என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • சூதாட்டக்காரர்களிடம் இருந்து பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
    • மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு ஏன் தடை செய்யவில்லை என பிரதமருக்கு பாகேல் கேள்வி எழுப்பினார்.

    ஸ்ரீநகர்:

    சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் மகாதேவ சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பணம் கைமாறி உள்ளதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

    மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு தற்போது வரை ஏன் தடை செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே, அரசியலுக்காக மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கூறுகையில், "அவர்கள் (பா.ஜ.க.) பயத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஒருநாள் அவர்களும் அதேபோல் நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகம் வேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கவேண்டும். எதிர்க்கட்சிகளை அழிப்பதால் நாட்டைப் பலப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.

    • பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
    • கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.

    சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.

    மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.

    LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

    • எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்
    • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் வீரர்கள் (Pakistan Rangers) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

    நேற்றிரவு 8 மணியில் இருந்து நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தனர். இருந்தபோதிலும் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், நான்கு பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

    பாகிஸ்தான் வீரர்கள் அரினியா, ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ஐந்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் குப்வாரா மாவட்டம் மச்சில செக்டாரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

    இதற்கிடையே எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி, உடுருவல் திட்டத்தை முறியடித்தனர்.

    சுமார் இரண்டு மூன்று வருடத்திற்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்றிரவு 8 மணியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக எல்லையோர மக்கள் தெரிவித்தனர்.

    • ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    ஏற்கனவே, நேபாளத்தில் நேற்று காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், நேற்று மாலை 5.18 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இதில், சில வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதியாக இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகின.

    • வாகனங்களின் சோதனை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்து உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • காவல் துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் ஆகியோர் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா  நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இந்நிலையில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சுற்றிலும், போலீஸார் மற்றும் துணை ராணுவப்படைகள் உட்பட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் இடத்தை சுற்றி வாகனங்களின் சோதனை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்து உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவரின் காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் காவல் துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் ஆகியோர் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மோரியா மக்பூல் மற்றும் அப்ரார் (எ)ஜாலீம் பாரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டக்கொல்லப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் அப்ரார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன் ஆவான்.

    கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக இருந்த சஞ்சய் சர்மா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மாநில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய அப்ராரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் இன்று அவன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    • போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார்.
    • யாசர் நசீர் கைது செய்யப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண் அடையுமாறு உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த நபர், எல்லை கட்டுப்பாட்டு கோடு நோக்கி ஓடத்தொடங்கினர். அவரை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.

    அவர் பெயர் யாசர் நசீர் என்றும், உள்ளூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார். கடத்துவதற்காக அவர் வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. யாசர் நசீர் கைது செய்யப்பட்டார். குண்டடிபட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • கைது நடவடிக்கையில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்
    • குற்றவாளிகளிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணமும் பெற்றுள்ளார்

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத குற்றவாளியை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உதவியதாகவும், வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரரை சிக்க வைத்ததாகவும், டிஎஸ்பி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட துணை கண்காணிப்பாளர் ஷேக் ஆதில் முஷ்டாக்கை, போலீசார் ஆறுநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட பயங்கரவாத குற்றவாளியின் செல்போனை ஆராய்ந்ததில், ஆதில் முஷ்டாக் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. சட்டத்தை எப்படி மீறுவது என்பது குறித்து அவருக்கு வழிகாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ''டெலிகிராம் செயலி மூலம் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்துள்ளார். குறைந்தபட்சம் 40 உரையாடல்கள் இருவரிடையே நிகழ்ந்துள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவது, சட்ட உதவி ஆகியவை குறித்து தெரிவித்துள்ளார்'' என சீனியர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

    ஆதில் முஷ்டாக் குற்றவாளிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். முஜாமில் ஜாஹூர் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இவர் போலி ஆவணங்கள் மூலம் லக்ஷர் நிதியை நிர்வகிக்க வங்கி கணக்கை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முஜாமில் ஜாஹூர் கைது செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன், அவன் பயங்கரவாத நிதி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தது டிஎஸ்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அனந்த்நாக் சண்டைக்குப்பின் பயங்கரவாதிகளை தேடும்பணி தீவிரம்
    • உயிரிழந்த பயங்கரவாதி யார்? என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை

    ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டம் ஹர்லாங்காவில் உள்ள உரி பகுதியில் ராணுவ வீரர்கள் பாரமுல்லா போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது குறித்து அடையாம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு.
    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவை வழிநடத்துபவர் மற்றும் உயர் அதிகாரி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.

    கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தொன்சக் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முசாமில் ஆகியோர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்களின் உயிரை இழந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து துப்பாக்கி சூடு நடத்தியது.

     

    இந்திய ராணுவத்தின் 19 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவுக்கு மன்பிரீத் சிங் வழிநடத்தும் அதிகாரியாக இருந்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில். இந்த பிரிவு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வருகிறது.

    உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரியின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு விட்டன. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

    இதில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று அதிகாரிகள் பலத்த காயமுற்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்
    • தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது

    ஜம்மு-காஷ்மீர்,  ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீர மரணம அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உள்ளபட மூன்று பேர் காயம் அடைந்தனர்.

    அத்துடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த 21-வது ராணுவ மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் சண்டையில் உயிரிழந்தது. தன்னை வழிநடுத்துபவரை பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டது.

    பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சண்டை நீடித்து வரும் நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
    • இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது. இவன் கடந்த ஜனவரி 1-ந் தேதி காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்ரி கிராமத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.

    தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதி ரியாஸ் அகமதுவை இந்தியா தீவிரமாக தேடி வந்தது.

    இந்நிலையில் தீவிரவாதி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. தீவிரவாதி ரியாஸ் அகமது முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா முகாமில் செயல்பட்டான். சமீபத்தில் ராவல் கோட்டில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான். மேலும் அந்த அமைப்பின் நிதியையும் கவனித்து வந்துள்ளான்.

    இந்த ஆண்டில் எல்லைக்கு வெளியே இருந்து செயல்படும் உயர்மட்ட பயங்கரவாத தளபதி கொல்லப்பட்ட 4-வது சம்பவம் இதுவாகும்.

    ×