என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பின்னர் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லவேண்டும்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள ஒரு இருக்கை சற்று தூக்கியபடி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது அதில் 2 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அந்த பார்சல்களை எடுத்து பிரித்து பார்த்தனா். அதில் 2 பார்சல்களிலும் 6 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமான இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து இருக்கலாம்? அல்லது அந்த விமானம் உள்நாட்டு விமானமாக செல்வதை அறிந்து, இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு உள்நாட்டு பயணிபோல் வந்து அதை எடுக்க முயற்சி செய்திருக்கலாம் என தெரிகிறது.

    இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, துபாயில் இருந்து சென்னைக்கு அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யார்? என்று விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 248 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,238-ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது. 
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,80,184 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 248 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,238-ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 31,004 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 476 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்பட 4 அரசு ஆஸ்பத்திரிகள், 28 ஆரம்ப சுகாதார நிலைங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரத்தில் பட்டு சேலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,659 தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் மண்ணில் புதைந்து கிடக்கும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்செக்கை தமிழக தொல்லியல்துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-

    உத்திரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மண் மேடு ஒன்றில் முள்புதரில் புதைந்த நிலையில் கல்செக்கு ஒன்று இருப்பதை கண்டறிந்தோம். 3 வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.

    பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்கள் மக்கள் வாழ்வில் பெரும் இடம் பிடித்திருந்தது. சமையல் பயன்பாட்டுக்கும் மருத்துவத்துக்கும் கல்செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டுக்கும் கிராமங்களில் விளக்கு இல்லையென்றால் தெருவிளக்காகவும் கல்செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டி தந்திருக்கின்றன.

    ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தினர் உடல் நலம் பெற வேண்டி கோவிலுக்காகவோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள்.

    இதன் மூலம் பொதுமக்களும் தானமாக பெற்றனர். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு, யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டனர்.

    அதன்படி இந்த செக்கில் 3 வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சி காலத்தில் கலைவாணிகன் என்பவர் இந்த கல்செக்கை ஊருக்கு தானமாக வழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த அரிய வகை கல்செக்காகும். இந்த கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்று அழைக்கப்படுகிறது. உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள ஒரே கல்வெட்டுகளுடன் கூடிய செக்கு என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

    1923-ம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மண் மேட்டில் முள்புதரில் புதைந்த நிலையில் உள்ள இதன் ஒரு சிறு பகுதி மட்டுமே தற்போது வெளியில் தென்படுகிறது.

    இயற்கை சீற்றங்களால் விரைவில் முழுமையாக புதைந்து போய் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது.

    எனவே வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கொற்றவை ஆதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ரெயில்வே ஊழியர் வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம், சித்தேரி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரையரசன் (வயது 38). ரெயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    நேற்று காலை துரையரசன் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    காஞ்சீபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
    சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் வந்தனர்.

    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இது தற்போது குறைந்து நேற்று சுமார் 5,500 பேர் மட்டுமே வந்தனர்.

    இதைப்போல் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர். தற்போது அது குறைந்து நேற்று சுமார் 6,500 பேர் மட்டுமே பயணித்தனர்.

    கோப்புபடம்

    இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன.

    பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூர் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூர்-1, மதுரை-1, பாட்னா-1 ஆகிய 9 விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சீபுரம் அருகே வக்கீல் ஒருவர் மர்மநபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகரசன் (வயது 40). இவர் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி காரை கிராமத்திற்குச் செல்லும் வழியில் தனது நண்பர் சங்கர் என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த அழகரசனை, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த அழகரசனின் நண்பர் சங்கர் அதை தடுக்க முயன்ற போது, அவரை அந்த கும்பல் வெட்டியதில் படுகாயமடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகரசனின் உடலை மீட்டு, காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    அப்போது அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் குற்றவாளிகளை கைது செய்வது தொடர்பாக உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் களைந்து சென்றனர்.

    இந்த நிலையில், கொலைக் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழில் சம்பந்தமாக ஏதேனும் முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வக்கீல் ஒருவர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட சேக்குப்பேட்டை தெற்குதெரு, பாண்டவ பெருமாள் கோவில் தெரு, லிங்கப்பன் தெரு, உள்ளிட்ட தெருக்களில் இரும்பு தகடுகள் வைத்து அடைக்கப்பட்டு வருகி்றது. அங்கு உள்ள நோயாளிகளின் உடல் நிலையை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    அடைக்கப்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் பேரில் காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஸ்ரீபெரும்புதூர் சவீதா மருத்துவ கல்லூரி, குன்றத்தூர் மாதா மருத்துவமனை கல்லூரி, மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என 4 தனியார் மருத்துவ கல்லூரி மையங்களும், பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரகடம் பகுதியில் அரசு தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதி என 6 மையங்களில் 1,780 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அனைத்து அலுவலரும் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.

    அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமி‌ஷனரும் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார், தீயணைப்பு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது.

    வெளியூரில் இருந்து வந்து தேர்தல் பணிபுரிந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போடுபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    ஆலந்தூர் தொகுதியில் ஆயுதப்படை போலீசார், தனிப்படை போலீசார், தீயணைப்பு படையினர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் தினத்தில் பணியாற்றினார்கள்.

    இவர்கள் தபால் வாக்கு போடுவதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆலந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தனர்.

    இதில், 200-க்கும் அதிகமான மனுக்கள் ஏற்கப்படவில்லை. இதுகுறித்து முறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் இந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தபால் வாக்கு போட முடியாமல் தவித்து வருகிறார்கள். தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமி‌ஷனரும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் தெரிவித்தால் எந்த தொகுதியில் ஓட்டு இருக்கிறது என்பது தெரியும். இதன் மூலம் தபால் வாக்குகளை போடலாம்.

    மே மாதம் 2-ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே, மே 1-ந் தேதி வரை தபால் வாக்குகளை போட முடியும். எனவே இவர்கள் தபால் வாக்கு அளிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 37), முகமது அலி அக்பர் (61), தேனியை சேர்ந்த முகமது அப்துல்லா (37), சென்னையை சேர்ந்த அபு ஜாவித் (27), சிவகங்கையை சேர்ந்த ஷாஜகான் (57) ஆகிய 5 பேர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சென்றனர்.

    அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், 5 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசின் டிராலி கைப்பிடி சற்று கனமாக இருந்தது.

    உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கழுற்றி பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக சவுதி ரியால், குவைத் தினார், அமெரிக்க டாலர், ஓமன் ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    5 பேரிடம் இருந்து ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில், துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் (வயது 28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் ஒருவித பதற்றத்துடனும், பரபரப்பாகவும் காணப்பட்டார். எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர் அணிந்து இருந்த பேண்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர், விமான இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டதாகவும், பின்னர் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் ஏறிய தான் இருக்கையின் அடியில் இருந்த தங்கத்தை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அதபோல் துபாயில் இருந்து லக்னோ வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (30) என்பவர் வந்தார். இவரும் அதேபோல் விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தை தனது கால் உறைக்குள்(சாக்ஸ்) மறைத்து எடுத்து வந்தார். அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×