என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்ததாக பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி (வயது 58). கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ (51). நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் (47), இவர்கள் 3 பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 நகை கடன் வழங்கியுள்ளனர்.

    வங்கியில் தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்தார். அந்த புகாரானது காஞ்சிபுரத்தில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியிடம் விசாரணைக்கு வந்தது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்திருப்பது உண்மையென தெரியவந்தது. இதை தொடர்ந்து வங்கியின் செயலாளர் கலைச்செல்வி, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கலைச்செல்வி சென்னை புழல் சிறையிலும், விஜயகுமார் செங்கல்பட்டு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளரான ஜெயஸ்ரீ தலைமறைவானதை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோருக்கு காஞ்சிபுரம் போலீசார் அபராதம் விதித்தனர்.

    காஞ்சிபுரம்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    முகூர்த்த நாளான நேற்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்கள் எளிய முறையில் நடந்தன.

    ஏராளமான பொதுமக்கள் திருமண அழைப்பிதழ்களை காட்டியபடி வாகனங்களில் திருமண விழாவிற்கு சென்றனர். இதனால் வழக்கமான முழு ஊரடங்கு நாட்களை விட வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோருக்கு காஞ்சிபுரம் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியதாக 1,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு படி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 109 வாகன சோதனை சாவடி அமைத்து 1,746 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய 379 மோட்டார் சைக்கிள், 10 கார், 12 ஆட்டோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் சுற்றிய 89 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மின்கம்பத்தில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விக்கிரவாண்டி ஆவுடையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), ஜெயகுமார் (23), ஈஸ்வரன் (25) ஆகியோருடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கண்டிகை பகுதியில் தங்கியிருந்து வடக்குப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    நேற்று வேலை முடிந்து வடக்குப்பட்டு வழியாக கண்டிகை நோக்கி சரக்கு வேனில் 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். வேனை வெற்றி ஓட்டிச்சென்றார். வடக்குப்பட்டு சாலையில் வேன் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் பயங்கரமாக மோதி ஏரிக்கரை பகுதியில் வேன் கவிழ்ந்தது.

    இதில் இரண்டாக உடைந்து வேன் கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.24 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள தாமரைத் தாங்கல் பகுதியில் உள்ள குடோனில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 லாரிகள், 2 மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சசிகுமார், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பழனிவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    சென்னை தாம்பரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவருடைய உறவினர் தாம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த அருளரசன் (27).

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில், சென்னையில் இருந்து வேலூருக்கு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னயன்சத்திரம் அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், அருளரசன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்தரியில் அனுமதித்தனர். அங்கு சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அருளரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் ஜுடித் டிவினோம் வெம்பேசி (வயது 29) என்பவர் வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் 108 மாத்திரைகள் இருந்தன. அந்த மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் அவை, ஹெராயின் போதை பவுடரை மாத்திரைகளாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கிலோ 70 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதை பவுடர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உகாண்டா நாட்டு பெண் பயணியை கைது செய்தனர். மேலும் போதை பவுடர் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கிராம அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கடுவஞ்சேரியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் கடுவஞ்சேரி அடுத்த தாத்தானூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை யொட்டி வீட்டை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
    நேற்று இரவு ராமச்சந்திரனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்து ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ. 75ஆயிரம், லேப்-டாப், எல்.இ.டி. டிவி., உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அரியானாவில் கைது செய்யப்பட்டார்.
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் தியாகு (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள் உட்பட மொத்தம் 63 வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ரவுடிகளின் கொட்டத்தை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்டு வெள்ளதுரையும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி தியாகு அரியானாவில் பதுங்கி இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தனிப்படையினரை அரியானாவுக்கு அனுப்பி வைத்தார். போலீசார் அங்கு சென்று தியாகுவை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
    கொரோனா பரவலை தடுக்க சென்னை விமான நிலையத்தில் 50 சதவீத ஊழியர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வர விமான நிலைய ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிா்வாகம், எலக்ட்ரிக்கல், தொழில்நுட்பம், தீயணைப்பு, ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட விமான நிலைய ஆணையக ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

    கொரோனா 3-வது அலை சமீப காலமாக வேகமாக பரவி வருகிறது. சென்னை விமான நிலையத்திலும் விமான ஆணையக ஊழியா்கள், விமான நிறுவன ஊழியா்கள், பாதுகாப்பு படை போலீசாா் உள்ளிட்ட சுமாா் 70-க்கும் அதிகமானவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஆணையக ஊழியா்கள் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியா்களே பணிக்கு வரவேண்டும் என்று விமான நிலைய ஆணையகம் உத்தரவிட்டு உள்ளது.

    கொரோனா தொற்று பரவலை தடுக்கவே நிா்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், மறுஉத்தரவு வரும்வரை இந்த ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    கொரோனா முதல் அலை, 2-வது அலை பரவியபோதும் இதேபோன்று 50 சதவீத ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அமல்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    கல்பாக்கம் அணுமின் நிலைய கேண்டீன் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 591 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சென்னைக்கு அடுத்த இடத்தில் நோய் தொற்று அதிகம் பரவும் இடமாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.

    நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நோய் தொற்று அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா விடுதி உள்ளது. இங்கு 78 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையல் கல்பாக்கம் அணுமின் நிலைய கேண்டீனிலும் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேண்டீன் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தெரிய வரும். மேலும் அணுமின் நிலைய அனைத்துத்துறை ஊழியர்களும் வரும் 31-ந் தேதி கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப்பணி சேவைகள் நிர்வாகம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு வைத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக சரி வர குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சரி வர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலேன்கேட் பகுதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த சின்ன காஞ்சிபுரம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், தண்ணீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மேலும் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்களாக வீணாக கடலில் சென்று கலந்த பின்பும் கூட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
    உத்திரமேரூர் அருகே அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாப்ப நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர் 2 நாட்களாக தொடர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. வேறு எந்த உணவும் எடுத்து கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அவர் திடீரென வீட்டின் முன் பக்கமாக மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
    ×