 119.90 குவிண்டால் எடை கொண்ட 255 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.29-க்கும், சராசரி விலையாக ரூ.88.39-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து 765-க்கு விற்பனையானது.

    அதேபோல் 30.08 குவிண்டால் எடை கொண்ட 41 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.162.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.128.69-க்கும், சராசரி விலையாக ரூ.159.69-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 704-க்கு விற்பனையானது.

    இதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 16 ஆயிரத்து 205-க்கு விற்பனையானது.

    • நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர்.
    • கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர். இவர்களில் 19,410 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 18,924 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சிரமம் இல்லாமல் கிடைக்க பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் (தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ரோட்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாக கொண்ட மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்து றையின் சார்பில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

    குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் நாமக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ரோட்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

    கலை போட்டிகள் காலை 10 மணிக்கு நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும் 5 வர்ணங்கள் ராகம், சுரத்துடன் 5 தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.

    தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

    கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

    மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப் படுவார்கள். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம்.
    • இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம்.

    முத்திரைத்தாள்

    நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

    விண்ணப்பங்கள்

    தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஏலத்துக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 419 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 219 முதல் ரூ.5 ஆயிரத்து 609 வரையிலும் ஏலம் போனது. இவை ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.
    • இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் -2023 தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    கபடி

    இப்போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 5,000 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடத்தப்பட உள்ள விளையாட்டுகள் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால் , பளுதூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், மல்லக்கம்பு, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல், ஹாக்கி, களரிபயட்டு, கபடி, ஜூடோ, கோ-கோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கட்கா, யோகாசனம், டென்னிஸ், தாங்தா, சிலம்பம் உள்ளிட்டவைகள் ஆகும்.

    தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

    பங்கேற்பதற்கு தகுதி பெற விளையாட்டு வீரர்கள் வயது சரிபார்ப்பு (01.01.2005 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்) செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்விச்சான்றிதழ்

    ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் ( 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப் பட்டது) ஆகியவை ஆகும்.

    தமிழ்நாடு அணிகளில் இடப்பெறுவதற்கான தேர்வு குறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை நேரில் அணுகவும். பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இதில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் -வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஒரு சில மளிகை கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒட்டமெத்தை பகுதியில் உள்ள டீ கடை, மற்றும் ஆர்.எஸ். சாலையில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து 5½ கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், செட்டியார் தெருவில் எழுந்தருளியுள்ள பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த வருடமும் பால அய்யப்ப சாமி கோவிலில் கணபதி ஹோமும், 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாலஅய்யப்ப சாமி அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலஅய்யப்பசாமி கோவில் பவுர்ணமி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

    • ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    மூளை சாவடைந்து உறுப்பு தானம் செய்த அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மதுரா செந்தில் மற்றும் போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மேலகவுண்டன்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

     நாமக்கல்:

    ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ராசிபுரம் வட்டம், காட்டூர் அணைக்கும் கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு இப்பள்ளிக்கு அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், செலவினங்கள் பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சேந்தமங்கலம் வட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சி, நாச்சிபுதூர் காலணியில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரவியல் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன், தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றைக் பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பணியிட விபத்து மரண உதவித்தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,750 மதிப்பீட்டில் காதொலி கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்டவை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.93.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் கீழ் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், சமூகத் தரவு பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள், கையேடுகளை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×