என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. பெருமாள் கோவில்களில் அதிகாலையில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் வழக்கமாக திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசிப்பது வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் நாளை தரிசனத்துக்கு தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழவில் நாளை (13-ந்தேதி) பொதுமக்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் ஆகம விதிகளின்படியும் பழக்க வழக் கத்தின் படியும் சன்னதிக் குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.
எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நேரலையை நாளை காலை 6 மணி முதல் https//youtube/nBsmNhigTji என்ற இணையதள முகவரியில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் வீர ராகவர் கோவிலில் நாளை சொர்க்வாசல் திறக்கப்படும் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், காலை 6.30 மணிக்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை இயங்கி வருகிவருகிறது.
இங்கு 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை பூந்தமல்லி, ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை நிர்வாகம் விடுதியில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் பூந்தமல்லி அருகே விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் தரமற்ற உணவு சாப்பிட்டதால் 200-க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சில பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. 15 ஆயிரம் தொழிலாளர்கள் நிலைமை கேள்விக் குறியானது.
இந்தநிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. முதற்கடமாக 500 தொழிலாளர்களை கொண்டு தொழில் சாலை இயங்க உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பது வருமாறு:-
அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடி வருவது வழக்கம்.
இந்நாளில் தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதும் வழக்கம். போகி அன்று, பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல் திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில், 'பழையன கழிதலும். புதியன புகுதலுமென' நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
பழைய பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகையும், நுண்துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று வாயு மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கபபட்டு ஆகாயம், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு (15) ன்படி இது தண்டனைக்குரியதாகும்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர்:
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அதனை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வீடுகளையும் காலி செய்ய மறுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பெத்தேல் நகருக்கு வந்தனர். அவர்கள் வீடுகளை காலி செய்யக்கோரி அங்கு குடியிருப்பவர்களுக்கு படிவம்-6 நோட்டீஸ் கொடுக்க முயன்றனர்.
இதனை வாங்க மறுத்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும், நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய்துறையினர் வெளியே செல்லவேண்டும் என்று கோஷமிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தகவல் அறிந்த கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஏராளமானோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை காலிசெய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க வெளிநாட்டவருக்கு ரூ.600, உள்நாட்டவருக்கு ரூ.40 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலையின்போது தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நுழைவு சீட்டுகள் ஆன்-லைனில் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால் ஆன்டிராய்டு போன் இல்லாதவர்களும், கிராமத்து சுற்றுலா பயணிகளும் டிக்கெட் எடுப்பதில் சிரமப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆன்-லைன் டிக்கெட் நிறுத்தப்பட்டு கவுன்டரில் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கப்பட்டது.
தற்போது ஒமைக்ரான், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீண்டும் தொல்லியல்துறை இன்று முதல் புராதன சின்னங்களை பார்க்க ஆன்ராய்டு போன் மூலம் பார்கோர்டு ஸ்கேன் செய்து ஆன்-லைனில் மட்டுமே டிக்கட் வழங்கும் முறையை தொல்லியல் துறையினர் நடைமுறைபடுத்தி உள்ளனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.
இதனால் இன்று காலை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. அதன் பின்னால் சென்னை நோக்கி வந்த நிஜாமுதீன் விரைவு ரெயிலில் பயணிகள் அனைவரும் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
பழுதாகி நின்ற விழுப்புரம் பயணிகள் ரெயில் சக்கரத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






