என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • நடைபயிற்சி செய்பவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
    • நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமரவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி இன்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து அவரும் நடந்து சென்றார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் தொகுதி எம்பி க. செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழில ரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மற்றும் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் மற்றும் பொதுமக்கள், நடைபயிற்சி செய்பவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமரவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் வரை சென்று நிறைவடைந்தது.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசன், நேற்று ஜாமினில் விடுதலை ஆனார்
    • கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன்

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்திற்கு உள்ளானார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    ஜாமின் கிடைத்த நிலையில், டிடிஎஃப் வாசன் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், சர்வதேச லைசென்ஸ் பெற்று மீண்டும் பைக் ஓட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது. சர்வதேச லைசென்ஸ் எடுக்கலாம். இல்லையெனில் மேல்முறையீடு செய்யலாம். கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன். எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பேன். ஆனால் 10 வருடம் லைசென்ஸ் ரத்து என்றபோது சற்று வருத்தமாக இருந்தது.

    இவ்வாறு டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.

    ஆனால், சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் வாகனம் ஓட்ட முடியாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான்.
    • தவறு செய்கிறபோது அந்தந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது.

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இலங்கையை உருவாக்கிய பெருமை தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் இங்கிருந்து சென்று 200 ஆண்டுகள் ஆகிறது. அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக இலங்கை அரசு மலையகத் தமிழர்களுக்காக ஒரு விழாவினை நடத்துகிறது. இந்த விழாவில் நானும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள இருக்கிறோம்.

    சங்கரய்யா ஒரு மிகப்பெரிய தலைவர். அவருடைய சித்தாந்தத்தில் உறுதியானவர். தமிழக மக்களின் நலனுக்காக போராடியவர். சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நிலைப்பாடு. இது தொடர்பாக அனுப்பப்பட்டு இருக்கிற கோப்புகளை பற்றி எங்களுக்கு தெரியாது. எங்களுடைய நிலைப்பாடு சங்கரய்யாவுக்கு நிச்சயமாக கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.

    சாதி என்ற நச்சு பரவுவதற்கு நாமே காரணமாக இருந்திருக்கிறோம். நெல்லையில் நடைபெற்ற அந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். மனிஷ் சிசோடியாவின் கைதைப் பொறுத்தவரை உரிய ஆவணங்களோடு தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு கைது செய்தது.

    தவறு செய்கிறபோது அந்தந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் பா.ஜ.க. மட்டும் தான் அப்படி நடவடிக்கை எடுக்கிறது என்று சொல்வது தவறு.

    இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான். நேற்று நடிகர் விஜய் பேசியதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பழையவர்களே 30,40 வருடம் இருந்திருக்கிறார்கள். புதியவர்கள் வரவேண்டும் அவர்களுடைய கருத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எல்லோரையும் மக்கள் பார்க்கட்டும். அதில் யார் சிறந்தவர் என்று முடிவு செய்து கொள்ளட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர்.
    • காரில் உள்ள இருக்கையில் இருந்த ஐபோனை கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது.

    காஞ்சிபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் பட்டு சேலை எடுக்க 2 கார்களில் காஞ்சிபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு சேலை கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு 4 பட்டு சேலைகளை வாங்கி விட்டு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அவர்கள் கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர். சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்தபோது ஒரு காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 4 பட்டு சேலைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.

    காரில் உள்ள இருக்கையில் இருந்த ஐபோனை கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது. திருமணத்திற்கு எடுத்த பட்டுச்சேலைகள் கொள்ளை போனதால் திருமண விட்டார் சோகம் அடைந்தனர்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தரமாக அமைக்காததால் 2 நாள் மழைக்கே பெயர்ந்து உள்ளன.
    • சாலை சீரமைப்புக்கு குறைந்த அளவு தான் நிதி ஒதுக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரத்தில் சேதம் அடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு அவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டிவருகிறது. கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரம் பகுதியில் கன மழை கொட்டியது.

    இதில் 19 -வது வார்டுக்கு உட்பட்ட சங்குசா பேட்டை பகுதியில் போடப்பட்ட பேட்ச் ஒர்க் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளன.

    இந்த சாலை முன்பை விட தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பின்னரே மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    குண்டும் குழியுமான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அதில் தேங்கி உள்ள தண்ணீரில் விழுந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த சாலை அமைக்கும் முன்பே ஓரளவு போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பின்னர் தற்போது பெய்த மழையில் முன்பைவிட மிகவும் மோசமாக மாறிவிட்டது. தரமாக அமைக்காததால் 2 நாள் மழைக்கே பெயர்ந்து உள்ளன. இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சாலை சீரமைப்புக்கு குறைந்த அளவு தான் நிதி ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் ஒப்பந்ததாரர்கள் முழுமையாக தரமாக சாலையை சீரமைத்திருக்க வேண்டும். சாலை சேதம் அடைந்த இடத்தில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • முதலமைச்சர், நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபயிற்சி இயக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.
    • நடைப்பயிற்சி துவங்கும் இடமான மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலம் பெறுவதற்கான நடைப்பயிற்சி இயக்கம் நடைபெற உள்ளது. வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) முதலமைச்சர், நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபயிற்சி இயக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் , கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நலவாழ்வு நடைபயிற்சி இலக்காக 8 கிலோமீட்டர் அளவிற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடைபாதை வழித்தடங்களில் தாகம் தணிக்க குடிநீர் வசதிகள், ஓய்வெடுக்க அமரும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி துவங்கும் இடமான மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்று நடப்போம், நலம் பெறுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பழைய ரெயில் நிலையம், வளக்கடி கோவில் தெரு, ராஜாஜி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது.
    • உத்திரமேரூர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    மேலும் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளதால் பழைய சீவரம், வள்ளிபுரம் மற்றும் வாயலூர் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

    இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் பழைய ரெயில் நிலையம், வளக்கடி கோவில் தெரு, ராஜாஜி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது.

    உத்திரமேரூர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
    • கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.

    அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

    பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.

    மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.

    இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.

    மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

    இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

    காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

    இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    இந்தியாவில் ஆண்டு தோறும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை "பிங்க் அக்டோபர்" என்ற பெயரில் மார்பக புற்று நோய் குறித்து பொது மக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் 9 ஆயிரம் இறப்புகளுடன் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் இறப்பதை ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்று நோய் பாதிப்புக்குள்ளாவதை முற்றிலும் அகற்றும் வகையில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதை முன்னிட்டு காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை கலெக் டர் கலைச்செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் காரைப் பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன், நிலைய மருத்துவமனை அலுவலர் சிவகாமி, உதவி பேராசிரியர் ஜெயபாரதி, டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர்.
    • கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமின் அன்சாரி. நேற்று இரவு 8 மணியளவில் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் மட்டும் கடைக்கு வந்து திடீர் சோதனை நடத்தினார்.

    விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது புகார் வந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமின் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர். மீண்டும் சோதனையில் ஈடுபட்டதால் மனவேதனை அடைந்த தமின்அன்சாரி தனது குடும்பத்தினை கடைக்கு வரவழைத்து பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை கடையின் சுவரில் அதிகாரி ஒட்டிச் சென்றார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது.
    • மணிகண்டீஸ்வரர் குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சி தோண்டான்குளம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது. இந்த லிங்கம் வெட்ட வெளியில் இருப்பதை கண்டு, கிராம மக்கள் கோவில் கட்டமுடிவு செய்தனர். இதற்காக கால்கோள் பூஜை திருவாரூர் சிவ நடராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய திருப்பணிக் குழுவினர், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் தோண்டான்குளம் கிராமம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மக்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தலவரலாறு

    பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மணிகண்டீஸ்வரரை வழிபட்டு உள்ளனர். மணிகண்டீஸ்வரர் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு பொதுவாக காணப்படுகிறது. திருப்பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சுவால் துயரம் அடைந்த, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்ந நஞ்சை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரம்மன், திருமால் ஆகியோர் தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் `மணிகண்டம்' எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும்.

    சிவன் அருள் பெற்ற இங்குள்ள குளம் மனிதர்களால் தோண்டப்படாமலே சுவையான நீரூற்று பெற்று இயற்கையாகவே அமைந்ததன் பொருட்டு தோண்டாகுளம் என்றும் பின் தோண்டாங்குளம் என்றும் மருவியது.

    • மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள் இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
    • நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    வாலாஜாபாத்:

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் நலம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கு வாலாஜாபாத்தில் செயல்படும் அரிமா சங்கம் மற்றும் அஞ்சலாட்சி பல் ஆஸ்பத்திரி இணைந்து பல் பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமில் பல் மருத்துவ சிகிச்சை சிறப்பு டாக்டர் ஆச்சியப்பன் தலைமையில் பல் மருத்துவர்கள் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள், பற்பசை போன்றவற்றை இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.

    நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    ×