என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரிசல் துறை என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரி டிரைவரிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அவரிடம் விசாரித்த போது தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு கொப்பரை தேங்காய் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
மேலும் பணத்துக்கான ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் பணத்தை ஒப்படைத்தனர். அவர் கருவூலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று லாரி டிரைவரிடம் தெரிவித்தார்.
சத்தியமங்கலம்-கோவை மெயின் ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது மினி ஆட்டோவை ஓட்டி வந்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் ரு. 81 ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் விசாரித்த போது தான் ஆடு வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. காரை திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரபு (45) என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் விசாரித்த போது பேக்கரி கடை நடத்தி வந்ததும் பேக்கரி கடையில் வசூலான பணத்தை எடுத்து வந்தபோது அதிகாரிகள் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. இவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் தொப்பம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதகாரிகள் நேற்று இரவு வாகன சோதனை நடத்திகொண்டு இருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது காரில் வந்த நவீன்சந்திரா என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 29ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்துக்கு ஆவணங்கள் கேட்டனர்.
ஆனால் அவர்எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்தார். மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.
ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டது. இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை பற்றியும், தான் கட்சிக்காக உழைத்தது பற்றியும் எடுத்து கூறினார். மேலும் கட்சி தான் முக்கியம் என்றார். மேலும் என் செயல்பாட்டில் என்ன குறைகளை கண்டது கட்சி தலைமை. ஏன் எனக்கு 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றார். எனக்கு சீட் தரவில்லை என்றாலும் வருத்தம் இல்லை என்றார். அப்போது தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் ஆதரவாளர்கள் கண் கலங்கினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளில் பெருந்துறை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
ஆதரவாளர்களின் வலியுறுத்தல் காரணமாகவும் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து உள்ளதாலும் பெருந்துறை தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதால் சுயேட்சையாக போட்டியிட போவதாக தோப்பு வெங்கடாச்சலம் அறிவித்தார்.
இதையடுத்து தோப்பு வெங்கடாச்சலம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதற்காக தொகுதி முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட்டு தங்களது பலத்தை தலைமைக்கு காட்ட வேண்டும் என்று ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கொங்கு நகர், கோம்புப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்பட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் நன்கு விளைந்த வாழைத்தார்கள் கூலிஆட்கள் மூலம் வெட்டப்பட்டு உள்ளூர் பகுதியில் உள்ள கடைகளுக்கும், அருகில் பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும், லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ-350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. வாழைத்தார் விலை சற்று உயர்ந்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக பவானி செங்காடு 2-வது வீதியை சேர்ந்த செந்தில் (வயது 46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா விற்ற வழக்கில் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் குமரன் வீதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (44) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர். கைதான செந்தில், சத்தியமூர்த்தி ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின்பேரில் செந்தில், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்கடர் உத்தரவிட்டார். அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
ஈரோடு முனிசிபல்காலனி பாரதி தியேட்டர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கோபால் (வயது 27). இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரோகித் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் கார்த்திகா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கோபால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி வேட்பாளர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் இருந்து இன்று மதியம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியிலும், மொடக்குறிச்சி தொகுதியிலும் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர், ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி 2-ம் நம்பர் பஸ் நிறுத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து, நாளை மதியம் ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
முன்னதாக அவர் இன்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் சித்தோடு கங்காபுறத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு வந்து இறங்கி அதன் பிறகு பிரசாரம் தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹெலிகாப்டர் வந்து இறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கார் மூலமாக கோவையில் இருந்து வருகிறார்.



















