என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் ஆனந்தராஜ் என்கிற ஜீவாவை (வயது 24) போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

    மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் லட்சுமணபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் கரையில் வைத்து சாராயம் விற்ற, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த காரியனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி பவுனாம்பாள்(59) என்பவரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம் அருகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகனை பார்க்க சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள வெங்காய தலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி கோமதி (வயது 51). இவர்களுடைய மகன் பிரகாஷ். இவர் திருமணமாகாத ஏக்கத்தில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கோமதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனை பார்ப்பதற்காக உறவினர் ராஜபாலன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

    அண்ணாமலைநகர் பொறியியல் கல்லூரி சாலையில் சென்ற போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், ராஜபாலன் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் பின்னால் அமர்ந்திருந்த கோமதி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கோமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் ஒரு திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்.

    எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விசாரணை முறையாக நடைபெற வில்லை என்று பிரேமா தனது கணவரின் உடலை வாங்கமறுத்து உறவினர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருத்தாசலம் கிளை சிறையில் உள்ள காவலர்கள், விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் அதிரடியாக கடலூர் முதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் நெய்வேலி டவுன்ஷிப்புக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் பிறப்பித்துள்ளார்.

    கடலூர் மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தது தொடர்பாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மத்திய சிறையில் 2-ம் நிலை காவலர் சுரேஷ் குமார். இவர் பணிமுடிந்து வெளியே வந்தபோது கைதிகள் அறை வளாகத்துக்குள் 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை வீசியதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் மந்தாரகுப்பத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு சுரேஷ்குமார் கஞ்சா சப்ளை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சுரேஷ் குமாரை சிறை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    திட்டக்குடி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    திட்டக்குடி அருகே உள்ள கோடங்குடி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் தெருமின் விளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவர் அம்பிகா தலைமையில் கோடங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பெண்களுக்கு ஆதரவாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுப்பிரமணியன், பெரியசாமி உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சாந்தி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். செல்வராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாந்தி, கடந்த 7 மாதமாக விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது வீட்டின் கதவு பூட்டப்படாமல், சாத்தப்பட்ட நிலையிலேயே இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன் பகுதியில் சாந்தி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், கணேசன், புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பிணமாக கிடந்த சாந்தியின் உடலை பார்வையிட்டனர்.

    அப்போது அவர், அரைநிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், வயிற்றில் கத்தியால் குத்தியதற்கான காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடலின் அருகே செல்போன் மற்றும் ஆண் ஒருவரது சட்டையும் கிடந்தது. இதுதவிர செருப்பு அணிந்த ஒருவர், ரத்தத்தை மிதித்தபடி வீடு முழுவதும் நடந்து சென்றதற்கான காலடித்தடமும் பதிவாகி இருந்தது. இதனால் அவரை யாரோ கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி, வெண்ணுமலையர் கோவில் வழியாக பெரிய கண்டியாங்குப்பம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் கொலையாளிகள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதற்கிடையே கடலூரில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள், சாந்தி வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கொலையாளியை விரைந்து பிடிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டார். கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் அன்பு மனைவி தமிழரசி (வயது 50). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் விஜயராகவன் (40) என்பவர், தனது அக்காள் சங்கரி என்பவருடன் சேர்ந்து 400, 700, 1000 ரூபாய் என 3 வகையான தீபாவளி பண்டு சீட்டுகள் 12 மாத தவணையில் பிடித்து வருவதாகவும், அதில் பணம் கட்டினால் சீட்டுக்கு தகுந்தாற்போல் 2 மற்றும் 4 கிராம் தங்க நாணயம், 19 வகையான மளிகை பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

    இதை நம்பிய நானும், கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 384 பேர் ரூ.34 லட்சத்து 24 ஆயிரத்து 600-ஐ விஜயராகவனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தற்போது நகையை கொடுக்கவில்லை. மேலும் நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதேபோல் கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த கோமதி என்பவர் அதே பகுதியை சேர்ந்த 94 பேரிடம் ரூ.17 லட்சம் பெற்று தீபாவளி பண்டு சீட்டுக்காக விஜயராகவனிடம் கொடுத்துள்ளார். அவர்களையும் விஜயராகவன் ஏமாற்றி விட்டார். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், அவர் தனது அக்காள் சங்கரியுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் துர்கா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஜயராகவன் தனது அக்காள் சங்கரியுடன் சேர்ந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி தமிழரசி, கோமதி உள்ளிட்டோரிடம் ரூ.51 லட்சத்து 24 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    நெல்லிக்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம மனிதர்கள் பணத்தை திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர் கடை தெருவில் பால்கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது வெளிப்புறத்தில் பூட்டு உடைந்து கடை திறந்த நிலையில் கிடந்தது. அதேபோல் அருகில் இருந்த ஜவுளிக்கடையின் பூட்டு மற்றும் கண்ணாடியும், பிரியாணி கடை, மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பேக்கரி ஆகிய கடைகளின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    மேலும் இதுபற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தவச்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த அர்ஜூன், சிறிது தூரம் ஓடி சென்று நின்றது.

    இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீசார் பார்த்த போது, கடைக்குள் வந்த ஒருவர் பணம் மற்றும் ஒரு சேலையை திருடிக்கொண்டு செல்வது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடையில் ரூ.18 ஆயிரம் மற்றும் ஒரு சேலை, பேக்கரியில் ரூ.7 ஆயிரம், பால் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    7 மாதங்களுக்கு பிறகு கடலூர் உழவர் சந்தை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கடலூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாட்டு மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது.

    மேலும் கடலூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் மக்கள், ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கடலூர் உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகள் மூடப்பட்டது.

    அதற்கு பதிலாக மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் எதிரில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதேபோல் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட், அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் செயல்பட்டது. இந்நிலையில் ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததில், அண்ணா மார்க்கெட் தவிர மற்ற மார்க்கெட்டுகள் அனைத்தும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டது. ஆனால் உழவர் சந்தை மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் எதிரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் விவசாயிகள் நலன் கருதி உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது பற்றி ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.அதன் அடிப்படையில் 11-ந் தேதி (அதாவது நேற்று) முதல் உழவர் சந்தை திறக்கப்படும் என்று அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 

    இதையடுத்து உழவர் சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை கடலூர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், பயிர்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை உழவர் சந்தையில் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு உழவர் சந்தை திறக்கப்பட்டும், பொதுமக்கள் யாரும் அங்கு காய்கறிகள், பழங்கள் வாங்க வரவில்லை. ஒருசிலர் மட்டுமே வந்து சென்றனர். இதனால் உழவர் சந்தை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறிகள், பழங்கள் அனைத்தும் விற்பனை ஆகாததால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.
    விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவரது சொந்த ஊரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம் புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் கடந்த மாதம் 30-ந்தேதி திருட்டு வழக்கில் நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளைசிறையில் அடைக்கபட்டிருந்தார். கடந்த 4-ந்தேதி இரவு செல்வமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து செல்வமுருகனின் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரது சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்யும் வேண்டும். அதுவரை இறந்த செல்வமுருகனின் உடலை வாங்க மாட்டோம் எனகூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் 7-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த வழக்கை கடலூர் மாவட்ட சி.பி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை தீவிரபடுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. துணைபோலீஸ் சூப்பிரண்டு குணவர்மன் தலைமையில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. 

    இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் சொந்த ஊரான காடாம்புலியூரில் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தற்போது வசித்து வந்த வடக்குத்து பகுதியிலும், அவரை கைது செய்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ்நிலையத்தில் உள்ள போலீசாரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
    அதனைத்தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி பணியில் இருந்த அரசு டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் விருத்தாசலம் கிளை சிறை போலீசார் மற்றும் செல்வமுருகனுடன் இருந்த கைதிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செல்வமுருகனின் மனைவி கூறுகையில் எனது கணவர் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த மனுதொடர்பாக வருகிற 18-ந் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணை முடிவை பொறுத்தே நான் எனது கணவரின் உடலை வாங்குவேன். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றார்.
    மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.
    கடலூர்:

    கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து, திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

    இதன்படி கடலூர் மாவட்டத்திலும் அரசு வழிகாட்டுதல் படி நேற்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே தியேட்டருக்குள் கிருமி நாசினி தெளித்தல், குடிநீர் வசதி, கழிவறையை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை சரி செய்தல் போன்ற பணிகளை ஊழியர்கள் செய்து, தியேட்டரை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால், 2 இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டி தடுத்து வைத்திருந்தனர். கடலூரில் 4 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் 3 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டன. இதில் கிருஷ்ணாலயா தியேட்டரில் தீபாவளி பண்டிகை வரை இலவச காட்சி அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் காலை 10 மணிக்கே தியேட்டருக்கு வரத்தொடங்கினர்.

    அவர்களுக்கு வெப்ப நிலை சோதனை செய்து, தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. டிக்கெட் கவுண்டரில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது. பின்னர் காலை 11 மணிக்கு படம் திரையிடப்பட்டது. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

    ஆனால் மாவட்டத்தில் உள்ள 22 சினிமா தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை. ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. புதிய படம் திரையிடப்படாததாலும், பராமரிப்பு பணிகள் காரணமாகவும் சில இடங்களில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. திறந்த தியேட்டர்களிலும் முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்குள் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
    கடலூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள், பழமை வாய்ந்த சாமி சிலைகள், கல்வெட்டுகள், இசைக்கருவிகள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இதனை பார்வையிட குழந்தைகளுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளி நாட்டை சேர்ந்தவர்கள் பார்வையிட ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் இலவசமாக பார்வையிடலாம். தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

    தற்போது அரசு புதிய தளர்வுகளை அறிவித்ததில், அருங்காட்சியகம் செயல்பட அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முதல் கடலூர் அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது. ஆனால் முதல் நாள் என்பதால் பார்வையாளர்கள் வரவில்லை. முன்னதாக அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள சிலைகள், பழங்கால பொருட்களை பாதுகாப்புடன் அடுக்கி வைத்திருந்தனர். பார்வையாளர்கள் வசதிக்காக சானிடைசர், வெப்ப நிலையை அறியும் வகையில் தெர்மல் ஸ்கேனரும் தயார் நிலையில் வைத்திருந்ததை காண முடிந்தது.
    ×