என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவதும் தயார் நிலையில் உள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.044-2723 7423 மற்றும் 044-2723 7690 செயல்பட்டு வருகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை மேற்குறிப்பிட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க.வில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுராந்தகம் நகராட்சி, உத்திரமேரூர், இடையன்குழி, வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் அடங்கி உள்ளன.

    இந்த பகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.முக., தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் தி.மு.க. மாவட்ட செயலாளரான க.சுந்தரை சந்தித்து ஏற்கனவே பட்டியல் கொடுத்து இருந்தனர்.

    இதில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்ய உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதேபோல் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 வார்டுகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் கூறுகையில், ‘பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் எந்தெந்த கட்சிக்கு எத்தனை வார்டு என்பது முடிவாகும். அதற்கு முன்பாக எதுவும் கூற இயலாது’ என்று தெரிவித்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் 81 சதவீதம் என்ற குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா மற்றும் அதைச் சார்ந்த ஒமைக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் 81 சதவீதம் என்ற குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.

    இதுவரை 1,97,789 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

    எனவே பயனாளிகளை நேரிடையாக தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 395 மாபெரும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் என மொத்தம் 57 வார்டுகள் உள்ளன.


    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியும், குன்றத்தூர், மாங்காடு ஆகிய 2 நகராட்சிகளும், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய 3 பேரூராட்சிகளும் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் என மொத்தம் 57 வார்டுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரம் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 42 ஆயிரம் பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 32 பேர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர்.

    வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் 2-வது பிரதான சாலையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்படுவதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

    இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    போலீசார் விசாரணையில், ரேஷன் கடை ஊழியர் கோமதி உதவியுடன் 2 டன் அரிசி மூட்டைகள் வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கோமதி, ராஜேந்திர பாண்டியன், பொன்சங்கர நாராயணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள சஞ்சீவியை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தேடி வருகின்றனர்.
    துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கப் பிரிவு விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பன்னாட்டு சரக்ககப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனா். இதையடுத்து சென்னைக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலம் சரக்கு பெட்டகங்களை கண்காணித்தனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அந்த பார்சலில் எந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணில் அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் புத்தம் புதிய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகள் இருப்பதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
    உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்ததாக பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி (வயது 58). கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ (51). நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் (47), இவர்கள் 3 பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 நகை கடன் வழங்கியுள்ளனர்.

    வங்கியில் தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்தார். அந்த புகாரானது காஞ்சிபுரத்தில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியிடம் விசாரணைக்கு வந்தது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்திருப்பது உண்மையென தெரியவந்தது. இதை தொடர்ந்து வங்கியின் செயலாளர் கலைச்செல்வி, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கலைச்செல்வி சென்னை புழல் சிறையிலும், விஜயகுமார் செங்கல்பட்டு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளரான ஜெயஸ்ரீ தலைமறைவானதை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோருக்கு காஞ்சிபுரம் போலீசார் அபராதம் விதித்தனர்.

    காஞ்சிபுரம்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    முகூர்த்த நாளான நேற்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்கள் எளிய முறையில் நடந்தன.

    ஏராளமான பொதுமக்கள் திருமண அழைப்பிதழ்களை காட்டியபடி வாகனங்களில் திருமண விழாவிற்கு சென்றனர். இதனால் வழக்கமான முழு ஊரடங்கு நாட்களை விட வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோருக்கு காஞ்சிபுரம் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியதாக 1,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு படி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 109 வாகன சோதனை சாவடி அமைத்து 1,746 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய 379 மோட்டார் சைக்கிள், 10 கார், 12 ஆட்டோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் சுற்றிய 89 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மின்கம்பத்தில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விக்கிரவாண்டி ஆவுடையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), ஜெயகுமார் (23), ஈஸ்வரன் (25) ஆகியோருடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கண்டிகை பகுதியில் தங்கியிருந்து வடக்குப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    நேற்று வேலை முடிந்து வடக்குப்பட்டு வழியாக கண்டிகை நோக்கி சரக்கு வேனில் 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். வேனை வெற்றி ஓட்டிச்சென்றார். வடக்குப்பட்டு சாலையில் வேன் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் பயங்கரமாக மோதி ஏரிக்கரை பகுதியில் வேன் கவிழ்ந்தது.

    இதில் இரண்டாக உடைந்து வேன் கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.24 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள தாமரைத் தாங்கல் பகுதியில் உள்ள குடோனில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 லாரிகள், 2 மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சசிகுமார், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பழனிவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    சென்னை தாம்பரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவருடைய உறவினர் தாம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த அருளரசன் (27).

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில், சென்னையில் இருந்து வேலூருக்கு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னயன்சத்திரம் அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், அருளரசன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்தரியில் அனுமதித்தனர். அங்கு சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அருளரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் ஜுடித் டிவினோம் வெம்பேசி (வயது 29) என்பவர் வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் 108 மாத்திரைகள் இருந்தன. அந்த மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் அவை, ஹெராயின் போதை பவுடரை மாத்திரைகளாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கிலோ 70 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதை பவுடர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உகாண்டா நாட்டு பெண் பயணியை கைது செய்தனர். மேலும் போதை பவுடர் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ×