என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • பழனி உத்திரமேரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் நெல்வாய் நோக்கி சென்று கொண்டிருந்தார் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 55). உத்திரமேரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 11.7.2023 அன்று உத்திரமேரூரில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்வாய் நோக்கி சென்று கொண்டிருந்தார் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விவேகானந்தன் மாணவியை சீரழித்து வந்து உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்தார்.

    இந்தநிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் ஒருவருடன் விவேகானந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இளம்பெண்ணுடன் விவேகானந்தன் கணவன்-மனைவி போல் வாழ்ந்தார். அவர்களுடன் அந்த இளம்பெண்ணின் தங்கையும் தங்கி இருந்தார். அவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே விவேகானந்தன் கள்ளக்காதலியின் தங்கையான பிளஸ்-1 மாணவியையும் மிரட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக அவர் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். பயந்து போன மாணவி இதுபற்றி தனது அக்காளிடம் சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி விவேகானந்தன் தனது அத்துமீறலை தொடர்ந்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தன் தனது தங்கையையும் சீரழித்து இருப்பது அறிந்து இளம்பெண் அதிர்ந்தார். இதுகுறித்து அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பூபாலன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
    • மர்மநபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை சத்யா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 37). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனின்று பூபாலன் உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய காஞ்சிபுரம் தாலுகா போலீசார் காஞ்சிபுரம் நாகலூத்துமேடு மந்தைவெளிபகுதியை சேர்ந்த செல்வம் (23), சரவணன் (21) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர்.
    • 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் காமினி, கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில். குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு தாசில்தார் இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் இரவு காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது, பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டவுடன் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனை தொடர்ந்து 2 லாரிகளிலும் சோதனை செய்தபோது 40 கிலோ எடை கொண்ட 250 பிளாஸ்டிக் பைகளில் 9 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • தேர்தலின் போது அரசியல் கட்சியினரின் முக்கிய வாக்குறுதியாக ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் இருக்கும்.
    • ஸ்ரீபெரும்புதூர் மக்களின் ரெயில் நிலையம் கனவாகவே இன்னும் நீடித்து வருகிறது.

    சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்து உள்ள புறநகர் பகுதிகளும், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முக்கிய தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள அனைத்து இடங்களும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக ஆவடி, ஸ்ரீபெரும்புதுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளன.

    ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள பகுதிகளில் கார் தொழிற்சாலை, அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், டயர் தொழிற்சாலை, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஏராளமாக அமைந்து உள்ளன.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்து செல்ல பஸ் மற்றும் பிற வாகன போக்கு வரத்தையே பயன்படுத்துகின்றனர். அசுர வளர்ச்சி பெற்று தொழிற்சாலைகள் நிறைந்து இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் இல்லை என்பது பொதுமக்களிடம் பெரும் குறையாகவே உள்ளது. ரெயில் பயணத்தால் பயண நேரம் குறைவு, குறைந்த கட்டணத்தில் பயணம் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும் என்பதால் ஸ்ரீபெரும்புதூருக்கு ரெயில் நிலைய கோரிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

    தேர்தலின் போது அரசியல் கட்சியினரின் முக்கிய வாக்குறுதியாக ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் இருக்கும். ஆனால் இதுவரை இதற்கு விடிவு ஏற்படவில்லை. ஸ்ரீபெரும்புதூர் மக்களின் ரெயில் நிலையம் கனவாகவே இன்னும் நீடித்து வருகிறது.

    சென்னை -ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம்-தாம்பரம்-திருவள்ளூர் மார்க்கமாக ரெயில் சேவை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த இடம் ஸ்ரீபெரும்புதூர் ஆகும். இங்கு இவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில் இங்கு உள்ளது. மேலும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு இடம் இங்கு இருக்கிறது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வதால் ரெயில் சேவை என்பது தற்போது அவசியமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

    இதற்கிடையே பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்துக்காக, ஆவடி- ஸ்ரீபெரும்புதுார்- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீட்டர் துாரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம் ரூ.839 கோடி தேவைப்படும் என்று அப்போது மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும் போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

    கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றது. புதிய ரெயில் பாதை திட்டத்துக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த ஆண்டு 'டெண்டர்' வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரெயில் திட்டத்துக்கு ரூ.58 கோடியும் ஒதுக்கப்பட்டது.

    எனவே ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலைய பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதற்கிடையே சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. எனவே புதிய விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில் ரெயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதும் காஞ்சிபுரம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கூறியதாவது:-

    நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பஸ் ஏறி பூந்தமல்லி சென்று பின்னர் அங்கிருந்து மேலும் ஒரு பஸ் பிடித்து மவுண்ட் ரோடு செல்கிறேன். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. பஸ் செலவும் அதிகமாகிறது.

    சென்னைக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரெயில் சேவை இல்லை. இதுபற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும். பயண செலவும் குறையும். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரெயில் சேவையை என்னை போன்ற நடுத்தர மக்கள் எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்.

    சத்தியா(சுங்குவார்சத்திரம்):-

    நான் சுங்குவார் சத்திரம் பகுதியில் இருந்து தினமும் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறேன். சுங்குவார் சத்திரத்தில் பஸ் ஏறி தாம்பரம் செல்லவேண்டும். எந்த நேரமும் பஸ் கிடைக்காது. பஸ்சை தவற விட்டால் ஸ்ரீபெரும்புதூருக்கு பஸ்சில் சென்று பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு ரெயில் சேவை வந்தால் எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். என்னை போன்று வேலைக்கு செல்லும் பல பேர் பயன் அடைவார்கள். முக்கியமாக பெண்கள் பலருக்கு பெரும் உதவியாக இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் ரெயில் சேவை அனைவருக்கும் ஒரு வர பிரசாதமாக அமையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது.
    • குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் கரசங்கால், படப்பை, சாலமங்கலம், செரப்பணஞ்சேரி, வைப்பூர், வட்டம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    மேலும் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வண்டலூர்- வாலாஜாபாத் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
    • சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூரை சேர்ந்தவர் விஷ்ணு(வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏழுமலை(25) என்பவருடன் மொளச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுங்குவார் சத்திரம் நோக்கி சென்றார்.

    அப்போது திருவள்ளூர் மாவட்டம் பண்ணுர் பகுதியை சேர்ந்த பரங்கிராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மீது விஷ்ணுவும் அவரது நண்பர் ஏழுமலையும் வந்த மோட்டார் சைக்கிள் உரசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிறிது தூரம் சென்றபோது பரங்கிராஜ் ஓட்டி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய விஷ்ணுவும், ஏழுமலையும் மோட்டார் சைக்கிளோடு பல அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது பரங்கிராஜ் திட்டமிட்டு காரை வேகமாக ஓட்டிவந்து மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு விஷ்ணுவை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பரங்கிராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும்.
    • 19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது.

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம் வருகிற 12-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் காலையில் கொடியேற்றி 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற 15-ந் தேதி நந்தி வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள், வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்று வழியாக கிரிவலம் செல்கிறார்.

    19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது. உத்திர நட்சத்திர நாளான 23-ந்தேதி மூலவருக்கு முழு அபிஷேகத்துடன் வழிபாடு, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது.
    • 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    பயனாளிக்கு இழப்பீட்டுத் தொகையினை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் லோக் அதாலத்தை தொடக்கி வைத்து சமரசம் செய்து வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

    தொடக்க விழாவுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லோக் அதாலத்தில் விசாரணைக்காக மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    தொடக்க விழா நிகழ்வில் நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, பரணி, ரஞ்சனி மற்றும் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.

    • ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.
    • புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் முதல் கட்டமாக 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

    சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737,738 விமானங்கள் மட்டுமே குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கு சோதனை முறையில் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. கொழும்பு, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.

    இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என 36 பன்னாட்டு விமான சேவைகள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இயங்கப்பட்டது.

    பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், தாய் ஏர்லைனஸ் உள்பட பெரிய ரக விமானங்கள் புதிய முனையத்தில் நேற்று முதல் இயங்க தொடங்கியது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய பன்னாட்டு வருகை முனையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்றும், 2-ம் கட்ட கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×