என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் முதியவர் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடித்தவர் கைது
போரூர்:
சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (67) துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த மாதம் 29-ந் தேதி அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் நகையை அடமானம் வைத்து ரூ1லட்சத்து 28 ஆயிரம் பணத்துடன் வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் நடராஜனிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி திடீரென பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், ஏட்டு ராஜ்மோகன், அசோக் குமார், ஞானசேகர், கேசவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மர்ம கும்பலை பிடிக்க சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வங்கி முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவன் ஆந்திரா மாநிலம் ஒஜிகுப்பத்தை சேர்ந்த சரவணராஜ் (46) என்பதும் வில்லிவாக்கம் பகுதியில் தங்கி தனியாக வங்கிக்கு வந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களை நோட்ட மிட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. நடராஜனிடம் பணப்பையை பறித்து சென்றதையும் அவன் ஒப்புக்கொண்டான்.
இதையடுத்து போலீசார் சரவணராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணராஜ் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.