search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District level art competitions"

    • மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ரோட்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாக கொண்ட மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்து றையின் சார்பில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

    குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் நாமக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ரோட்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

    கலை போட்டிகள் காலை 10 மணிக்கு நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும் 5 வர்ணங்கள் ராகம், சுரத்துடன் 5 தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.

    தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

    கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

    மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப் படுவார்கள். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×