என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 598 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் சுமார் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் முக்கிய சந்திப்பு, சாலைகளில் சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்தும், நோய்தொற்று விழிப்புணர்வு அவசியத்தையும் வலியுறுத்தினர். அத்தியாவசிய சேவைகளுக்கும், அது சார்ந்த பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 598 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை வேளச்சேரி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வமாரி (வயது 40). இவர், வீட்டை பூட்டிவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது.
    ஆலந்தூர்:

    இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா முதல் மற்றும் 2-வது அலைக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு நாளைக்கு 270 புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா 3-வது அலை பெருமளவு அதிகரித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு 206 விமான சேவைகள் இயக்கப்பட்டு, அதில் 20 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 18-ந் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பயணிகள் வரத்து மேலும் குறைந்து விட்டதால், விமான சேவையும் குறைக்கப்பட்டது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது.

    சென்னையில் இருந்து நேற்று டெல்லி, மும்பை, மதுரை, தூத்துக்குடி, கோவை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு 90 விமானங்கள் இயக்கப்பட்டது. அதில் 6,408 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 93 விமானங்கள் இயக்கப்பட்டு, அதில் 5,988 பேர் பயணம் செய்தனர். மொத்தம் 183 விமானங்களில் 12,396 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

    ஏற்கனவே கொரோனா 3-வது அலையால் விமான சேவை குறைந்து இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவையும் மேலும் குறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குன்றத்தூரில் மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறைச்சி வியாபாரி கைதானார்.
    பூந்தமல்லி:

    சென்னையை அடு்த்த குன்றத்தூர் சம்பந்தம் நகரைச் சேர்ந்தவர் பத்மகுரு (வயது 37). அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சிந்து (30). பத்மகுருவுக்கும், குன்றத்தூரை சேர்ந்த மீனா (29) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருப்பதாக கூறி, பத்மகுருவின் மனைவி சிந்து நேற்று முன்தினம் இரவு மீனாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மீனா, அவருடைய கணவர் ரஜினி மற்றும் அவர்களது உறவினர்கள் பத்மகுருவின் வீட்டுக்கு சென்று இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பத்மகுரு, வீட்டில் இருந்த கத்தியால் மீனாவின் உறவினரான குமரன் (33), விஷ்வா (19) ஆகியோரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த குமரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த விஷ்வா, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீசார், கொலையான குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான குமரன், ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் பிட்டராக வேலை செய்து வந்தார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறைச்சி வியாபாரி பத்மகுருவை கைது செய்தனர்.
    போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 20 ஆயிரமாக குறைந்தது. இதனால் உள்நாட்டு விமானங்களும் 270 லிருந்து கடந்த வாரம் 206 ஆக குறைந்தது. தற்போது 186 விமான சேவையாக குறைந்தது.

    பொங்கல் பண்டிகையினால் தொடர் விடுமுறை, கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் வருகை குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள், அதைப்போல் சென்னையிலிருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    விமானங்கள் ரத்து ஆனதால் பயணிகளுக்கு விமான கட்டணம் பணமாக திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த டிக்கெட்களை பயன்படுத்தி எந்த நகரமாக இருந்தாலும் பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பயணிகள் தரப்பில் விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விமானம் ரத்தானால், விமான கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    விருகம்பாக்கத்தில் முதியவர் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (67) துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவர் கடந்த மாதம் 29-ந் தேதி அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் நகையை அடமானம் வைத்து ரூ1லட்சத்து 28 ஆயிரம் பணத்துடன் வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் நடராஜனிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி திடீரென பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், ஏட்டு ராஜ்மோகன், அசோக் குமார், ஞானசேகர், கேசவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மர்ம கும்பலை பிடிக்க சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வங்கி முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவன் ஆந்திரா மாநிலம் ஒஜிகுப்பத்தை சேர்ந்த சரவணராஜ் (46) என்பதும் வில்லிவாக்கம் பகுதியில் தங்கி தனியாக வங்கிக்கு வந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களை நோட்ட மிட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. நடராஜனிடம் பணப்பையை பறித்து சென்றதையும் அவன் ஒப்புக்கொண்டான்.

    இதையடுத்து போலீசார் சரவணராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணராஜ் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    அச்சரப்பாக்கம் அருகே கணவன்-மனைவி உள்பட 5 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சரபாக்கம் அருகே உள்ள கடமலை புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜவரதன் (வயது 70). இவர்களது மகன் ஜெகநாதன், மருமகள் ஹேமலதா, பேரன் கவின். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 8.30 மணி அளவில் கஜவரதன் உட்பட 5 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென 10 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் உருட்டுக்கட்டை வைத்து இருந்தனர். அதனை வைத்து வீட்டில் இருந்த அனைவரையும் விரட்டினர்.

    மேலும் கஜவரதனையும், அவரது மகன் ஜெகநாதனையும் சரமாரியாக தாக்கினர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பின்னர் மர்ம கும்பல் கஜவரதன், லட்சுமிபாய், ஜெகநாதன், ஹேமலதா, சிறுவன் கவின் ஆகிய 5 பேரையும் கட்டிப்போட்டனர். இதைத்தொடர்ந்து ஹேமலதா, லட்சுமிபாய் ஆகியோர் அணிந்து இருந்த நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று பீரோவில் நகை, பணம் உள்ளதா என்று தேடினர்.

    2 பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்த தப்பி சென்று விட்டனர்.

    சிறிது நேரத்திற்கு பின்னர் கஜவரதன் தனது கையில் இருந்த கட்டை அவிழ்த்தார். பின்னர் மற்றவர்களின் கட்டையும் அவிழ்த்து மீட்டார்.

    இது குறித்து கஜவரதன் அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மொத்தம் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளை கும்பல் வீட்டுக்குள் புகுந்ததும் அனைவரையும் மிரட்டி விட்டு டி.வியின் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் பயந்து போன அனைவரும் கூச்சலிடவில்லை.

    கஜவரதனின் வீடு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இவரது வீட்டின் அருகே மற்ற வீடுகள் எதுவும் இல்லை. வீட்டின் அருகே உள்ள காலி இடத்தின் வழியாக கொள்ளையர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் சர்வசாதாரணமாக வந்து தங்களது திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    மேலும் கொள்ளையர்கள் அனைவரும் முகத்தை தெரியாத அளவிற்கு குல்லா அணிந்து இருந்தனர். அவர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை முடித்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் வருவதற்கு முன்பே ஜவுளி கடையில் பைகளை கட்டப் பயன் படுத்தும் பிளாஸ்டிக் டேக்கை கொண்டுவந்து இருக்கிறார்கள்.

    ஹேமலதாவையும், அவரது மகன் கவினையும் அந்த பிளாஸ்டிக் டேக்கால் கட்டி உள்ளனர். கொள்ளை யர்கள் அனைவரும் அதிக அளவில் அவர்களுக்குள் பேச வில்லை. இதனை வைத்து சிக்கிக்கொள்வோம் என்று தெரிந்து காரியத்தை முடித்து உள்ளனர்.

    கொள்ளை நடந்த வீட்டின் அருகே மேலும் 5 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இத்தனை பேர் மொத்தமாக கொள்ளையில் ஈடுபடுவது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. எனவே இதில் ஈடுபட்டது வட மாநில கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    கொள்ளை திட்டம் முடிந்ததும் அருகே நிறுத்தி இருந்த வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அச்சரப்பாக்கம், கடமலைபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் ஏதேனும் வந்துள்ளதா? என்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் கஜவரதன் வீட்டிற்கு யாராவது வந்து சென்றார்களா? என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். கஜவரதனின் வீடு தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கை வரிசையை காட்டி உள்ளது.

    கொள்ளை கும்பல் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவம் அச்சரப் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. பெருமாள் கோவில்களில் அதிகாலையில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் வழக்கமாக திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசிப்பது வழக்கம்.

    தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் நாளை தரிசனத்துக்கு தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழவில் நாளை (13-ந்தேதி) பொதுமக்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் ஆகம விதிகளின்படியும் பழக்க வழக் கத்தின் படியும் சன்னதிக் குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.

    எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நேரலையை நாளை காலை 6 மணி முதல் https//youtube/nBsmNhigTji என்ற இணையதள முகவரியில் காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் வீர ராகவர் கோவிலில் நாளை சொர்க்வாசல் திறக்கப்படும் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், காலை 6.30 மணிக்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை இயங்கி வருகிவருகிறது.

    இங்கு 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை பூந்தமல்லி, ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை நிர்வாகம் விடுதியில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பூந்தமல்லி அருகே விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் தரமற்ற உணவு சாப்பிட்டதால் 200-க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் சில பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து  பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. 15 ஆயிரம் தொழிலாளர்கள் நிலைமை கேள்விக் குறியானது.

    இந்தநிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. முதற்கடமாக 500 தொழிலாளர்களை கொண்டு தொழில் சாலை இயங்க உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    போகி திருநாளில் பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு காஞ்சிபுரம் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பது வருமாறு:-

    அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடி வருவது வழக்கம்.

    இந்நாளில் தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதும் வழக்கம். போகி அன்று, பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல் திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில், 'பழையன கழிதலும். புதியன புகுதலுமென' நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

    பழைய பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகையும், நுண்துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று வாயு மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கபபட்டு ஆகாயம், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு (15) ன்படி இது தண்டனைக்குரியதாகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாலாஜாபாத் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராணி (வயது 85). இவரது மகள் லட்சுமி. இவர் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது தாய்க்கு தேவையான உணவை நாள்தோறும் வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது தாய்க்கு உணவு வழங்க வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து தனது தாய் வெளியூர் ஏதாவது சென்று இருக்கலாம் என்று நினைத்து உள்ளார்.

    இந்த நிலையில் ராணி வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து லட்சுமி வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி ராணி கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.
    பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    சோழிங்கநல்லூர்:

    ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அதனை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வீடுகளையும் காலி செய்ய மறுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பெத்தேல் நகருக்கு வந்தனர். அவர்கள் வீடுகளை காலி செய்யக்கோரி அங்கு குடியிருப்பவர்களுக்கு படிவம்-6 நோட்டீஸ் கொடுக்க முயன்றனர்.

    இதனை வாங்க மறுத்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும், நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய்துறையினர் வெளியே செல்லவேண்டும் என்று கோ‌ஷமிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    தகவல் அறிந்த கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஏராளமானோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை காலிசெய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ×