என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே நிம்மேலி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40). இவர் நெப்பத்தூரில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்னர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டாராம். தொடர்ந்து வேலை செய்த நாட்களில் வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அவ்வபோது வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் செங்கல் சூளைக்கு வந்த சீனிவாசன் அங்கிருந்த மற்ற தொழிலாளர்களிடம் பேசிவிட்டு சென்றாராம். இன்று அதிகாலை இரவு பணி முடித்து வந்த தொழிலாளிகள் செங்கல் சூளையில் செங்கல்லை காயவைக்கும் பகுதியிலுள்ள செட்டில் சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
இதுகுறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சீனிவாசன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மங்கை மடம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சீர்காழி தாசில்தார் ஹரிதரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சீர்காழி:
சீர்காழியில் வணிகர் சங்கங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருந்தகம், உணவங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
தாசில்தார் ஹரிதரன், கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் (சீர்காழி), அருண்(கொள்ளிடம்), சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் நாராயணன் பேசுகையில், வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிதிருக்கவேண்டும். கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி, சோப்புகொண்டு கைகளை கழுவிட வசதிகள் செய்திருக்கவேண்டும். முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்ககூடாது.
அதேபோல் முககவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.200அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டை சுனாமி காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42) மீனவர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மூர்த்தி பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அவர் கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகே உள்ள வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
திடீரென மூர்த்தி விரித்த வலை மீது வானகிரி மீனவர்களும் வலை விரித்தனர். இதனால் மூர்த்திக்கும், வானகிரி மீனவர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வானகிரி மீனவர்கள் ஆத்திரம் அடைந்து படகில் இருந்த கட்டையால் சரமாரியாக மூர்த்தியை தாக்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் படகிலேயே மூர்த்தி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து மூர்த்தியை புதுப்பேட்டை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்படையினர் மூர்த்தியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் கடலோர காவல்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 3 நாட்களாக வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறி 2 மணி நேரத்துக்கு மேல் பெய்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்சாரம் தடைபட்டது.
இந்த பலத்த மழையால் சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை நிம்மதியை கொடுத்தது.
சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் எடுக்கப்படாமல் வெயிலில் காய்ந்து வந்த நிலையில் இந்த மழையால் தற்போது மழையிலும் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.






