கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்க முயற்சி- வாலிபர் கைது

மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்க முயற்சி- வாலிபர் கைது
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள அத்திபள்ளம் பகுதியில் பாம்பாறு ஆற்றங்கரையோரம் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.

இந்த முருகன் கோவிலில் ஆடி 1-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது. வழக்கம் போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர். அப்போது கோவிலுக்குள் சத்தம்வரவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த பார்த்தபோது, மர்ம நபர் 4 பேர் பணம் திருடியது தெரியவந்தது. உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார்.மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், சிங்காரப்பேட்டை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 23) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கைதான பூவரசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்க சமயத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோவிலில் நடைபெற இருந்த திருட்டு சம்பவத்தை தடுத்ததால், உண்டியல் பணம், நகைகள் திருடு போகமால் தப்பியது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com