என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சிதம்பரம் அருகே உள்ள இடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் கார்த்திக் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவருக்கும் காட்டுமன்னார்கோவில் தாலுகா, ரெட்டியூர் கீழதெருவை சேர்ந்த முருகன் மகள் சுவேதா (20) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது. சுவேதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, வாழப் பிடிக்காமல் சுவேதா வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து, கடந்த 5-ந்தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுவேதாவின் தந்தை முருகன் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில் சுவேதாவுக்கு திருமணமாகி 4 மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என சிதம்பரம் சப் - கலெக்டர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான மூன்று மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

    கடலூர்:

    தே.மு.திக. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 3 அணி அமைய வாய்ப்பு உள்ளதா ? என விஜய்பிரபாகரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு விஜய்பிரபாகர், தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் தே.மு.தி.க. பலமுறை தனித்து போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்தித்து உள்ளது.

    ஆகையால் பொறுத்திருந்து பாருங்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை நாங்கள் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தான் உள்ளோம். மேலும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு தேர்தல் நிலை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெளிவாக அறிவிப்பார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த எந்த அணி கூட்டணி அமைக்க போகிறார்கள், யார் யார் எத்தனை சீட்டு ஜெயிக்க போகிறார்கள் எல்லாம் ஒரு புதிராகத்தான் உள்ளது. ஏனென்றால் தற்போது நடக்க உள்ள தேர்தல் எல்லோருக்கும் முதல் தேர்தலாகும்.

    ஏனென்றால் கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின், ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். இதனால் எல்லோருக்கும் இந்த தேர்தல் புது தேர்தல் ஆகும்.இதனால் நிச்சயமாக இந்த தேர்தல் மாற்றத்தை மக்களுக்கான நல்ல ஒரு தமிழ் நாட்டை உருவாக்க நல்ல வெற்றியை நிச்சயமாக கடவுள் தருவார் என நம்புகிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் மு.க. ஸ்டாலின் எதிரான கருத்தை தான் பதிவு செய்து வருவார். எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த ஆட்சி நிறையும், குறையும் நிறைந்த ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம். ஏனென்றால் நல்ல வி‌ஷயம் அதிமுக பல நல்லது செய்து உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் நல்ல நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி மக்களுக்கு தேவையான பல பணிகள் செய்து உள்ளனர். இதேபோல் அவர்கள் செய்ய வேண்டிய நிறைய வி‌ஷயங்கள் செய்யாமல் உள்ளனர். அதனை நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.

    ஏனென்றால் மழை காலத்தில் தற்போது சாலை சரியாக இல்லாமல் குண்டு குழியுமாக காட்சி அளித்து உள்ளது. மேலும் நீர்நிலைகள் சரியான முறையில் தூர்வாரி தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு தண்ணீர் சரியான முறையில் சேமிக்க முடியாமல் உள்ளது. மேலும் நிர்வாக ரீதியாக செய்ய வேண்டியது பலது உள்ளது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி நிறையும் குறையும் சரி சமமாக உள்ளது.

    ஆனால் 2021 தேர்தல் மக்களாட்சியாக தமிழகத்திற்கு விடிவுகாலம் வரக்கூடிய ஆட்சியாக அமையும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10 வருடத்திற்கு முன்பு 60 வயதாகும். தற்போது இவருக்கு 70 வயது ஆகும். ஆகையால் யாராக இருந்தாலும் வயது கூடினால் உடல் நிலையில் மாற்றம் வரக்கூடும். ஆகையால் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் வருவார். தற்போது நல்ல உடல் நலமுடன் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி போலீசாரிடம் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி தொழில் செய்து வந்தார். இவர் மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் நெய்வேலி வடக்குத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 30-ந்தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.

    கடந்த 4-ந்தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் அவர் இறந்து விட்டதாகவும், அதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செல்வமுருகனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் செல்வமுருகன் சாவு குறித்து விருத்தாசலம் கிளை சிறையில் அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் விசாரணை நடத்தினார். விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என்றும் கூறி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரிக்க சென்றபோது, அங்கு ஏற்கனவே நீதிபதி விசாரணை நடத்தியதால், அவர்களை நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்து விட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்தனர். அதன்படி சம்பவத்தின் போது பணியில் இருந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் 6 பேர் நேற்று கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். தனித்தனியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிறுபாக்கம்:

    வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 30). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கீழ் ஒரத்தூரில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடரி - கீழ்ஒரத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. 

    இதில், படுகாயமடைந்த அசோக் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அசோக் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருத்தாசலம் கிளைச்சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக அவரது மனைவி பிரேமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் நெய்வேலி வடக்குத்து கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் மனைவி பிரேமா (34) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 30-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.கடந்த 4-ந் தேதி செல்வமுருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    நெய்வேலி போலீசார் அடித்து துன்புறுத்தியதால்தான் செல்வமுருகன் இறந்ததாக அவரது மனைவி பிரேமா புகார் கூறினார். அவரது சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்யும்வரை இறந்த செல்வமுருகனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக விருத்தாசலம் கிளை சிறையில் செல்வமுருகனின் இறப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஆனந்த் விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் இறப்பு குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

    கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ்நிலையத்துக்கு சென்று சம்பவத்தன்று பணியில் இருந்த போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

    அதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெய்வேலியில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று சிறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அங்கிருந்த கைதிகளிடம் செல்வமுருகனின் இறப்பு குறித்து 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரத்தில், போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகனின் மனைவி பிரேமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும், செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார். 
    விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம் புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் நெய்வேலி வடக்குத்து கிராமத்தில் உள்ள வீட்டில் மனைவி பிரேமா (34) மற்று 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விருத்தாசலம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த செல்வமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை போலீசார் கடந்த 4-ந் தேதி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் செல்வமுருகனின் மனைவி பிரேமா அதிர்ச்சியடைந்தார். தனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், போலீசார் அடித்து கொன்று விட்டதாக கூறினார். 

    இதையடுத்து செல்வமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் செல்வமுருகனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் அவரது உடலை வாங்க செல்வமுருகனின் மனைவி மற்றும் உறவினர்கள் மறுத்து விட்டனர்.

    செல்வமுருகனின் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா வழக்குபதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினார்.

    மேலும் நீதிபதி ஆனந்த் விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று செல்வமுருகனுடன் இருந்த கைதிகள் மற்றும் சிறை காவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
    விருத்தாசலம் அருகே கோவில் பூட்டை உடைத்து நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் சிறுநெசலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.

    இங்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜைகளை முடித்த பூசாரி கல்யாணசுந்தரம் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள வெண்கல நடராஜர் சிலை, பஞ்சபாத்திரங்கள், மணி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    மறுநாள் காலை பூசாரி கல்யாணசுந்தரம் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சிலை மற்றும் பொருட்கள் கொள்ளை போனது கண்டு வேப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

    இதேபோல் அருகில் உள்ள மஞ்சப்பர் கோவிலின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் புருஷோத்தமன்நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் செந்தமிழ் (வயது 16). கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. 

    இதை அவரது தாய் லட்சுமி பார்த்து கண்டித்து வந்தார். அதேபோல் சம்பவத்தன்றும் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போன் பார்த்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி அவரை கண்டித்து விட்டு ஆடு மேய்க்க சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்த போது, செந்தமிழ் வாந்தி மயக்கத்துடன் இருந்தார். இதை பார்த்து அவரிடம் தாய் லட்சுமி விசாரித்த போது, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

    உடன் அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி லட்சுமி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    திட்டக்குடி அருகே எடையூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகள் சுலோச்சனா (வயது 26). இவரும் கோவிலூரை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் (வயது 28) என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 15.9.2013 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப்பொருட்கள், வெள்ளி கொலுசு ஆகியவற்றை வரதட்சணையாக சுலோச்சனாவின் பெற்றோர் வழங்கி உள்ளனர். அப்போது மணிகண்டன் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சுலோச்சனா வீட்டார், பிறகு தருவதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்களால் வாங்கி கொடுக்கமுடியவில்லை. இதனால் மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மற்றும் நகை கேட்டு சுலோச்சனாவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சுலோச்சனா கர்ப்பிணியானார். அதன்பிறகும் வரதட்சணை கேட்டு மணிகண்டன் அவரை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சுலோச்சனா கடந்த 8.12.2016 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.
    விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரத்தில், போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார் என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). இவர் முந்திரி தொழில் செய்து வந்தார். இதற்காக நெய்வேலி வடக்குத்தில் தனது மனைவி பிரேமா (34) மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்தும் வந்தனர். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் செல்வமுருனை கைது செய்தனர். பின்னர் நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வமுருகன் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டு, செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் செல்வமுருகன் உயிரிழந்துள்ளார் என்று கூறி, அவரது உறவினர்கள் நேற்று காலை காடாம்புலியூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, செல்வ முருகனை தாக்கிய நெய்வேலி போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மற்றும் தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை முடிவு கிடைத்ததும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்களை தடுக்க கடலூரில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூர் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடைகளை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம் நேதாஜி சாலைகளில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் வியாபாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் கடலூர் முதுநகரிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நோய் பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார, வாழ்வாதார நடவடிக்கைகளை கவனிக்க வேண்டிய அவசியம் எழுந்ததால் மத்திய அரசு, 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வின்போது, வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் என்றும், தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும், ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும், அவர்கள் காட்சியின் இறுதி வரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும், ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்கள் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள் அமரும் இடம், டிக்கெட் பெறும் மையம், வாகனங்கள் நிறுத்துமிடம், தின்பண்டங்கள் வாங்கும் இடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×