என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சி உதவியாளரான குப்பன் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் சென்று அவருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம், குப்பனிடம் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்தார்.

    இதற்கு முன்பு தி.மு.க. வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் சதீஷ், திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் ராமானுஜர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 62). இவரது மனைவி துரைராணி (56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    தற்போது மூர்த்தி, துரைராணி மட்டும் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள தனது மகள் வீட்டுக்கு மூர்த்தி, துரைராணி இருவரும் சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.53 ஆயிரம், 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மூர்த்தி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் 3 வாலிபர்கள் முக கவசம் அணிந்து வந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் சாலையில் நோட்டமிட்டு கொண்டிருப்பதும், 2 பேர் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று விட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்தது.

    கொள்ளையர்களுக்கு 15 முதல் 20 வயது வரை இருக்கும் என்று தெரிகிறது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒரகடம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 74). இவர் கடந்த 29-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஒரகடம் கூட்டு சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சக்கரவர்த்தியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக அரசு ஈடுபடுத்த உள்ளது.

    எனவே இந்த பணிக்கு செல்ல விருப்பமும் உடல் திடகாத்திரமும் உள்ள 70 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

    அவ்வாறு பணிபுரிய விருப்ப மனு அளிக்கும் அனைவருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலமாக தபால் ஓட்டுக்கு வழிவகை செய்யப்படும். மேலும், தேர்தல் பணி ஆட்சேர்ப்பு நிமித்தமாக விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் இயங்கும் என்பதால் முன்னாள் படைவீரர்கள் அனைவரும் அந்த தினங்களிலும் அலுவலக நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை) தேர்தல் பணி விருப்ப விண்ணப்பத்தினை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு, காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநரை 044-2226 2023 என்ற எண்ணில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ்துறை சார்பில் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி அரசில் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு செய்து வருகின்றனர்.

    அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், சுங்குவார் சத்திரம் அடுத்த சோகண்டி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபட்டு அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அமாவாசை ஆகியோரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.66ஆயிரத்து 500 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து காஞ்சீபுரம் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 7 சாராய ஆலைகளை கொண்டு வந்தது திமுக தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தமிழகத்தில் மொத்தம் 11 சாராய ஆலைகள் உள்ளன. அதில் 7 ஆலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது. அந்த சாராய ஆலைகளை கொண்டு வந்தது தி.மு.க..

    தி.மு.க.வால் செயல்படும் மது ஆலையால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர்.

    காஞ்சிபட்டு உடுத்தினால் பெண்கள் தேவதையாக மாறி விடுவார்கள். ஆனால் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக நெசவு தொழில் நலிந்து வருகிறது.

    வெளி மாநிலத்தில் இருந்து பட்டு புடவை வாங்க வரும் பொதுமக்களிடம் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்ய ஒரு கூட்டம் சங்கமே உருவாக்கியுள்ளது. அதனை தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    காஞ்சீபுரம் பெருநக ராட்சியை மாநகராட்சியாக மாற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விவசாயி மீண்டும் தமிழ்நாட்டை ஆள போகிறார்.

    ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன். சாராயம் குடிப்பதனால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

    44 சமுதாய தலைவர்கள், மதகுருமார்களுடன் சேர்ந்து கலைஞரை சந்தித்தேன். சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினேன்.

    இதன் எதிரொலியாக விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது. சாராயக் கடையை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான்.

    இவ்வாறு ராமதாஸ் பேசினார். 

    காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் பறக்கும் படை அலுவலர் கலைச்செல்வி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படை அலுவலர் கோமதி பறிமுதல் செய்தார்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 20 ஆயிரம், வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமியிடம் ஓப்படைக்கப்பட்டது.
    பல்லாவரம் அருகே அக்காள் கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் கண்ணகி தெருவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாயேஸ் அலி (25) தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    மற்றொரு கட்டிட தொழிலாளி ஆதிமூலம் (44), அவரது மனைவி அமுதா மற்றும் மகன் நித்திஸ் என்கிற அப்பு ஆகியோருடன் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வருகின்றனர்.

    பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜூஸ் அடிக்கடி அவரின் வீட்டிற்கு வந்து சென்றதில் அருகில் வசித்து வந்த அமுதாவுடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பாயேஸ் அலி இரண்டு நாட்களுக்கு முன்னர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து இன்று மீண்டும் இருவரின் குடும்பத்தினருக்கிடையே வாய்தாகராறு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆதிமூலம், அமுதா மற்றும் மகன் நித்திஸ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாயேஸ் அலியை சரமாரியாக குத்தியுள்ளனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாயேஸ் அலியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெறுகிறது.

    கொலைக்கு உடந்தையாக இருந்த அவர்களின் மகன் நித்திசை போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. சுந்தர் மீண்டும் களத்தில் நிற்கிறார்.
    அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 20,000
    2. அசையும் சொத்து- ரூ. 49,08,525
    3. அசையா சொத்து- ரூ. 55,00,000

    திமுக வேட்பாளர் சுந்தர் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 13,59,539
    3. அசையா சொத்து- ரூ. 94,60,000

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு கரைகளை ஒட்டி அமைந்துள்ளது உத்திரமேரூர் தொகுதி.  உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடைமுறைகளை குடவோலை முறையின் மூலம் அறிமுகப்படுத்திய ஊர் உத்திரமேரூர். இங்குள்ள பண்டைய கால கல்வெட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.

    உத்திரமேரூர் தொகுதி

    உத்திரமேரூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 633 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து, 25 ஆயிரத்து 347 ஆண்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 252 பெண்கள், 34 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். 

    விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாய கூலி வேலை, கட்டுமான தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். 1952-க்கு பிறகு இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    உத்திரமேரூர் தொகுதி

    உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் வாலாஜாபாத் பேரூராட்சி ஆகியவை தொகுதியில் அடங்கும். காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சியின் சில பகுதிகளும் உத்திரமேரூர் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். அடுத்த இடத்தில் ஆதிதிராவிடர்கள், முதலியார்கள் உள்ளனர். எனவே அவர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.

    உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட மதூர், அரும்புலியூர், குண்ணவாக்கம் ஆகிய பிர்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் கல்குவாரிகளால் அளவிற்கு அதிகமான கனிமவளம் கொள்ளை அடிக்கப்படுகிறது, விபத்துகளும், உயிர் இழப்புகளும் அதிகம் ஏற்படுவதாகவும். சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குடிநீர் மாசு ஏற்படுவதால் மீண்டும் புதிய கல் குவாரி களுக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்று மக்கள் கூறுகின்றனர்.

    உத்திரமேரூர் தொகுதி

    மன்னராட்சி காலத்தில் வெட்டபட்ட உத்திரமேரூர் பெரிய ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் இதுவரை தூர்வாரப்படாத நிலையில் விவசாயத்துக்கு உதவியாக தூர்வார வேண்டும். படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் உத்திரமேரூர் பகுதியில் தொழில் பூங்கா ஓன்று அமைப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும். காஞ்சீபுரம்- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் செய்யாற்றில் குறுக்கே பழுதடைந்த தரை பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பன தொகுதியில் முக்கிய கோரிக்கையாக உள்ளன.

    உத்திரமேரூர் தொகுதி

    மேலும் வாலாஜாபாத், உத்திரமேரூர், பேரூராட்சி நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

    உத்திரமேரூர் தொகுதி

    73 ஊராட்சி மன்றங்களைக் கொண்ட உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாக வளர்ச்சிக்காக 2 ஆக பிரித்து சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதியதாக ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.

    தேர்தல் வெற்றி

    உத்திரமேரூர் தொகுதி

    1952 ராமசாமி முதலியார் (காங்கிரஸ்)
    1957 ராமசாமி முதலியார் (சுயேட்சை)
    1967 ராஜகோபால் (தி.மு.க.)
    1977 பக்கூர் சுப்ரமணியன் (அ.தி.மு.க.)
    1980 ஜெகத் ரட்சகன் (அ.தி.மு.க.)
    1984 நரசிம்ம பல்லவன் (அ.தி.மு.க.)
    1989 கே.சுந்தர் (தி.மு.க.)
    1991 காஞ்சி பன்னீர்செல்வம் (அ.தி.மு.க..)
    1996 கே.சுந்தர் (தி.மு.க.)
    2001 சோமசுந்தர் (அ.தி.மு.க.)
    2006 கே.சுந்தர் (தி.மு.க.)
    2011 கணேசன் (அ.தி.மு.க.)
    2016 கே.சுந்தர் (தி.மு.க.)
    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றபிறகு சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் ஒரு பார்சல் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு தங்க சங்கிலி மற்றும் கை வளையம் இருந்தது.

    துபாயில் இருந்து அதனை விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த யாரோ, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமானத்தின் கழிவறையில் அந்த பார்சலை வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.

    ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் சூலை கருப்பு என்கி்ற வடிவேல் (வயது 30), இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார். தற்போது அவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் வடிவேல் அந்த பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இரவு தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியும், செங்கற்களால் கடுமையாக தாக்கியும் உள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்

    இது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த சதீஷ் (25),செல்வம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

    ×