என் மலர்tooltip icon

    ஈரோடு

    • விவசாயிகளுக்கு தேங்காய் விலை கட்டுப்படியாகவில்லை.
    • தொகுப்பு வீடுகளில் அரசு ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.

    கோபி:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் திஷா கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் தலைமையில் நடந்த திஷா கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

    கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினேன். விவசாயிகளுக்கு தேங்காய் விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலமாக கொள்முதல் செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்று வலியுறுத்தி பேசினேன்.

    மேலும் கோபியில் புற வழிச்சாலை அமைப்பதற்கும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் தொல்லை அனுபவித்து வருகின்றனர். காட்டுப்பன்றியை சுடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், தொகுப்பு வீடுகளில் அரசு ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்தி தர வேண்டும்.

    இன்னும் பல கோரிக்கைகள் வலியுறுத்தி கூட்டத்தில் பேசி வந்தேன். எனக்கு அழைப்பு வந்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மக்களுக்காக பணி செய்வதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார்.
    • போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார்.

    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.

    இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதனால் போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.

    அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

    இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.

    • மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
    • கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளன.

    ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செயல்படுத்த தவறினால், நாய்கள் அனைத்தையும் கடித்து பழகிவிடும்.

    தெரு நாய் கடித்து ஆடு உள்ளிட்டவை இறந்தால், அடுத்த நாளே இழப்பீடு வழங்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இப்பிரச்சனையில் போதிய முயற்சி இல்லை. மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.

    ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். இது, இந்த ஆட்சியின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின் முதல்வர் இன்னும் வேகமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.

    அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி, போலியான வெற்றி என இ.பி.எஸ்., கூறுவதை ஏற்க முடியாது. கடந்த இடைத் தேர்தலில் பெற்ற ஓட்டை விட தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதை சிந்திக்க வேண்டும்.

    கள்ளச் சாராய சாவு, அதற்கான கொலைகள், மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை போன்றவை தொடர்ச்சியாக நடப்பவை, இதில் அரசு நடவடிக்கை எடுத்தாலும், சம்பவங்கள் தொடர்வதை பார்க்க முடிகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை தேவை.

    அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் செயல்பாட்டை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அவர் 'திஷா' கூட்டத்தில் பங்கேற்றதில் எந்த தவறுமில்லை. ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்கேற்பது சரிதான்.

    அதேநேரம், அவரது கட்சி விசுவாசத்தை யாருடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்பது போன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது, உட்கட்சி பிரச்சனை.

    இதை சரி செய்தால், அவர்கள் ஒன்றிணைவார்கள். 'சிஓட்டர்ஸ்' கருத்து கணிப்பில் தி.மு.க., 5 சதவீதமும், பா.ஜ.க, 3 சதவீதமும் கூடுதல் ஓட்டுக்களை பெற்றுள்ளதை, தனிப்பட்டதாக பார்க்கக்கூடாது. அது தி.மு.க.,வுக்கானது மட்டுமல்ல. அக்கூட்டணிக்கானது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு ஒய் பாதுகாப்பு ஏன் என்று யாருக்கும், புரியவில்லை. அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. மாநில அரசோடும் கலந்து பேசவில்லை, இதனால் பாதுகாப்புக்கான என்ன அரசியல் இருக்கிறது என்று தேர்தல் நெருங்க நெருங்க தான் காரணம் முழுமையாக தெரியவரும்.

    இந்திய கூட்டணியில் பிளவு என்று சொல்வதற்கு எல்லாம் முதல்வர் தெளிவாக விளக்கம் சொல்லிவிட்டார். தோழமை கட்சிகள் போராட்டம் திட்டமிட்டு செய்வதில்லை, ஜனநாயாக ரீதியாக தான் செய்கிறார்கள் என்று முதல்வர் சொல்லி விட்டார்.

    தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கள் இயக்கம் நல்லசாமி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்.

    இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். பொருளாதார ரீதியாக மேம்படுவர். இதுபற்றி, 3 முறை சட்டசபையிலும், முதல்வரிடமும் பேசி, கள்ளுக்கான தடையை நீக்க கோரி உள்ளேன். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என நானும் ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெருந்துறை போலீசார் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கட்டிட வேலை, டெய்லர் வேலை, கூலி வேலை, செங்கல் சூளை உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுடன் வங்காளதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் குடியேறி அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் குடியேறி உள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை ஈரோடு, திருப்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    போலீசார் விசாரணையில் இவர்கள் உரிய அனுமதி, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேட்டுக்கடை போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பைஜித் (25), மாமொன் (43), மோனீர் (50), சுமொன் (25), ரீதாய் (23), அனுசூல் மெஸ்தர் (37), அசாத் (50) தீப்போன் (25), ஒசேன் (27), ரோபி (26) இவர்களுடன் மேலும் 3 ஆண்களும், 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் வாடகைக்கு குடியிருந்து கட்டில், சோபா தயாரிக்கும் கம்பெனியில் டெய்லர் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிலர் கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    பெருந்துறை, பணிக்கம்பாளையம், வாய்க்கால் மேடு போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவர் ஆணையை ஏற்று இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

    எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, 3 நாட்கள் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க என்று எழுதினால்தான் நடமாட முடியும் என்ற நிலை நிலவியது.

    எம்.ஜி.ஆரின் கட்டளையை ஏற்று நாங்கள் 14 பேர் இணைந்து கோவையில் பொதுக்குழுவை, அவர் நினைத்தபடி வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அதற்கான செலவுத்தொகையை அவர் கொடுத்தபோது, நீங்கள் எங்கள் தெய்வம், உயிர்மூச்சு என்று சொல்லி அதனை வாங்க மறுத்து விட்டோம்.

    ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்ப தற்கு எம்.ஜி.ஆர். எடுத்துக் காட்டாக விளங்கினார். மக்களைப் பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தினார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு நீர் வழங்க திட்டம் தீட்ட வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 1980-ல் ஆட்சி கலைப்பின்போது, நடந்த மக்களவைத் தேர்தலில் கோபி மற்றும் சிவகாசியில் மட்டும் அ.தி.மு.க. வென்றது. அதன் பின் வந்த சட்டசபை தேர்தலில், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டு மக்களை எம்.ஜி.ஆர். சந்தித்தார்.

    அதிக தொகுதிகளில் மக்கள் வெற்றியைக் கொடுத்தனர். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டசபைத் தேர்தல் முடிவு என்று அவர் வேறுபடுத்திக் காட்டினார். 1984-ல் அமெரிக்காவில் இருந்தவாறு தேர்தலில் வென்று முதல்வராக தமிழகம் திரும்பினார். அதன்பின் இந்த இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள். சீனா போரின்போது நிதியை வாரி வழங்கினர். அந்த இரு தெய்வங்களின் தேசப்பற்று குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்களுக்காகத்தான், அடையாளம் தெரியாத எங்களுக்கும் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள்.

    இன்றும் அந்த வெற்றி நிலைத்து நிற்கிறது. எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னாலே வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர். நான் எனது 25-வது வயதில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் பொழுது நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது.

    ஆனால் எம்.ஜி.ஆர். என்ற ஒரு பெயரைச் சொல்லி வெற்றி பெற செய்தீர்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கப்பலாக இருந்து கட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜெயலலிதா. அவர் மதுரையில் நடத்த பொதுக்கூட்டத்தில் செங்கோலை ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு எனக்கு பின் கட்சியை நீ தான் வழி நடத்த வேண்டும் என கூறினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரண்டு பேருமே இரு பெரும் தெய்வங்கள். அந்த தெய்வங்கள் இல்லை என்றால் நாங்கள் இந்த மேடையில் இருக்க முடியாது. நீங்களும் எங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டீர்கள். தெய்வங்கள் ஆன பின்னும் கட்டளை இடுகின்றனர்.

    நீங்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கின்றீர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டனாக இருந்து பாடுபட்டு அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க அயராது உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது.
    • ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் நேற்று இரவு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள்விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறும் போது, அந்தியூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது சில துரோகிகளால் நாம் வெற்றியை இழந்தோம் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பகுதியில் கால்நடை மருத்துவமனை, நாய்கள் பராமரிப்பு விடுதி மற்றும் இனப்பெருக்க தடுப்பு மையம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அந்தியூர் சட்டசபை தொகுதியில் சேவல் இரட்டை இலை சின்னத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது. சில பேர் செய்த துரோகத்தால் நாம் தோல்வி அடைந்தோம். அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். துரோகம் என்ற வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.

    அப்போது பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிட வில்லையே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,

    நேற்று முன்தினம் கோபி அருகே நடந்த பொதுக்கூட்டத்திலும், நேற்று இரவு அந்தியூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்திலும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும் என்று அழுத்தமாக கூறினேன் என்றார். அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகை வசூல்.
    • அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வசூலிப்பதாக புகார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பைக் மற்றும் கார்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்பவர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டனம் வசூலிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    கோவிலுக்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக 10 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும் வசூலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஏலம் எடுத்துள்ளவர்கள் பைக்களுக்கு வழங்க வேண்டிய டோக்கனில் உள்ள கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகையை எவ்வித அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வரும் பக்தர்களிடம் வசூல் செய்வதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூடுதல் கட்டண வசூலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் மீது மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
    • பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான அந்த பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூரில் இருந்து பெருந்துறை சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து பணியாளர்கள் சிமெண்ட் லோடு இறக்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினர்.

    பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

    இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

    எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.

    எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.

    இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.
    • எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

    விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது:-

    அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள்.

    அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை.

    அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

    எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.

    எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

    எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

    அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்.

    அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான்.
    • நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

    யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார். பின்னர் அ.தி.மு.க நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

    கோபி:

    அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அக்கட்சி யில் பல்வேறு பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும்.

    தற்போது கே.ஏ.செங் கோட்டையன் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய லாளராகவும் இருந்து வருகிறார்.

    சமீப காலமாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வந்த நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 9-ந் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது கடும் சர்ச்சையானது.

    இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக கூறப்பட்டது.

    இதற்கு விளக்கம் அளித்து கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள், பேனர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.

    இந்த திட்டத்திற்கு முதல் முதலாக நிதியை ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். இதனால் தான் அந்த பாராட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை. புறக்கணிக்கவில்லை என்று சொல்வதைவிட எனது உணர்வுகளை வெளிப்படுத்தினேன் என்றார்.

    இந்நிலையில் நேற்று இரவு கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டில் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது வீட்டில் நுழைவாயில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இது குறித்து விசாரித்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு செங்கோட்டையன் வீட்டுக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு கே.ஏ.செங்கோட்டையன் திடீரென கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு அவர் அங்கேயே தங்கி விட்டார்.

    இதுகுறித்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறும்போது, நேற்று இரவு செங்கோட்டையன் கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். கோவையில் அவரது மகன் குடும்பத்துடன் வசித்து வருவதால் அவர் வீட்டில் தங்கி இருக்கலாம் என்றனர்.

    மேலும் இன்று மாலை கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அவர் நிச்சயமாக பங்கேற்பார் என்றனர்.

    இதனால் அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட் டையன் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொது கூட்டத்தில் பங்கேற்பாரா? என உறுதியான தகவல் தெரிய வில்லை. அவ்வாறு அவர் பங்கேற்றால் என்ன பேசப் போகிறார்? என கட்சியினர் இடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியுள்ளது.

    இன்று 2-வது நாளாக செங்கோட்டையன் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செங்கோட்டையன் வீட்டுக்கு வருபவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக அவர் வீட்டுக்கு செல்கிறீர்கள்? போன்ற விவரங்களை சேகரித்து அதன் பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டி பாளையம், அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன் குவிந்தனர்.

    முதலில் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

    அதன் பின்னர் தற்போது வீட்டின் கேட் திறக்கப்பட்டு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையன் இன்று மதியம் வீட்டுக்கு வருவதாக வந்த தகவலை அடுத்து ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு முன்பு திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×