என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது.
    • சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதே வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிவராமன் மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியன் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் கைதாகியுள்ளார்.

    இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.
    • கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார். இவர் வெற்றி பெறும் தொகுதியில் தோற்கக்கூடிய தலைமை பொறுப்பில் இருக்கிறார். இதனால் அவருக்கு பயம் வந்துவிட்டது.

    ஏனென்றால் அண்ணாமலை தனக்கு தலைமை பொறுப்பு நமக்கு தொடர்ந்து இருக்காது. அதனால் இருக்கின்றவரையில் ஏதாவது கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

    நிச்சயமாக அக்கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் உணர்ந்து, விரைவில் அவரை இந்த தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

    எப்படி வெளியேற்றுவது என்று அக்கட்சிக்கு தெரியாமல்தான் அண்ணாமலை லண்டனுக்கு படிப்பதற்காக செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஆகி உள்ளார்.

    பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் அவர் எந்த மக்களையும் சந்திக்கவில்லை. மாறாக ஊடகங்களையும், பத்திரிகைகளையும் சந்தித்து அரசியல் செய்து வருகிறார்.

    இந்த 3 ஆண்டுகளில் ஒரு தற்குறி எப்படி பேசுவாரோ அதுபோல்தான் அவர் கூறும் கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு அவர் கூறியதாவது, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னார்.

    மேலும் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்றும், பா.ஜ.க. 2-வது பெரிய கட்சி என்றும் கூறினார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்கிறேன், 2-வது பெரிய கட்சி கூறினீர்கள் ஆனால் ஒரு இடத்திலாவது நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்களா?

    கடந்த முறை வென்ற கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியடைந்த அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டதால் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.

    • இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
    • இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமேலம்பட்டி கிராமத்தில் கந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புறனமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து கோவில் கட்டுமான பணிகள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளை செய்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து விரதம் இருந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் காலை, மாலை என கடந்த 15 நாட்களாக பூஜை நடந்து வந்த நிலையில் வட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.

    இதில் சாமிக்கு சீர் கொண்டு வந்து அதனை மேளதாளம் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு இந்து, இஸ்லாமிய மக்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் சீர்வரிசைகளை கோவில் நிர்வாகத்திடம் வழங்க அதனை பூசாரியிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இரு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்து கோவிலுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்து அன்னதான வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது. 

    • விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன.
    • 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.
    • மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.

    போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

    சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது.

    இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) படுகாயம் அடைந்தார்.

    தலையில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
    • பாலியன் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது.


    ------------

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

    அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழு விரைகிறது.

    அதன்படி, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது. இந்த குழு நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறது.

    2 நாட்கள் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள அத்திபள்ளம் பகுதியில் பாம்பாறு ஆற்றங்கரையோரம் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த முருகன் கோவிலில் ஆடி 1-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது. வழக்கம் போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர். அப்போது கோவிலுக்குள் சத்தம்வரவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த பார்த்தபோது, மர்ம நபர் 4 பேர் பணம் திருடியது தெரியவந்தது. உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார்.மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், சிங்காரப்பேட்டை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 23) என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கைதான பூவரசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்க சமயத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோவிலில் நடைபெற இருந்த திருட்டு சம்பவத்தை தடுத்ததால், உண்டியல் பணம், நகைகள் திருடு போகமால் தப்பியது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்தும்போது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.
    • 5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசிஉள்ளோம்.

    கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர்.

    விசாரணையில் என்சிசிக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. புகார் கிடைக்கப் பெற்றதும் 4 தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளி உள்பட 11 பேரை கைது செய்துள்ளோம்.

    கல்வித்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோவில் கைது செய்துள்ளோம்.

    வேறு எந்த பள்ளிகளில் எல்லாம் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என்றும், இதுபோன்ற முகாம்கள் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளதா எனவும் விரிவான விசாரணையை கல்வித்துறை தொடங்கியுள்ளது.

    பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்தும்போது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.

    என்சிசி மூலமாக இந்த முகார் நடத்தப்படவில்லை, இதுகுறித்து என்ிசி விளக்கம் அளித்துள்ளது. என்சிசியிடம் எந்தவித அனுமதி கடிதமும் பெறாமல் இந்த முகாம் நடத்தி உள்ளனர்.

    5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசிஉள்ளோம். மாணவிகள் அனைவருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
    • மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் புகார்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.

    இவர் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.

    பின்னர் பள்ளி நிர்வா கத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது. இதில் சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

    இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    மேலும், சிவராமனை விசாரிப்பதற்காக தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் சிவராமனின் உறவினார்கள் 5 பேர் அவருக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிவராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன.
    • பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன. இதில் குறிப்பாக இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது வனப்பகுதி உள்ளே பெட்டமுகிலாளம் மற்றும் கொடகரை ஆகிய மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் நிற்பது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று அய்யூர் வன அலுவலகத்தில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து வந்த வழியில் திரும்பி சென்றனர். சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் மலை கிராமங்களுக்கு சென்ற பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள் தங்களது ஊர்களுக்கு அந்த சாலை வழியாக சென்றனர். தினந்தோறும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதும், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கிராம மக்கள் சந்திப்பதும் வாடிக்கையாக உள்ளது.

    • 6 ஆயிரம் கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.
    • பண்ணையில் வெள்ளம் புகுந்து, கோழிகள் உயிரிழப்பு.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சின்ன ஆலரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39) என்பவர் நாட்டுக்கோழி குஞ்சுகளை பண்ணையில் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் அவரது பண்ணையில் இருந்த சுமார் 6 ஆயிரம் கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    ஒவ்வொரு கோழியும் சராசரியாக 3 கிலோ எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாஸ்கருக்கு ரூ.18 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

    இது குறித்து பாஸ்கர் கூறுகையில், கனமழையால் பண்ணையில் வெள்ளம் புகுந்து, கோழிகள் மூச்சுத்திணறி இறந்துவிட்டன. இதனால் நான் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளேன் என்று கூறினார்.

    • டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சவுந்தர்யா (வயது20 )என்ற கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உத்தரப்பள்ளி-தம்மாண்டரப்பள்ளி பஸ் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது.

    இதில் கம்பைநல்லூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன் (41), அவருடன் சென்ற உதவியாளர் சந்தியா (25), மூக்காண்டப்பள்ளியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணி சவுந்தர்யாவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×