என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் நாளை (புதன்கிழமை) குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பாரதிய ஜனதா சார்பில் மாலை 4 மணிக்கு பேரணி நடக்கிறது.
    ஈரோடு:

    மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடியாக பாரதிய ஜனதா சார்பில் நாளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா சார்பில் பேரணி நடக்கிறது.

    ஈரோட்டிலும் நாளை (புதன்கிழமை) குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பாரதிய ஜனதா சார்பில் மாலை 4 மணிக்கு பேரணி நடக்கிறது.

    இந்த பேரணி ஈரோடு வ.உ.சி. பூங்கா (பஸ் நிலையம்) அருகே தொடங்கி சம்பத் நகர் கொங்கு கலையரங்கம் அருகே நிறைவுபெறுகிறது.

    இந்த பேரணியில் மத்திய மின்சாரம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மந்திரி ஆர்.கே.சிங், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் மாலதி சீனிவாசன், பொதுச்செயலாளர் கே.எஸ். நரேந்திரன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய இளைஞர் அணி துணை தலைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள், தலைவர்கள், அனைத்து அணியினர், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே இந்த பேரணியில் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட செயலாளர் கே.பி.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
    சத்தியமங்கலம் அருகே கரும்புக்காக லாரியை சிறை பிடித்த யானைகளை கண்ட டிரைவர் தப்பி ஓடினர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட காரப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்த இந்த லாரி காரப்பள்ளம் பகுதிக்கு வந்த போது திடீரென 2 யானைகள் ரோட்டுக்கு வந்தது. திடீரென லாரி முன் 2 யானைகள் வந்ததை கண்ட டிரைவர் வெலவெலத்து போனார்.

    ஒரு யானை லாரியின் முன்னே நிற்க இன்னொரு யானை லாரியில் கரும்பு உள்ளதா? என மோப்பம் பிடித்தது.

    கரும்பு லாரி என நினைத்து லாரியை 2 யானைகளும் மறித்ததை புரிந்து கொண்ட லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    சுமார் 30 நிமிடம் அந்த 2 யானைகளும் லாரியை சுற்றி.... சுற்றி வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 நிமிடத்துக்கு பிறகு 2 யானைகளும் காட்டுக்குள் புகுந்தது. இதன் பிறகே போக்குவரத்து சீரானது.

    இதை தொடர்ந்து லாரியை நிறுத்தி விட்டு சென்ற டிரைவரும் மீண்டும் வந்து லாரியை எடுத்து சென்றார்.

    ஏட்டிக்கு போட்டியாக பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை எகிறியது.
    ஈரோடு:

    வரலாறு காணாத வகையில் சின்ன வெங்காயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு பெரிய வெங்காயத்தின் விலை எகிறியது.

    பெரிய வெங்காயத்தின் விலை ஈரோட்டில் அதிகபட்சமாக 150 ரூபாயை எட்டியது.

    இந்த சமயத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120 ஆக இருந்தது. முதன் முறையாக சின்ன வெங்காயத்தை விட பெரிய வெங்காயத்தின் விலை ஏறியது.

    இப்போது ஏட்டிக்கு போட்டியாக பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை எகிறியது.

    பெரிய வெங்காயம் 1½ கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

    எப்படியே வெங்காயத்தின் விலை இன்னும் குறைந்த பாடில்லை.

    மேலும் கத்தரிக்காய், பீட்ரூட், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் அதிகமாகவே உள்ளது.

    மேலும் முருங்கைக்காயை கண்ணில் கூட பார்க்க முடியவில்லை. ஒரு முருங்கைக்காய் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

    அந்தியூரில் 2 சேவல்களை மோத விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ஈசப்பாறை லைன் மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஜெயிக்குது... தோக்குது என்ற சத்தம் கேட்டது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 4 பேர் சூழ்ந்து 2 சேவல்களை மோதவிட்டு சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

    உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். குமார் (44), சந்திரமோகன் (38), பழனிசாமி (55), கோபால்சாமி (31) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவர்களிடம் இருந்து சேவல்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு அருகே நண்பரை பார்க்க சென்ற வாலிபர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் இவரது மகன் சுரேந்தர் (வயது 21) கடந்த 26-ந் தேதி அன்று நண்பரைப் பார்த்து வருவதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவே இல்லை.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி சுரேந்திர்க்கு பிறந்தநாள் என்பதால் சுரேந்திரின் தந்தை சண்முகம் போனில் வாழ்த்து கூறியுள்ளார். அப்போது சுரேந்திரன் இரண்டு மூன்று நாட்களில் வீட்டுக்கு வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    இதன்பிறகு சண்முகம் தனது மகன் சுதந்திர போனில் தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவருகிறது. இதை தொடர்ந்து சண்முகம் கருங்கல்பாளையம் போலீசில் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேந்தர் காணாமல் போன அன்று நீலக்கலரில் டி-‌ஷர்ட்டும் ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ஈரோட்டில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் என்கிற சுஸ்மிதா (வயது 22) திருநங்கை ஆவார்.

    தனது தாயார் வீட்டில் வசித்து வந்த திருநங்கை சுஸ்மிதாவுக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறியது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர்.

    இந்த நிலையில் தன்னை திருமணம் செய்யும்படி திருநங்கை சுஸ்மிதா காதலரிடம் கேட்டுள்ளார். இதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த வாலிபர் மீது மிகுந்த நம்பிக்கையுடன் காதலித்து வந்த திருநங்கை சுஸ்மிதா வேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் வீடடில் யாரும் இல்லாததால் திருநங்கை தனது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசை கண்டதும் 6 பைக்குகளை போட்டு விட்டு தப்பி ஓடினர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஈச பாறை வனப்பகுதியை ஒட்டியுள்ள லைன் மாரியம்மன் கோயில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபு வருண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சிலர் சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அந்த இடத்தில் 2 சேவல் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த 6 இரு வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதனையடுத்து போலீசார் 2 சேவல்கள், 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி தோல்வி அடைந்துள்ளார்.

    கொடுமுடி:

    கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கொளாநல்லி பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்தை சேர்ந்தவர் ராமனாதன் இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பவானி தொகுதி முன்னாள் எம்.எல் .ஏ,வாக இருந்தவர்.

    இவர் தற்போது பா.ஜனதாவில் உள்ளார். இவரின் மனைவி சுமதி இவர் கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு 447 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட அருணாதேவி என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு 404 வாக்குகள் பெற்றார்.

    அதிமுகவை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி பேபி உருளை சின்னத்தில் போட்டியிட்டு 601 வாக்குகள் பெற்று 154 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி ஈரோடு கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இருவரும் இவரது நண்பர்கள் 3 பேரும் கொடுமுடி அருகே உள்ள காரணம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணை கரையோரமாக குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது மாணவர் கார்த்திகேயன் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அவரது உறவினர்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். கொடுமுடி தீயணைப்பு வீரர்கள் வந்து மாணவரின் உடலை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த பரிதாப சம்பம் குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் வாக்காளர் சேர்ப்பு முகாமில் 6,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது . இதில், 600 மனுக்கள், நீக்கம், விலாசம் திருத்தம், எழுத்துக்களில் திருத்தம், தொகுதி மாற்றம் போன்றவைகளுக்காக வந்துள்ளன.
    ஈரோடு:

    மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 23ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த டிச., 16 வரை பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நிறைவு செய்யப்பட்டு, கடந்த, 23ஆம் தேதி தனியாக வரைவு வாக்காளர் பட்டியலின் கூடுதல் பகுதி வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதிகளில் 2,213 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கிய, 912 மையங்களில் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் அனைத்து முகாம்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், இதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றனர்.

    பெயர் சேர்க்க படிவம் எண்.6, பெயர் நீக்கம் செய்ய படிவம் எண்.7, முகவரி, பெயர், புகைப்பட திருத்தம் செய்ய படிவம் எண்:8, பிற ஓட்டுச்சாவடிகளுக்கு முகவரியை மாற்றம் செய்ய படிவம்:8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கினார்கள் .

    மேலும் இணைய தளத்திலும், மொபைல் ஆப் மூலமும், வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொண்டனர்.

    இதுபற்றி, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. ஊரக பகுதியில் விடுபட்டவர்கள், இடம் மாற்றமாக இருந்தவர்கள் என ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், விரைவில் நகரப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்ற அடிப்படையிலும், அதிகபட்சமாக விண்ணப்பித்துள்ளனர்.

    இதன்படி, மொத்தம், 6,200 விண்ணப்பங்கள் வரை மாவட்ட அளவில் பெறப்பட்டுள்ளது . இதில், 600 மனுக்கள், நீக்கம், விலாசம் திருத்தம், எழுத்துக்களில் திருத்தம், தொகுதி மாற்றம் போன்றவைகளுக்காக வந்துள்ளன.

    மீதமுள்ள மனுக்கள், புதியவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.


    கவுந்தப்பாடி அருகே தறிப்பட்டறையில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது பி.மேட்டுப்பாளையம். இந்த பகுதியில் உள்ள கள்ளுக்கடை மேட்டில் பவர்லூம் தறிப்பட்டறை இயங்கி வருகிறது.

    ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த தறிப்பட்டறையில் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களும் இந்த தறிப்பட்டறையில் 4 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    சுரேந்திரகுமார் வர்மா (வயது 28), நவீன்குமார் (24) மற்றும் சோராப் ரஞ்சன் (28), ரவீந்திரகுமார் (20) என்ற 4 பீகார் மாநில வாலிபர்கள் அந்த தறிப்பட்டறையில் கடந்த 1½ ஆண்டாக பணிபுரிந்து வந்தனர்.

    இதில் சுரேந்திரகுமாருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் பீகாரில் உள்ளனர். சுரேந்திரகுமார் கவுந்தப்பாடி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இதேபோல் நவீன் குமாருக்கும் திருமணமாகி விட்டது. மனைவியுடன் பி.மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தறிப்பட்டறை உள்ளே சுரேந்திரகுமாரும், நவீன்குமாரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று காலை வழக்கம்போல மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வந்தபோது அங்கு பீகார் மாநில தொழிலாளர்களான சுரேந்திரகுமார் வர்மாவும், நவீன்குமாரும் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    முன்விரோதம் காரணமாக இவர்களை யாரோ தடி மற்றும் இரும்பு கம்பியால் அடித்து கொன்று இருக்க கூடும என கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோரும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 தொழிலாளர்களை கொலை செய்தது யார்? என்ன காரணத்துக்காக இந்த படுகொலை நடந்தது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கை ரேகை நிபுணர் வந்து ரேகைகளை பதிவு செய்தார். ஈரோட்டிலிருந்து மைதிலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது. ஆனால் யாரையும் நாய் கவ்விப் பிடிக்கவில்லை.

    இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக அவர்களுடன் பணிபுரிந்து வரும் பீகார் மாநில வாலிபர்களான சோராப் ரஞ்சன், ரவீந்திரகுமார் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த இரட்டை கொலை சம்பவம் கவுந்தப்பாடி மற்றும் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வந்து, இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொலவபாளையம் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு தலைமை தாங்கினார்.

    நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

    ஈரோடு மாவட்டத்தில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் துறைக்கு துறை முன்னேற்றத்தை ஏற்படுத்தி தமிழக முதல்வர் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ ஒருங்கிணைந்து பணிகளை ஆற்றி வருகிறார்.

    ஏரிகள், குளங்கள், தூர்வாரும் திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    கோப்புகள் தேங்காமல் நாள்தோறும் விரைந்து செல்கின்ற அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீட் தேர்வு

    நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு நிரப்பப்படாமல் உள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பங்கினை அரசு அளித்து வருகிறது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வந்து பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என கூறினார்.

    ×