என் மலர்tooltip icon

    இந்தியா

    • பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது.
    • ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்பவர்கள் பயோமெட்ரிக் முறைப்படி தங்கள் கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ரேசன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் ரேகை வைக்க வேண்டும்.

    ஏற்கனவே கைரேகைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களின் ரேகை அதனுடன் ஒத்திருந்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

    ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர் புதுப்பிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

    ரேசன் கடை ஊழியர்கள் கைரேகை பொருந்தாதவர்களிடம் நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் உங்கள் கைரேகையை அப்டேட் செய்யவில்லை. எனவே பொருட்கள் வாங்க முடியாது என்கிறார்கள்.

    ஆனால் விபரம் புரியாத சாதாரண மக்கள் 'சார். என்னிடம் ஆதார்கார்டும் இருக்கிறது. அதில் என் கைரேகை தான் இருக்கிறது' என்று சொல்கிறார்கள்.

    அதற்கு ரேசன் ஊழியர்களும் நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை கேட்டதும் எதுவும் புரியாமல் சினிமாவில் வடிவேலு 'அப்ரண்டி ஷிப்' என்பதை 'அப்ரசண்டிகள்' என்பதை போல் ஏதோ அப்ரடிக்காம்... ஒண்ணும் புரியலை என்றபடி பரிதாபமாக திரும்பி செல்கிறார்கள்.

    விருகம்பாக்கம் மின் மயானம் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருள் வாங்க சென்றவர் அவரது ரேகை ஒத்துப்போகவில்லை என்றதும் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து சென்றுள்ளார். அவரது ரேகையும் ஒத்துப்போகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றார்கள். தினசரி வேலைக்கு செல்லும் அவர்கள் கூறியதாவது:-

    ஆதார் கார்டில் கைரேகையை அப்டேட் செய்ய கோயம்பேட்டில் இருக்கும் ஆதார் தலைமை அலுவலகம் அல்லது போஸ்ட் ஆபீஸ்களுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

    கோயம்பேட்டுக்கு சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருந்தாலும் முடியாமல் செல்பவர்களும் உண்டு. வேலைக்கு லீவு போட முடியாது என்பதால் தனியார் நெட்சென்டர்களுக்கு சென்று முன்கூட்டி நேரம் முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவரது ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய ரூ.1000 செலவாகும்.

    எங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தான் நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மாதத்திற்குரிய பொருட்கள் எதையும் வாங்க முடியவில்லை.

    பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. இதற்காக அரசு தரும் மானிய தொகையை ஆதார் கார்டு அப்டேட் செய்ய செலவழிக்க வேண்டி இருப்பதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

    * தமிழகம், புதுவை காரைக்காலில் 28-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.

    * தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    * சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும்.
    • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

    இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும்.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி. அதனால் தான் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. அதற்கு காரணமான பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பேசினார்.

    • 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
    • இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

    தமிழக கோவில்களில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-

    திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 4 கோவில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது விபத்தின் காரணமாக அல்ல. உடல்நலக்குறைவின் காரணமாக நடைபெற்ற சம்பவம் ஆகும்.

    தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான்கோவில்களில் அதிகமாக கூட்டம் கூடுகின்ற கோவில்களுக்கு மருத்துவ வசதி தேவை என்ற நிலையிலே இரண்டே இரண்டு கோவில்களில் இருந்த மருத்துவ வசதியை 17 கோவில்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம்.

    கடந்த 2023-ம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று ஒரு நீதிபதி நோய்வாய் பட்டு மயங்கிய சூழ்நிலையில் அன்றைக்கு அந்த நீதிபதி உயிரை காப்பாற்றியது அங்கு மருத்துவ முகாமில் இருந்த மருத்துவர்கள் தான்.

    இந்த 17 மருத்துவமனைகளில் இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

    வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்து, 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது, இதற்கெல்லாம் முதலமைச்சர் எடுத்த பெரும் முயற்சிகள் தான் காரணம். சுமார் ரூ. 1711 கோடி மதிப்பில் பெருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம்.
    • ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

    சென்னை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்று கூறினார்.

    இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி அமைய பல்வேறு நிபந்தனைகளை இ.பி.எஸ். விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    * தமிழகத்தில் 2026 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.

    * தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அ.தி.மு.க.தான் எடுக்கும்.

    * ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது.

    * அண்ணாமலையை பா.ஜ.க. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.
    • தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக நேற்று தகவல் வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.

    மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

    சென்னையில் 8-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்த கொள்ளையன் நேற்று நள்ளிரவு தரமணி ரெயில் நிலையம் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    இந்நிலையில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்து காலை 6 மணி முதல் 7 வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

    * தாம்பரத்தில் இதேபோன்று நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் உடனடியாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தது.

    * கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் ஏறுபவர்கள் குறித்து கண்காணிக்குமாறு முன்பே ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கூறி இருந்தோம்.

    * அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை. அதுவும் ஒரு ஆதாரமானது.

    * ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த கொள்ளையர்களை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    * செயின் பறிப்பு கொள்ளையர்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.

    * நேற்று பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது மும்பையில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    * ஒருவன் முந்தைய நாள் இரவும், மற்ற இருவரும் அடுத்த நாள் அதிகாலையும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    * ஒருவன் முன்னதாக வந்து பைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்த பின்னர் மற்ற இருவர் அடுத்த நாள் வந்து கைவரிசை.

    * கடந்தாண்டு சென்னையில் நடந்த 34 செயின் பறிப்பு சம்பவங்களில் 33-ல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    * நேற்று நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் இரானி கொள்ளையர்கள். இவர்கள் இதற்கு முன்பு சென்னையில் கொள்ளைகளை அரங்கேற்றினரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    * சென்னையில் கொள்ளையன் சாலையில் பைக் ஓட்டிய வேகத்தை பார்க்கும்போது இதற்கு முன்பே வந்ததுபோல் தான் உள்ளது.

    * கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

    * அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான்.
    • எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும்.

    சென்னை:

    டெல்லியில் அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக சட்டசபையில் பேசும்பொருளாக மாறி உள்ளது. சட்டசபையில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,

    அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம் என்று பேசினார்.

    இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது நீங்கள் (அதிமுக) தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என கூறினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பதில் அளிக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும் என்று சினிமா படபாணியில் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். 

    • சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    • கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களை கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களின் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கடி நடப்பதால் விமான பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

    சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடு பாதையின் மீது பறவை கூட்டம் வட்டமிட்டபடியே இருப்பதால் அடிக்கடி இந்த சம்பவம் நடக்கிறது.

    நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களில் பறவைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், திருனந்தபுரம் விமான நிலையத்திற்கு அருகில் பறவைகளின் அடர்த்தி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக விமானிகள் கூறுகின்றனர். பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று விமான நிலைய ஆணையம் பல முறை எச்சரித்துள்ளது.

    பறவைகள் விமானங்களின் மீது மோதுவதை தடுக்க பறவைகளை துரத்துபவர்களை விமானநிலையம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துகிறது. அவர்கள் விமானம் வரும் போது பறவைகளை பயமுறுத்துவதற்கு உரத்த ஒலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த ஒலிகளுக்கு பறவைகள் பழகிவிட்டதால் அவை அஞ்சுவதில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    பறவைகள் அதிகளவில் வருவதற்கு காரணம் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் குப்பை குவியல் இருப்பதே காரணம் என்றும், அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் அரசுக்கு ஏறுகனவே கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.

    விமான நிலைய சுற்றுச்சுவர்களுக்கு அருகில் திறந்தவெளிகள் மற்றும் அதன் அருகில் செயல்படும் இறைச்சி கடை கழிவுகள் கொட்டப்படும் கிடங்குகள் ஆகியவையே பறவைகள் இந்த பகுதிக்கு அதிகமாக வருவதற்கு காரணமாக இருக்கின்றன.

    கழுகு, காகம், கொக்கு, புறா, ஆந்தை உள்ளிட்ட பறவைகள் இறைச்சி கழிவுகளை உண்பதற்காக விமான நிலைய பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு பறவைகள் அதிகளவில் வருவது விமானங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குகிறது.

    விமான போக்குவரத்து விதிமுறைகளின் படி ஒவ்வொரு பத்தாயிரம் விமானங்களுக்கும் ஒரு பறவை மோதல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 பறவை மோதல் சம்பவங்கள்நடக்கின்றன.

    இது பல நிலை விசாரணையை தூண்டுவதால், அதனை தவிர்க்க விமானிகள் பெரும்பாலும் பறவை மோதல்களை அதிகாரபூர்வமாக புகாரளிக்க முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விமானத்தின் மீது பறவை மோதல் என்பது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

    மேலும் இதன் காரணமாக விபத்து எதுவும் நடந்தால் பேரழிவுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் குழு கூட்டத்தில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகள் மோதினால் விமானத்தின் இயந்திரம் செயலிழந்து தீவிபத்து ஏற்படலாம்.

    மேலும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகளை சேதப்படுத்தும் என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். பறவைகள் மோதுவது பயணிகளுக்கு மட்டுமல்ல விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும் ஆபத்தானது. ஆகவே இந்த பிரச்சனையை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.

    • நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
    • சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

    விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.

    அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அலகாபாத் நீதிபதி வழங்கிய சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

     நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறியதாவது:-

    போதிய sensitivity இல்லாமல் எழுதப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.

    நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

    இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது.

    சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது. அலகாபாத் நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துகிறோம் என்று கூறினர்.

    • நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது.
    • ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் கணவாய், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இன்று காலை 6:30 மணிக்கு மேல் புனேவில் இருந்து பெருந்துறைக்கு செந்தில் என்ற டிரைவர் டேங்கர் லாரியில் கச்சா எண்ணை பாராம் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர்லாரி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி வண்டி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளானது.

    இதில் டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது. இந்த டேங்கர் லாரியை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


    உடனே அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட செந்தில்குமாரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கவிழ்ந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால், தொப்பூர் கணவாய் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    • கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.
    • குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவதற்கான நுண்ணறிவுகள் மற்றும் உத்திகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் ஐ.ஏ.எஸ்., ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால் ஐ.பி.எஸ்., கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாரம்பரிய விளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது. கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரித் தாளாளர் ப. வெங்கடேஷ் ராஜா, அர்ப்பணிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட தேர்வுத் தயாரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தலைமை உரையை நிகழ்த்தினார்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப், ஐ.ஏ.எஸ்., பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

    ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், ஐ.பி.எஸ்., தலைமைத்துவம் மற்றும் சிவில் சேவைகளில் சட்ட அமலாக்கத்தின் முக்கியப் பங்கு குறித்து பேசி ஊக்கப்படுத்தினார்.

    கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன், வெற்றிக்கான நடைமுறை உத்திகளைக் கொண்டு மாணவர்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் ஒரு ஊடாடும் கேள்வி பதில் அமர்வை நடத்தினார்.


    நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, கருத்தரங்கம் நிறைவு பெற்றது. பங்கேற்பாளர்கள் குடிமைப் பணித் தேர்வின் சவால்களை எதிர்கொள்ள ஒரு மிகச் சிறப்பான முன்னெடுப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது.

    ×