என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
நாடு முழுதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருப்பதால் பயணிகள் விமான பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி இந்தியாவில் அதிகளவில் நோய் தொற்று பரவுவதால் வெளி நாடுகளும் இந்தியாவில் இருந்து செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தும் சூழல் நிலவுவதால் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வெளியேறும் அவசரத்தில் மக்கள் உள்ளனர். இதன் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் இருந்து நியூயார்க், லண்டன், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு விமான கட்டணம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு செல்ல நேரடி விமான சேவை இல்லை. துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.

சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்ற நிலையில், பயணிகள் எண்ணிக்கை இல்லாததினாலும், நேரடி விமான சேவை இல்லாததாலும், வெளிநாடுகளில் விமான பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதினாலும் சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 39 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக இருக்கின்ற டிக்கெட் கட்டணம் ஒரேடியாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது பெங்களூருவைச் சேர்ந்த வெலண்டினா மேரி (வயது 27) என்ற இளம்பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெலண்டினா மேரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆலந்தூர:
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் நேற்று இரவு வந்தது.
அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது சமீம் என்பவர் லிபியா நாட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து அங்கிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது.
லிபியா நாடு இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்ற பட்டியலில் உள்ளது.எனவே இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியர்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தடைவிதித்துள்ளது.
இந்த தடையை மீறி, முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்றுவந்ததால் அவரை வெளியே அனுப்பாமல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது முகமது சமீம், தான் பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் பார்மசிஸ்டாக பணியாற்றி வருவதாகவும், அந்த கம்பெனி பணி நிமித்தமாக கடந்த 2019-ம் ஆண்டில் லிபியாவிவுக்கு அனுப்பி வைத்தது. முறையான ஆவணங்களுடன் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் லிபியா சென்று அங்கு 2 ஆண்டுகள் பணியில் இருந்தேன். அப்போது லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்று என்னிடம் கூற வில்லை என்றும் கூறினார்.
ஆனால் சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றதாக முகமது சமீம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (வயது 30), முகமது அப்பாஸ் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லாததால் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள கழிவறையில் சி.டி.கேசட் ஒன்று கிடந்தது. வழக்கத்துக்கு மாறாக அது கனமாக இருந்ததால் கேசட்டில் இருந்த கவரை பிரித்து பார்த்தனர்.
அதில் தங்கத்தை சி.டி. கேசட்டாக மாற்றி, அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடித்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.48 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் விமான நிலைய பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று இருந்த 2 பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமிகள் யாா்? என விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம், சித்தேரி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரையரசன் (வயது 38). ரெயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நேற்று காலை துரையரசன் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காஞ்சீபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் வந்தனர்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இது தற்போது குறைந்து நேற்று சுமார் 5,500 பேர் மட்டுமே வந்தனர்.
இதைப்போல் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர். தற்போது அது குறைந்து நேற்று சுமார் 6,500 பேர் மட்டுமே பயணித்தனர்.

இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன.
பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூர் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூர்-1, மதுரை-1, பாட்னா-1 ஆகிய 9 விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






