என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான்.இவர் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார்.

    நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்து இருந்த உயர்ரக செல்போன் அனைத்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் செல்போன்கள் அனைத்தையும் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து செல்வது பதிவாகி உள்ளது. அவர்கள் திட்மிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது அடுத்த மாதம் 15-ந் தேதி அன்று நடைபெறும் சுகந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

    இந்த விருது தொடர்பாக தகுதிகளாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மார்ச் 31, 2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 20-ந் தேதி மாலை 4 மணி ஆகும்.

    விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விண்ணப்பித்த தங்களின் சாதனைப் பற்றிய பத்திரிகை செய்திகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களையும் 3 புத்தகங்களாக தயார் செய்து காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் இந்த மாதம் 21-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அ) தொலைபேசி எண். 7401703481 (அ) 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பையொட்டி தங்கத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, சம்பங்கி பூ மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல காஞ்சீபுரம் காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தங்கத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.
    • மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து, முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரின் 121- ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளி, ஏரிவாய் அரசு ஆரம்ப பள்ளி, வள்ளுவப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி, மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ஆகிய 4 பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு தேவையான தரமான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், அரிச்சுவடி, வாய்பாடு, கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி)மாவட்ட செயலாளரும், ஆன்மீக பிரமுகரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.வீ.ஜோதியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சிமன்ற உறுப்பினர் திருவேங்கடம், தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீமணிமாலா, ஏரிவாய் செல்வி, வள்ளுவப்பாக்கம் ஞானேஸ்வரி, களியனூர் மோகன காந்தி மற்றும் மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தேசிய கொடியை மாவட்ட கழக செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    • நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (வயது30). இவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் அக்காள் மகன் ஆவார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மாயமான கிரிதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே அவரை நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கிரதரனின் நண்பர்களான பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், ஆகாஷ், ஹரிஷ், தாமோதரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி புதுப்பாளையம் அருகே பாழடைந்த வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட கிரிதரன் உடலை எலும்புக்கூடாக மீட்டனர். அவர் மாயமாகி 7 மாதத்துக்கு பின்னர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    கிரிதரன் மாயமான ஜனவரி மாதம் 13-ந்தேதி நண்பர்களான ஹரிஷ் உள்பட 4 பேருடன் மதுகுடித்து உள்ளார். அப்போது கிரிதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கிரிதரனை நண்பர்களே அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் மரக்கிளைகளையும் வெட்டிபோட்டு இருக்கிறார்கள்.

    இதனால் கிரிதரன் கொலையுண்டது வெளியில் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிதரனின் நண்பர்கள் மதுபோதையில் இருந்தபோது கிரிதரணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருப்பதாக உளறி உள்ளனர்.

    இதன் பின்னரே கிரிதரன் கொலையுண்ட தகவல் போலீசுக்குதெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜ் நினைவு அறக்கட்டளையினர் காஞ்சிபுரம் நாடார் சங்கத்துடன் இணைந்து சங்க தலைவர் ராமேஸ்வரம் தலைமையில் காமராஜர் சிலைக்கு புது ஆடைகள் அணிவித்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. செயலாளர் வேலுமணி, பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை குமரகுருநாதன் நிர்வாகிகள் நாதன், காமராஜ், பார்த்தசாரதி, வஜ்ரவேல் இருந்தனர். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத். பா. கணேசன் தலைமையில் காமராஜர் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • பழனி உத்திரமேரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் நெல்வாய் நோக்கி சென்று கொண்டிருந்தார் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 55). உத்திரமேரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 11.7.2023 அன்று உத்திரமேரூரில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்வாய் நோக்கி சென்று கொண்டிருந்தார் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விவேகானந்தன் மாணவியை சீரழித்து வந்து உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்தார்.

    இந்தநிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் ஒருவருடன் விவேகானந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இளம்பெண்ணுடன் விவேகானந்தன் கணவன்-மனைவி போல் வாழ்ந்தார். அவர்களுடன் அந்த இளம்பெண்ணின் தங்கையும் தங்கி இருந்தார். அவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே விவேகானந்தன் கள்ளக்காதலியின் தங்கையான பிளஸ்-1 மாணவியையும் மிரட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக அவர் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். பயந்து போன மாணவி இதுபற்றி தனது அக்காளிடம் சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி விவேகானந்தன் தனது அத்துமீறலை தொடர்ந்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தன் தனது தங்கையையும் சீரழித்து இருப்பது அறிந்து இளம்பெண் அதிர்ந்தார். இதுகுறித்து அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பூபாலன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
    • மர்மநபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை சத்யா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 37). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனின்று பூபாலன் உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய காஞ்சிபுரம் தாலுகா போலீசார் காஞ்சிபுரம் நாகலூத்துமேடு மந்தைவெளிபகுதியை சேர்ந்த செல்வம் (23), சரவணன் (21) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர்.
    • 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் காமினி, கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில். குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு தாசில்தார் இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் இரவு காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது, பயன்பாடில்லாத ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ரேஷன் அரிசியை சிலர் மாற்றிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டவுடன் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனை தொடர்ந்து 2 லாரிகளிலும் சோதனை செய்தபோது 40 கிலோ எடை கொண்ட 250 பிளாஸ்டிக் பைகளில் 9 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • தேர்தலின் போது அரசியல் கட்சியினரின் முக்கிய வாக்குறுதியாக ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் இருக்கும்.
    • ஸ்ரீபெரும்புதூர் மக்களின் ரெயில் நிலையம் கனவாகவே இன்னும் நீடித்து வருகிறது.

    சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்து உள்ள புறநகர் பகுதிகளும், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முக்கிய தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள அனைத்து இடங்களும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக ஆவடி, ஸ்ரீபெரும்புதுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளன.

    ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள பகுதிகளில் கார் தொழிற்சாலை, அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், டயர் தொழிற்சாலை, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஏராளமாக அமைந்து உள்ளன.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்து செல்ல பஸ் மற்றும் பிற வாகன போக்கு வரத்தையே பயன்படுத்துகின்றனர். அசுர வளர்ச்சி பெற்று தொழிற்சாலைகள் நிறைந்து இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் இல்லை என்பது பொதுமக்களிடம் பெரும் குறையாகவே உள்ளது. ரெயில் பயணத்தால் பயண நேரம் குறைவு, குறைந்த கட்டணத்தில் பயணம் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும் என்பதால் ஸ்ரீபெரும்புதூருக்கு ரெயில் நிலைய கோரிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

    தேர்தலின் போது அரசியல் கட்சியினரின் முக்கிய வாக்குறுதியாக ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் இருக்கும். ஆனால் இதுவரை இதற்கு விடிவு ஏற்படவில்லை. ஸ்ரீபெரும்புதூர் மக்களின் ரெயில் நிலையம் கனவாகவே இன்னும் நீடித்து வருகிறது.

    சென்னை -ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம்-தாம்பரம்-திருவள்ளூர் மார்க்கமாக ரெயில் சேவை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த இடம் ஸ்ரீபெரும்புதூர் ஆகும். இங்கு இவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில் இங்கு உள்ளது. மேலும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு இடம் இங்கு இருக்கிறது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வதால் ரெயில் சேவை என்பது தற்போது அவசியமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

    இதற்கிடையே பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்துக்காக, ஆவடி- ஸ்ரீபெரும்புதுார்- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீட்டர் துாரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம் ரூ.839 கோடி தேவைப்படும் என்று அப்போது மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும் போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

    கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றது. புதிய ரெயில் பாதை திட்டத்துக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த ஆண்டு 'டெண்டர்' வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரெயில் திட்டத்துக்கு ரூ.58 கோடியும் ஒதுக்கப்பட்டது.

    எனவே ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலைய பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதற்கிடையே சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. எனவே புதிய விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில் ரெயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதும் காஞ்சிபுரம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கூறியதாவது:-

    நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பஸ் ஏறி பூந்தமல்லி சென்று பின்னர் அங்கிருந்து மேலும் ஒரு பஸ் பிடித்து மவுண்ட் ரோடு செல்கிறேன். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. பஸ் செலவும் அதிகமாகிறது.

    சென்னைக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரெயில் சேவை இல்லை. இதுபற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும். பயண செலவும் குறையும். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரெயில் சேவையை என்னை போன்ற நடுத்தர மக்கள் எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்.

    சத்தியா(சுங்குவார்சத்திரம்):-

    நான் சுங்குவார் சத்திரம் பகுதியில் இருந்து தினமும் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறேன். சுங்குவார் சத்திரத்தில் பஸ் ஏறி தாம்பரம் செல்லவேண்டும். எந்த நேரமும் பஸ் கிடைக்காது. பஸ்சை தவற விட்டால் ஸ்ரீபெரும்புதூருக்கு பஸ்சில் சென்று பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு ரெயில் சேவை வந்தால் எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். என்னை போன்று வேலைக்கு செல்லும் பல பேர் பயன் அடைவார்கள். முக்கியமாக பெண்கள் பலருக்கு பெரும் உதவியாக இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் ரெயில் சேவை அனைவருக்கும் ஒரு வர பிரசாதமாக அமையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×