என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட மீன் வளத்துறை அதிகாரியை பணிசெய்யவிடாமல் தடுத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நான் நேற்று நாட்டுப்படகு மூலம் கடலூர் துறைமுகம் அடுத்த ராசாபேட்டை கடல் பகுதியில் சுமார் 3 முதல் 4 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தேன். 

    அப்போது கடலூர் துறைமுகம் அடுத்த சோனக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் முருகேசன், தேவனாம்பட்டினம் சேர்ந்த மணிமாறன் உள்ளிட்ட 12 பேர் வந்த விசைப்படகு, நான் சென்ற நாட்டுப்படகு மீது மோதுவது போல் வந்து, என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர். 

    எனவே என்னை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்அடிப்படையில் முருகேசன், மணிமாறன் உள்பட 12 பேர் மீது கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெய்வேலி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பெரியசாமி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். நெய்வேலியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் பிரிஜேஷ் (வயது 13). நெய்வேலி இந்திரா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். 

    நேற்று வீட்டில் இருந்த பிரிஜேஷ் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தபகுதியில் இடி-மின்னல் சத்தம் கேட்டது. இதைகேட்ட அவனது தாய் சுகுணா இடி-மின்னல் ஏற்படும்போது கம்யூட்டரை அணைக்குமாறு கூறி, மகனை கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த பிரிஜேஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையம் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கூடுதல் விலைக்கு, அதாவது அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

    இது தவிர கூடுதல் நேரம் கடையை திறந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து நேற்று கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெயக்குமார் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜசிங் தலைமையிலான போலீசார் இரவு 10 மணிக்கு அந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மதுபாட்டில்கள் வாங்குவது போல் நடித்தும் போலீசார் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து கடை திறப்பு நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தொகை எவ்வளவு? அதை விட கூடுதலாக பணம் இருப்பு உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்தனர்.நள்ளிரவு 1.30 மணி வரை நடந்த இந்த சோதனையில் 2 கடைகளிலும் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தவிர டாஸ்மாக் கடை ஊழியர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர்களிடம் இருந்து இருப்பு விவரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச்சென்றனர். இருப்பினும் டாஸ்மாக் கடையில் நடந்த இந்த சோதனையால் கடலூர் பஸ் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பீகார் மாநிலத்தில் இருந்து என்.எல்.சி. வந்த 2 பேர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த டாக்டர், சிதம்பரத்தை சேர்ந்த மருந்தாளுனர், புவனகிரியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஆகியோருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 11 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேருக்கும் நோய் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 911 ஆக உயர்ந்தது.

    நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 389 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 39 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இது வரை 23 ஆயிரத்து 428 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இருப்பினும் இது வரை 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பாதித்த 171 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 37 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 462 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2012-ம் ஆண்டு பணியாற்றிய பருவ கால ஊழியர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும். இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் , உதவி மேலாளர், துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கணினி பிரிவு ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் உத்திரகுமார், ரமேஷ், நாகப்பன், துணை செயலாளர்கள் செங்குட்டுவன், தில்லைகோவிந்தன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மாநில துணை தலைவர் கருப்பையன், மாவட்ட தலைவர் பழனிவேல், மண்டல செயலாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். முன்னதாக கோரிக்கை விளக்க வாயிற்கூட்டத்தையும் நடத்தினர்.

    வேப்பூர் அருகே பட்டாசு வெடித்துச் சிதறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி அஞ்சம்மாள். இவர்களுக்கு கார்த்திகா(வயது 5) என்ற மகள் இருந்தாள். சரவணன் வெளிநாட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அஞ்சம்மாள் தனது மகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அஞ்சம்மாள் தனது மகளை வீட்டில் விட்டு விட்டு அருகிலுள்ள வயலுக்கு சென்றார்.

    வீட்டில் இருந்த கார்த்திகா, தீபாவளி பண்டிகையை கொண்டாட வாங்கி வைத்திருந்த பட்டாசு அட்டை பெட்டியை திறந்து, அதில் இருந்த மத்தாப்பு தீக்குச்சியை பற்ற வைத்தாள். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அட்டைபெட்டியில் இருந்த பட்டாசுகள் மீது பட்டு, படபடவென வெடித்துச் சிதறியது.

    இதில் பலத்த தீக்காயமடைந்த சிறுமி வலியால் அலறி துடித்தாள். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு சிறுமி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கார்த்திகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெய்வேலியில் கன்வேயர் பெல்டில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவத்தில் என்.எல்.சி. அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    நெய்வேலி:

    சேலம் அருகே உள்ள கெங்கைவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து, 2-வது அனல்மின் நிலையம் 6-வது யூனிட்டில் வேலைபார்த்து வந்தார்.

    கடந்த 16-ந் தேதி இரவு 2-வது அனல் மின்நிலைய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்டு பகுதியில் சக்திவேல் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் கன்வேயர் பெல்டில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என்.எல்.சி. உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்வெயர் பெல்டில் நிலக்கரியை சுமந்துசெல்லும் இரும்பு ரோலர்களை சரிபார்த்தபோது, சக்திவேல் இதில் சிக்கி இறந்ததாக தெரியவந்தது.

    இதுதொடர்பாக 2-ம் அனல் மின்நிலைய பாய்லர் பிரிவு துணைபொதுமேலாளர் ராமலிங்கம், துணை முதன்மை பொறியாளர் எழிலரசன் ஆகியோரை என்.எல்.சி. நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

    சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள சில மருந்துக்கடைகளில், சிலர் கிளீனிக் அமைத்து, எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நகர பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது வடக்கு வடுக தெருவில் உள்ள ஒரு மருந்துக்கடையின் உள்பகுதியில் கிளீனிக் அமைத்து, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிதம்பரம் விபீஷ்ணபுரத்தை சேர்ந்த திருஞானம்(வயது 63) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த திருஞானத்தை போலீசார் கைது செய்ததோடு, கிளீனிக்கில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு படித்து விட்டு சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள ஒரு மருந்துக்கடையில் கிளீனிக் அமைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சங்கர்(44) என்பவரையும், சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். மேலும் கிளீனிக்கில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்த முந்திரி வியாபாரியான செல்வ முருகனை ஒரு திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதான அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.

    செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.  சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். மேலும் சில வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.  ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்ததற்கான ஆதார வீடியோ வெளியிட்டுள்ளேன்.

    செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு முதல் நாளே நகை மீட்கப்பட்டுள்ளது.  செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வந்தவர்.

    செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் என சில ஆவணங்கள் வெளியிட்டுள்ளேன். முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்த செல்வமுருகன் மீது நகை பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். செல்வமுருகனை போலீசார் தாக்கியதற்கு நேரடி சாட்சிகள் இருக்கின்றனர்.

    அக்டோபர் 29-ந்தேதி போலீசாருடன் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதார வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

    வளர்ந்து வந்த தொழில் அதிபர் ஒருவரை வழிப்பறி திருடனாக சித்தரித்துள்ளனர். புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்தது மட்டும் போதாது. விருத்தாசலம் சிறையில் உயிரிழந்த செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே வேல்முருகன் வெளியிட்டுள்ள ஆதாரங்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
    நெய்வேலி அனல்மின்நிலையத்தில் கன்வேயர் பெல்டில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    சேலம் அருகே உள்ள கெங்கைவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து, 2-வது அனல்மின் நிலையம் 6-வது யூனிட்டில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று இரவு 2-வது அனல் மின்நிலைய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்டு பகுதியில் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் கன்வேயர் பெல்டில் சிக்கினார். இதனால் அவர்  கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சக்திவேல் பெல்ட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த என்.எல்.சி. உயர் அதிகாரிகளும் வந்தனர். இறந்து போன சக்திவேல் உடல் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள வடக்கு பிச்சாவரம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் பரத் (வயது 16). இவன் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை இவன் கிராமத்தில் நண்பர் களுடன் விளையாடி விட்டு கை, கால்களை கழுவுவதற்காக வீட்டின் அருகில் உள்ள இறால் குட்டைக்கு சென்றுள்ளான்.

    இறால் குட்டையில் இறங்கி கை, கால்களை கழுவ முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக வழுக்கி குட்டைக்குள் விழுந்து விட்டான். அப்போது அங்கிருந்த மின்மோட்டாரில் அவனது கை பட்டது. இதில் மின்சாரம் அவனை தாக்கியது. இதனால் அவன்அபாய குரல் எழுப்பினான். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று அவனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி ராஜ்குமார் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலியில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    நெய்வேலி வட்டம் 21 நாவலர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 25). டிரைவரான இவரும் நெய்வேலி வட்டம் 4 சி.ஆர். காலனியை சேர்ந்த குமார் மகள் பவித்ரா (24) என்பவரும் காதலித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் ஸ்டீபன்ராஜ் கடந்த சில மாதங்களாக பவித்ராவிடம் உனது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரதட்சணை பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பவித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அதன்பிறகு ஸ்டீபன்ராஜ் கடந்த 7-ந்தேதி மாமனார் வீட்டுக்கு சென்று, பவித்ராவை சமாதானம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பவித்ரா மர்மமான முறையில் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தாய் கலைமணி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் எனது மகளின் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

    அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து, வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதோடு, ஸ்டீபன்ராஜையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மர்மமான முறையில் இறந்த பவித்ராவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×