என் மலர்
மகாராஷ்டிரா
- பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
- கத்தி, இரும்புச் சங்கிலி, காண்டம் பாக்கெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் கோட்டி என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. அப்போது கத்திகள், இரும்புச் சங்கிலிகள், சைக்கிள் சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள், சீட்டுக்கட்டுகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையறிந்த அந்தப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக, துணை முதல்வர் கூறுகையில், மாணவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும், பள்ளி உள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபோல் பல நாட்கள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மாணவர்களின் தவறான நடத்தை மட்டுமின்றி சமூக ஊடகங்களில் காணப்படும் தீய உள்ளடக்கங்களும், தவறான நட்பு வட்டங்களின் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
- நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளார்.
- வழக்கு நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியின் ஆடம்பரமான இல்லமான ஆன்டிலியா, நாட்டின் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாகும். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பிறகு 2-வது மிக விலையுயர்ந்ததாக திகழம் இந்த வீடு ரூ.15,000 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் ஆச்சரியப்பட்ட இந்த வீடு தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் அதன் ஆடம்பர வசதிகள் குறித்தோ வீட்டின் உரிமையாளர்கள் குறித்தோ அல்ல... ஆம் சமீபத்தில் வக்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அது சட்டமாகியுள்ளது. அந்த சட்டத்தின் படி, வக்பு வாரியத்தின் சொத்தை தனியார் பயன்பாட்டிற்கு விற்க முடியாது. இதற்கும், அந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தம் என்று தானே எண்ணத்தோன்றுகிறது.
மும்பையின் பரேட் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான வீடான ஆன்டிலியா, வக்பு வாரியத்தின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டில் வக்பு வாரியத்திடமிருந்து நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளார்.

மேலும், நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக் கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்கியுள்ளார். ஆனால் இந்த இடம் விற்பனையில் அப்படி இல்லை. ஏனெனில் அந்த நிலம் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, வக்பு சட்டம் அமலாகியுள்ளதால் இது அம்பானிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு அம்பானி குடும்பத்திற்கு எதிராக வழங்கினால், அவர்கள் வீட்டை காலி செய்ய வேண்டியிருக்கும்.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
- இந்திய பங்குச் சந்தை இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் இன்று கடும் ஆட்டம் கண்டன. அமெரிக்கா முதல் இந்திய பங்கு சந்தை வரை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜெர்மனி பங்குச் சந்தை 10 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை இன்று கடும் சரிவை சந்தித்தன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,364.69 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
மதியம் ஒரு மணி வரை சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இறுதியாக 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 73,403.99 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 71,425.01 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போல், இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று தொடக்கத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது.
- அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை.
வக்பு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, பாஜக இப்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தை தங்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயல்வதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் வக்பு வாரியத்தை விட கத்தோலிக்க திருச்சபை இந்தியாவில் அதிக நிலங்கங்கள் வைத்துள்ளதாக கட்டுரை ஒன்று வெளியானது.
இதை குறிப்பிட்டு பேசிய உத்தவ் தாக்கரே, " பாஜக 45-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வேளையில், ராமரின் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும்.
வக்பு சட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டமாக கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தின் மீதும் கண் வைப்பது இருக்கும். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அவற்றின் முதன்மையான நிலங்களை வழங்குவார்கள். அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை. அவர்கள் அதைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர். அனைவரும் கண்களைத் திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
- வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார்.
மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார், ஆனால் திடீரென்று அவரது முகம் வெளிறிப்போய், மயக்கமுற்று கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். வர்ஷா மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, வர்ஷாவுக்கு எட்டு வயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளாக அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தார் என்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- மசூதி அருகே குண்டுவெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- பாஜக தலைவர் பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்டோர் மீது விசாரணை நடந்து வந்தது.
பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், இதனை விசாரிக்கும் NIA சிறப்பு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட இருந்த நிலையில் நீதிபதி ஏ.கே.ரோஹதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே செப்டம்பர் 29, 2008 அன்று மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் பாஜக தலைவர் பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்து வந்தது. பின்னர் 2011 இல் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே. லஹோட்டி மாவட்ட நீதிபதிகளின் வருடாந்திர பொது இடமாற்ற நடவடிக்கையின்கீழ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஹோட்டி மற்றும் பிற நீதிபதிகளுக்கான இடமாற்ற உத்தரவு, மும்பை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலால் பிறப்பிக்கப்பட்டது.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கடைசி விசாரணையில், நீதிபதி லஹோட்டி, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள வாதங்களை முடிக்குமாறு அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்புக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 16 இல் அவர் தீர்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இடமேற்றம் செய்யப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீதிபதியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 17 வருடத்தில் இந்த வழக்கு விசாரணையில் 5 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஞ்சனா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார்.
- மோமோஸ் விற்கும் தெருக் கடையைத் தொடங்க விரும்பினார் .
மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் கல்யாண் நகரின் அம்பிவாலி பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சனா பதேகர் (வயது 60). கடந்த மார்ச் மார்ச் 20 அன்று, ரஞ்சனா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அக்பர் முகமது ஷேக் சந்த் (30) என்பவரால் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்தன்று, அக்பர், ரஞ்சனாவின் வீட்டுக் கதவைத் தட்டி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். ரஞ்சனா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார்.அவர் தனியாக இருப்பதை அறிந்த அக்பர் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி வால்யூமை சத்தமாக வைத்துவிட்டு, ரஞ்சனாவின் கழுத்தை நெரித்து அக்பர் கொலை செய்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க காதணிகளுடன் அவர் தப்பிச் சென்றார்
அக்பர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தர்வாடி சிறையில் இருந்து 8 மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டவர். அன்றிலிருந்து அவர் வேலையில்லாமல் இருந்தார்.
மோமோஸ் விற்கும் தெருக் கடையைத் தொடங்க விரும்பினார் விரும்பிய அவர் இந்த ரஞ்சனாவை கொலை செய்து நகைகளுடன் தப்பியது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அட்டாலி பகுதியில் அக்பர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாகவும் கடக்பாடா காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அமர்நாத் வாக்மோட் தெரிவித்தார்.
- அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.
- இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
மகாராஷ்டிராவில் கணவனை 7000க்கும் மேற்பட்ட கிராமங்கள் விதவைகளுக்கு எதிரான பாகுபாடு, ஒடுக்குமுறைகள் மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளன.
மூடநம்பிக்கைகள் மிகுந்த இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்த இந்தப் பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் துன்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவும் செய்தன.
இந்நிலையில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளைக் கூட்டி அங்குள்ள கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்களை அகற்றுவதாக அறிவித்துள்ளன.
இந்த மாற்றம் 2022 ஆம் ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தின் ஹெர்வாட் கிராமத்தில் இருந்து தொடங்கியது. வளையல்களை உடைத்தல், தாலியை அகற்றுதல், வண்ண ஆடைகளை அணிய தடை போன்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றும்படி விதவைகளை கட்டாயப்படுத்தும் அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களை கணபதி பூஜையில் ஈடுபடுத்தி, விழாக்களில் கொடியேற்றுதல், ஹல்தி - குங்குமம் சூட்டுதல் போன்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்க வைத்தல் போன்றவையும் கிராமத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊக்கமளிக்கும் முடிவு ஒரு பிரச்சார வடிவத்தை எடுத்து படிப்படியாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்த இயக்கத்தில் இணைந்தன. கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது எனவும், இதற்காக கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.

இந்த பிரச்சாரம் மகாராஷ்டிராவின் சாங்லி, சதாரா, கோலாப்பூர், நாசிக், பீட், உஸ்மானாபாத் போன்ற மாவட்டங்களில் வேகமாகப் பரவியது.
இப்போது விதவைகள் பண்டிகைகளில் பங்கேற்கவும், வண்ணமயமான ஆடைகளை அணியவும், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் திருமண விழாக்களுக்கு அழைக்கப்படுகிறார்கள், மேலும் பல கிராமங்களில் விதவைகள் மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய முகமாக சமூக ஆர்வலர் பிரமோத் ஜின்ஜாடே திகழ்கிறார். "ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு. கணவரின் மரணத்திற்குப் பிறகு அவளுடைய வாழ்க்கை முடிவடைவதில்லை, ஆனால் அது ஒரு புதிய தொடக்கமாகும்" என்று அவர் கூறுகிறார்.
பல கிராமங்களில் இன்னும் மாற்றம் தேவை என்றும், ஆனால் இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
- தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- கணவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆண் குழந்தை பிறக்காததற்காக தனது 25 வயது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் வசிப்பவர் 33 வயதான விஷால் கவாய். இவர் தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனது மனைவியின் பெற்றோரிடம் இருந்து விஷால் கவாய் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே தர்ஷனாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்த பிறகு அவரது துன்புறுத்தல் மோசமடைந்தது. ஆண் குழந்தையை பெற்றெடுக்காததற்காக விஷால் தர்ஷனாவை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வீட்டின் கூரையில் தர்ஷனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 80 (வரதட்சணை மரணம்), 115(2) (காயப்படுத்துதல்) மற்றும் 352 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கணவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது.
- மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும்.
மும்பை:
இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி உள்ளது.
அதேநேரத்தில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் கூறி உள்ளது.
வெளியிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும். அவர் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மல்கோத்ரா கையெழுத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சள் அறுவடை செய்ய வயலுக்கு செல்லும் வழியில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- மேலும் 3 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் மஞ்சள் அறுவடை செய்ய வயலுக்கு செல்லும் வழியில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
நான்டெட் மாவட்டம் அலேகான் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பெண்கள் சென்றுகொண்டுந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், கிணற்றிலிருந்த அதிக அளவு தண்ணீரை வெளியேற்றினர்.
அதனபின் ஏழு பெண்களின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. மேலும் 3 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்த அனைவரும் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள வாஸ்மத் தாலுகாவின் கீழ் உள்ள குஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
- Sensex tumbles 930.67 points to close at 75,364.69; Nifty declines 345.65 points to 22,904.45
- நிஃப்டி நேற்று 166.65 புள்ளிகளும், இன்று 345.65 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நிறைவு.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.
அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக நேற்றும் இன்றும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்று (புதன்கிழமை) சென்செக்ஸ் 322.08 புள்ளிகளும், நிஃப்டி 166.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,295.36 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 130 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 76,258.12
புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இறுதியாக 930.67 புள்ளிகள் சரிவை சந்தித்து 75,364.69 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 23,250.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 60 புள்ளிகளில் சரிந்து 23,190.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 23,214.70 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 22,857.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 345.65 புள்ளிகள் சரிந்து 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.






