search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாவிலும் இணைபிரியா சகோதரர்கள் வீரமணி-குணசேகரன்.
    X
    சாவிலும் இணைபிரியா சகோதரர்கள் வீரமணி-குணசேகரன்.

    இறப்பிலும் இணைபிரியா சகோதரர்கள்: அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் பலி

    மணல்மேடு அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் இறந்தார். சாவிலும் இணைபிரியா சகோதரர்கள் பற்றிய பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த வக்காரமாரி கீழத்தெருவில் வசித்து வந்தவர்கள் வீரமணி(வயது71), குணசேகரன்(64). இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

    இவர்களில் வீரமணி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். குணசேகரன், தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இருவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீரமணிக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தனது உடன்பிறந்த அண்ணன் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாது குணசேகரன் கதறி, கதறி அழுதார். இத்தனை ஆண்டுகள் தன்கூடவே இருந்த தனது அண்ணன் தன்னை விட்டு விட்டு சென்று வி்ட்டாரே என்று அவர் தனது மார்பில் அடித்துக்கொண்டு கதறினார். சில விநாடிகளில் குணசேகரனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு அண்ணன் இறந்த அதிர்ச்சியில் அவரும் உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடல்களும் அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இறுதி சடங்கு நடக்கிறது.

    இறந்த வீரமணியின் மனைவி பெயர் கலைவாணி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இவர்களில் மூத்த மகன் மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர், தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இளைய மகன், புதுச்சேரியில் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். மகள், வெளிநாட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இதேபோல் இறந்த குணசேகரனின் மனைவி பெயர் ஜமுனா சங்கரி. இவர், வக்காரமேரி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களில் இருவர் திருமணமாகி தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். ஒரு மகள் கோவையில் பணிபுரிந்து வருகிறார்.

    பாசப்பிணைப்பால் அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும், அந்த பகுதி மக்களிடமும் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×