என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் சுமார் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் முக்கிய சந்திப்பு, சாலைகளில் சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்தும், நோய்தொற்று விழிப்புணர்வு அவசியத்தையும் வலியுறுத்தினர். அத்தியாவசிய சேவைகளுக்கும், அது சார்ந்த பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 598 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 20 ஆயிரமாக குறைந்தது. இதனால் உள்நாட்டு விமானங்களும் 270 லிருந்து கடந்த வாரம் 206 ஆக குறைந்தது. தற்போது 186 விமான சேவையாக குறைந்தது.
பொங்கல் பண்டிகையினால் தொடர் விடுமுறை, கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் வருகை குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள், அதைப்போல் சென்னையிலிருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் ரத்து ஆனதால் பயணிகளுக்கு விமான கட்டணம் பணமாக திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த டிக்கெட்களை பயன்படுத்தி எந்த நகரமாக இருந்தாலும் பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பயணிகள் தரப்பில் விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விமானம் ரத்தானால், விமான கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (67) துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த மாதம் 29-ந் தேதி அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் நகையை அடமானம் வைத்து ரூ1லட்சத்து 28 ஆயிரம் பணத்துடன் வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் நடராஜனிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி திடீரென பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், ஏட்டு ராஜ்மோகன், அசோக் குமார், ஞானசேகர், கேசவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மர்ம கும்பலை பிடிக்க சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வங்கி முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவன் ஆந்திரா மாநிலம் ஒஜிகுப்பத்தை சேர்ந்த சரவணராஜ் (46) என்பதும் வில்லிவாக்கம் பகுதியில் தங்கி தனியாக வங்கிக்கு வந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களை நோட்ட மிட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. நடராஜனிடம் பணப்பையை பறித்து சென்றதையும் அவன் ஒப்புக்கொண்டான்.
இதையடுத்து போலீசார் சரவணராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணராஜ் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
காஞ்சிபுரம்:
வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. பெருமாள் கோவில்களில் அதிகாலையில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் வழக்கமாக திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசிப்பது வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் நாளை தரிசனத்துக்கு தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழவில் நாளை (13-ந்தேதி) பொதுமக்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் ஆகம விதிகளின்படியும் பழக்க வழக் கத்தின் படியும் சன்னதிக் குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.
எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நேரலையை நாளை காலை 6 மணி முதல் https//youtube/nBsmNhigTji என்ற இணையதள முகவரியில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் வீர ராகவர் கோவிலில் நாளை சொர்க்வாசல் திறக்கப்படும் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், காலை 6.30 மணிக்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை இயங்கி வருகிவருகிறது.
இங்கு 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை பூந்தமல்லி, ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை நிர்வாகம் விடுதியில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் பூந்தமல்லி அருகே விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் தரமற்ற உணவு சாப்பிட்டதால் 200-க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சில பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. 15 ஆயிரம் தொழிலாளர்கள் நிலைமை கேள்விக் குறியானது.
இந்தநிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. முதற்கடமாக 500 தொழிலாளர்களை கொண்டு தொழில் சாலை இயங்க உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பது வருமாறு:-
அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடி வருவது வழக்கம்.
இந்நாளில் தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதும் வழக்கம். போகி அன்று, பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல் திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில், 'பழையன கழிதலும். புதியன புகுதலுமென' நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
பழைய பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகையும், நுண்துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று வாயு மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கபபட்டு ஆகாயம், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு (15) ன்படி இது தண்டனைக்குரியதாகும்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர்:
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அதனை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வீடுகளையும் காலி செய்ய மறுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பெத்தேல் நகருக்கு வந்தனர். அவர்கள் வீடுகளை காலி செய்யக்கோரி அங்கு குடியிருப்பவர்களுக்கு படிவம்-6 நோட்டீஸ் கொடுக்க முயன்றனர்.
இதனை வாங்க மறுத்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும், நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய்துறையினர் வெளியே செல்லவேண்டும் என்று கோஷமிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தகவல் அறிந்த கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஏராளமானோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை காலிசெய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.






