என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாத குற்றவாளியுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீர் டி.எஸ்.பி. கைது
    X

    பயங்கரவாத குற்றவாளியுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீர் டி.எஸ்.பி. கைது

    • கைது நடவடிக்கையில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்
    • குற்றவாளிகளிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணமும் பெற்றுள்ளார்

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத குற்றவாளியை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உதவியதாகவும், வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரரை சிக்க வைத்ததாகவும், டிஎஸ்பி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட துணை கண்காணிப்பாளர் ஷேக் ஆதில் முஷ்டாக்கை, போலீசார் ஆறுநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட பயங்கரவாத குற்றவாளியின் செல்போனை ஆராய்ந்ததில், ஆதில் முஷ்டாக் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. சட்டத்தை எப்படி மீறுவது என்பது குறித்து அவருக்கு வழிகாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ''டெலிகிராம் செயலி மூலம் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்துள்ளார். குறைந்தபட்சம் 40 உரையாடல்கள் இருவரிடையே நிகழ்ந்துள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவது, சட்ட உதவி ஆகியவை குறித்து தெரிவித்துள்ளார்'' என சீனியர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

    ஆதில் முஷ்டாக் குற்றவாளிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். முஜாமில் ஜாஹூர் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இவர் போலி ஆவணங்கள் மூலம் லக்ஷர் நிதியை நிர்வகிக்க வங்கி கணக்கை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முஜாமில் ஜாஹூர் கைது செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன், அவன் பயங்கரவாத நிதி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தது டிஎஸ்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×