search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoppu venkatachalam"

    • கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு கொடுக்காததால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கினார்.
    • தி.மு.க.விலும் எதிர்பார்த்தபடி பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒதுங்கியே இருந்தார்.

    கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எல்லோருக்கும் அறிமுகமானவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியமானவர். தற்போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அந்த வகையில் ஒரு காலத்தில் பவர்புல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம், எடப்பாடி பழனிசாமியின் உறுப்பினரான கே.சி.கருப்பண்ணனுக்கு முக்கியத்துவம் வந்ததும் டம்மியானார்.

    இந்த நிலையில்தான் கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு கொடுக்காததால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கினார். ஆனாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தி.மு.க. பக்கம் சென்றார். ஆனால் தி.மு.க.விலும் எதிர்பார்த்தபடி பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒதுங்கியே இருந்தவர் இப்போது மீண்டும் எடப்பாடி முன்பு தொப்பென்று விழுந்துள்ளாராம். சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதாக கொங்கு மண்டலத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.

    • கடந்த சில நாட்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
    • தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்.

    பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இவருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்தார். மேலும் பெருந்துறை பகுதியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

    தி.மு.க.வில் இணைந்தும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். மேலும் அவர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தற்போது வரை நான் தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக வேண்டும் என்றே சிலர் நான் பா.ஜனதாவில் இணைய போகிறேன் என்று தகவல் பரப்பி வருகின்றனர். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது தொகுதிக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கேட்டுப்பெற்றேன்.

    இதில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் தி.மு.க. அரசின் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. மேலும் மாவட்ட அமைச்சரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தோப்பு வெங்கடாச்சலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாளை நான் பா.ஜனதாவில் இணைய போவதாக செய்தி வந்துள்ளதாக சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு மாறானது. நான் தற்போது வரை தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ஆட்சி மாறி மாற்றுக் கட்சியினர் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது கட்சி பதவியை உதறினார்.

    அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

    இதனால் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று கூறினார்.

    இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

    கட்சி பதவியை விட்டு விலகிய அவர் அடுத்து என்ன நடவடிக்கையில் ஈடுபடலாம்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் உள்பட கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    எந்த காரணம் கொண்டும் நான் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே சமயம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

    கருத்து கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன்.

    மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே இருப்பேன்.

    எனது தொகுதி மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சாய கழிவு நீர் பிரச்சனை நிலவி வருகிறது. அதுவும் மழை பொய்த்த காலத்தில் இந்த சாயக்கழிவு குடிநீரில் கலந்து வருகிறது.

    இதனால் குடிநீர் குடிக்க உகந்தது அல்ல என்று அப்போதய தமிழக முதல்வர் அம்மாவிடம் கூறி பெருந்துறை பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். அதுவும் கொடிவேரி அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என கேட்டேன். அம்மாவை 2 முறை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். அவரும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நிதியை அறிவித்தார்.


    இந்த நிலையில் அம்மா மறைந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் அண்ணன் பழனிசாமியிடம் வைத்தேன். சிறிது காலம் தாமதம் ஏற்பட்டாலும் குடிநீர் திட்டத்துக்கு அவர் ரூ.240 கோடி ஒதுக்கினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நான் அவருக்கு துணையாக நின்றேன். இப்போதும் எனது நிலை அதே தான்.

    அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேர்தலில் எதிர்க்கட்சியினரை குறி வைத்துதான் நமது பிரசாரம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம். தகுந்த ஆதாரத்துடன் இதை கொடுத்தும் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் (அமைச்சர் கருப்பணன்) தலையீட்டின் பேரில் வெளியே விட்டு விட்டார்கள்.

    இதனால் நான் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

    ஒரு முக்கிய நபர் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பணமும் கொடுத்துள்ளார். இதையும் நான் கட்சி தலைமையில் கூறி உள்ளேன்.

    அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு விசாரிப்போம் என்று கூறி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்சி பதவியை துறந்தாலும் தொண்டனாக இருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு உழைப்பேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.

    இவருக்கும் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெடித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சருக்கு எதிராக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார். “கட்சிக்காக பணி ஆற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் அமைச்சர் வேலை செய்தார் என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று புகார்களை அள்ளி வீசினார்.

    அமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கியதால் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்த கட்சி பதவியான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.



    இந்த விலகல் (ராஜினாமா) கடிதத்தை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட் டுக்கே சென்று வழங்கினார். அப்போது அவரிடம் முதல்வர் “எதற்கு இந்த அவசரம் சற்று பொறுமை காக்கவும்” என்று கூறியதாக தெரிகிறது.

    எனினும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. “எனது தனிப்பட்ட முடிவு தான் இது. தொடர்ந்து கட்சி பணி செய்வேன்” என்று கூறினார்.

    முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, “எனது சொந்த முடிவு தான் இது. பதவி விலகலால் எந்த மன உளைச்சலும் இல்லை. ரொம்ப சந்தோ‌ஷமும் இல்லை” என்று கூறினார்.

    கட்சி பதவியை விட்டு விலகல் குறித்து இன்று காலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அ.தி.மு.க. தொண்டன். அம்மா இருந்த போது அமைச்சராக இருந்த நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்து மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தவன் நான். எனது பணி தொடரும். தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன். ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். இதில் எந்த மாறுபாடும் இல்லை” என்று கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பையொட்டி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கட்சி பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் விலகினார்.
    சேலம்:

    அதிமுக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்  விலகினார். இதனைத்தொடர்ந்து சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அமைச்சர் கருப்பணன் தேர்தலின் போது கட்சி பணியாற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டதாக தோப்பு வெங்கடாச்சலம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

    அமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ. கடுமையாக சாடி பேட்டி அளித்தார்.

    அவர் கூறும்போது, “கட்சிக்கு விரோதமாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் கட்சி பணியாற்றாமல் மாறாக தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டார்” என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை அள்ளி வீசினார்.


    இதற்கு அமைச்சர் கருப்பணன் கூறும்போது, “யாரும் எதுவும் சொல்லிவிட்டு போகட்டும் என் விசுவாசம் நேர்மை பற்றி கட்சி தலைமைக்கு தெரியும்” என்று கூறினார்.

    இதற்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது விஸ்வாசமும் நேர்மையும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். நான் கேட்டது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் வேலை பார்த்தீர்களா... இல்லையா? இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா? உங்களது விஸ்வாசத்தை, நடத்தையில் காட்ட வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி அமைத்த 3 வருட காலத்தில் எத்தனை அ.தி.மு.க. தொண்டர்களின் பிள்ளைகளுக்கு உங்கள் கல்லூரியில் இலவசமாக பயில நீங்கள் அனுமதி அளித்து உள்ளீர்கள்? பட்டியல்போட முடியுமா? அம்மாவின் விசுவாசி என்று கூறும் நீங்கள் தகுதி உள்ள தொண்டர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் பெற்று கொடுத்துள்ளீர்களா? ஒரு தொண்டனையாவது வாழ வைத்ததாக கூறமுடியுமா?

    “மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார் ஆனால் தன் மக்கள் நலமே ஒன்று என்று இருந்து விடுவார்” புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு உங்களுக்கு பொருந்தும்.

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
    சென்னையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் அரசுக்கு எதிராக 8 எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK #ThoppuVenkatachalam #EdappadiPalaniswami
    ஈரோடு:

    தமிழக முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் சுற்றுப்புற சூழல்துறை அமைச்சராக இருந்தார்.

    இப்போது ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள கே.சி. கருப்பணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார்.

    முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலத்தில் கட்சி பிளவுபடாமல் இருப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கோபி எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) கொடுக்கப்பட்டது.

    செங்கோட்டையனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்ததில் இருந்து கொங்கு மண்டலத்தில் மற்றொரு முக்கிய நபராக விளங்கும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதனால் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தினகரன் அணி பக்கம் தாவினார். இவரும் முன்னாள் அமைச்சர் கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜியும் இணைந்து அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டபோதுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வை அழைத்து உங்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அல்லது கட்சியில் பெரிய பதவி தருகிறோம் என்று கூறி சமாதானப்படுத்தினர்.

    இந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்ட தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி அணி பக்கம் தாவினார். அவருக்கு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    இருந்த போதிலும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 தடவை நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டபோது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

    அதே சமயம் ஈரோடு மாவட்ட எல்லையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போதெல்லாம் அவரை வரவேற்க தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தவறவில்லை.

    ஈரோடு மாவட்ட அமைச்சர்கள் (செங்கோட்டையன், கருப்பணன்) உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை மதிப்பதில்லை. அவர்கள் பரிந்துரையை ஏற்பது இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.


    சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களை அழைத்து கூட்டம் நடத்தும் போதெல்லாம் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வும் தவறாமல் கலந்து கொள்வார்.

    ஆனால் தனக்கென்று ஒரு வட்டாரத்தை வைத்துக் கொண்டு சில எம்.எல்ஏ.க்களுடன் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ரகசிய கூட்டமும் நடத்தி வந்தார்.

    இப்படி அடிக்கடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று கட்சியில் புதிய பதவியும் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    எனினும் அவர் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. சென்னையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் அரசுக்கு எதிராக 8 எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இவர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவகாரம் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் உள்ள நிலையில் இப்போது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தலைமையில் 8 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    இது குறித்தும் 8 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நீங்கள் தனியாக நடத்தி உள்ளீர்களே? என்றும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சிரித்தார். எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டம் நடத்தியதை அவர் மறுக்காமல் மழுப்பினார்.

    அவர் கூறும்போது, ‘‘அமைச்சர் பதவி வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு அது முக்கியமும் அல்ல. அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி என பல முக்கிய பதவிகளை ஏற்கனவே மறைந்த அம்மா எனக்கு கொடுத்து விட்டார்.

    எம்.எல்.ஏ.க்களை மாவட்ட அமைச்சர்கள் மதிக்க வேண்டும். அவர்களின் பரிந்துரையை ஏற்க வேண்டும். அனைத்து தொகுதிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்பது தான் என் கருத்து’’ என்று கூறி முடித்துக்கொண்டார்.  #ADMK #ThoppuVenkatachalam #EdappadiPalaniswami
    எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமையாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் பொறாமை இல்லை வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அறிவிக்கப்பட்டதோடு மருத்துவமனையை எங்கு அமைப்பது? என இடம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. மத்திய அரசு குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் பல இடங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், தஞ்சை ஆகிய இடங்கள் முன்னணி இடத்தில் இருந்தது.

    பெருந்துறையில் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அந்த இடம்தான் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    மத்திய குழுவினரும் போதுமான இடவசதி உள்ளது என்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறி விட்டு சென்றனர்.

    இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் கிட்டத்தட்ட அமைந்துவிடும் என ஈரோடு மாவட்ட அரசியல் தலைவர்கள் உறுதியாக நம்பி இருந்தனர்.

    தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். சட்டசபையிலும் இது பற்றி பேசினார்.

    கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரனும் எய்ம்ஸ் மருத்துவமனை கொங்கு மண்டலத்தில் அமைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதே போல பல கட்சியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் அது மதுரைக்கு சென்றது கொங்கு மண்டல மக்களுக்கு ஏமாற்றம்தான்.


    எப்படியோ எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வந்தால் போதும் என தங்களுக்குள்ளே ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததற்கு காரணம் என்ன? என அலசி பார்த்தபோது சில தகவல்கள் கிடைத்தது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதன் அருகேயோ, நடுவிலோ ரோடு இருக்கக்கூடாது. ஆனால் பெருந்துறையில் இடம் தேர்வு செய்த இடத்தின் மத்தியில் ரோடு இருந்தது.

    இதனால் காற்று மாசு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி காசு மாசு ஏற்பட்டால் அது மருத்துவமனைக்கு உகந்ததாக இருக்காது. எனவே தான் கடைசி நேரத்தில் பெருந்துறை நிராகரிக்கப்பட்டு மதுரைக்கு சென்றதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாதது கொங்கு மண்டல மக்களுக்கு வருத்தம் கலந்த ஏமாற்றமே என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.

    இது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-

    பெருந்துறை தோப்பு பகுதியில் அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பக்கம் அமைய உள்ளதால் எங்களுக்கு பொறாமை இல்லை. சிறிய வருத்தம் கலந்த ஏமாற்றம் தான்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.

    அந்த வகையில் எனது தொகுதியில் மருத்துவமனை அமைந்திருந்தால் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய கொங்கு மண்டல மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஆனால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை பக்கம் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பயன் பெறுவார்கள். எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சி அடைவது தமிழக மக்கள் தானே!

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார். #AIIMS #AIIMSinMadurai
    ×